'கனிகளை உண்பது எவராயினும் விதையை விதைப்பது நாமாயிருப்போம்’ என்று அழகிய வாசகங்களால் அலங்கரித்து நின்று கை கூப்பி நம்மை வரவேற்கிறது திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் இயல்வாகை நாற்றுப் பண்ணை.
''மரங்களை இழந்ததால் எத்தனையோ நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம். பரந்துகிடக்கும் நிலம் எங்கும் எதற்கும் உதவாத முட்செடிகளின் ஆக்கிரமிப்பு. சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் இந்த முட்செடிகளுக்குப் பதிலாக, பல நன்மைகளை தரக்கூடிய வேறு சில மரங்களை வளர்த்தால் வறண்ட மண்ணெல்லாம் வளம் கொழிக்கும் பூமியாகும்'' - அழகாகப் பேசுகிறார் இயல்வாகை நாற்றுப் பண்ணையை நடத்திவரும் அழகேஸ்வரி.
தினமும் நாற்றுகளை உற்பத்திசெய்து பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறார் அழகேஸ்வரி. மேலும், பள்ளிகள்தோறும் சென்று குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் கல்வியைக் கற்றுத்தருகிறது இவருடைய இயல்வாகை நாற்றுப் பண்ணை!
தொடர்ந்து பேசியவர், ''காசுக்காக எத்தனையோ மரங்களை வெட்டித் தீர்த்தோம். பல லட்சம் மரங்களை இழந்ததோட தாக்கத்தை இந்த உலகம் இப்பத்தான் உணர ஆரம்பிச்சு இருக்கு. 'புவி வெப்பம் அடைதல்’, 'பருவ நிலை மாற்றம்’ ரெண்டுமே சூழலை சீர்குலைச்சதன் விளைவுகள்தான். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களைப் பாழாக்கினோம். சாயக் கழிவுகளைக் கலந்து நீரை மாசுபடுத்தினோம். நச்சுப் புகையால காற்றையும் ஆகாயத்தையும் களங்கப்படுத்திவிட்டோம். எதைத்தான் நாம விட்டுவெச்சோம்.!

இதில் இருந்து மீண்டு வந்து மாசற்ற ஓர் உலகத்தைப் படைக்கணும்னா அது சுலபமான காரியம் இல்லை; விடாம உழைக்கணும்; போராடணும். சுற்றுச்சூழலைக் காக்க நாம மட்டும் போராடினால் போதாது. குழந்தைகளையும் இணைச்சுக்கிட்டுப் போராடணும்கிற நோக்கத்தில் தொடங்கினதுதான் இயல்வாகை சுற்றுச்சூழல் அமைப்பு. இதோட ஒரு பகுதியாக இந்த நாற்றுப் பண்ணை செயல்பட்டுட்டு வருது...'' என்றார்!
ஊத்துக்குளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி திவ்ய பாரதி, தேர்ந்த விவசாயி கணக்காகப் பேசுகிறாள். ''இங்க வாகை, வேம்பு, புங்கன், ஆல், அரசு, சொர்க்கம், பாதாணி, பென்சில், ஆலமரம், இலுப்பை, கொய்யா, நாவல்னு பல வகையான நாற்றுகளையும் நாங்க உற்பத்தி செய்யறோம். முதல்ல செம்மண் கொட்டி அதில் தாய் மடி அமைச்சோம். அந்தத் தாய் மடியில விதையத் தூவி மண் புழு உரம் போட்டோம். கொஞ்ச நாள்ல விதைத் துளிர்த்து செடியாச்சு. அதை கவர்ல போட்டுவெச்சுடுவோம். தினமும் இங்க செய்ய வேண்டிய வேலைகளைத் தனித் தனியாகப் பிரிச்சு செய்யுறோம். இதுவரைக்கும் ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்துல இருக்கிற எல்லாப் பள்ளிகளுக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாத்துகளைக் கொடுத்து இருக்கோம்...'' என்கிறாள் பெருமை பொங்க!
ஒன்பதாம் வகுப்பு மாணவி திருமேனி, ''நீங்க 'பறவையை நேசித்த மலை’ மொழிபெயர்ப்பு கதையைப் படிச்சி இருக்கீங்களா? பாறைகளால் ஆன ஒரு மலையை ஒரு பறவை எப்படி சோலைவனமாக மாற்றிக் காட்டுதுனு அந்தக் கதையில அழகாகச் சொல்லி இருப்பாங்க. அதுபோலத்தான் நாங்களும் இங்க இருக்கிற கைத்த மலையை சோலைவனமாக மாற்றிக் காட்டுறதுக்காக வேலை பார்க்கிறோம். கூடிய சீக்கிரமே எங்க கனவு நனவாகும்!''
அடேங்கப்பா... இங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் துடிப்பு மிகுந்த சுற்றுச்சூழல் போராளிகளே!

கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்








COMMENT(S): 4
சமுதாயம், நட்ட செடிகளை ஆடு, மாடு விட்டு மேய்க்காமல் இருந்தால் கட்டாயம் நாம் விரும்பிய பலன் கிடைக்கும்.
hello the great அழகேஸ்வரி....
really i appreciate your valuable acts...for our society.
thanks a lot...
babu
Yes, 'Environmental Sciences' should be made compulsory and practical for our kids through the education system.
A great service to humanity. Please keep it up.