• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
வலையோசை : கடல் பயணங்கள்!

இவர்களும் அரச பரம்பரையினர்தான்!

 

நான் சென்ற வாரம் கோயம்புத்தூர் சென்று இருந்தபோது அங்கு சர்க்கஸ் போஸ்டர் ஒன்று கண்ணில் பட்டது. ஆர்வமாக அங்கு சென்றபோது அது கலைக்கப்பட்டு அவர்கள் வேறு ஊருக்குச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் அவர்களின் எல்லா சந்தோஷங்களையும் விட்டுவிட்டு ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குப் பஞ்சம் பிழைக்கப் போவது போல கண்ணில் பட்டது அந்தக் காட்சி. அவர்களைப் பார்த்தால், ஒரு அரச குடும்பம் போலத் தோன்றியது. அவர்களின் சர்க்கஸ் கூடாரமே ஒரு பெரிய அரண்மனை. அங்கு வாயில் காவலர்கள், சேடிப் பெண்கள், யானை - சிங்கப் படைகள், மகிழ்விக்க கோமாளிகள், கருத்துகளைப் பரப்ப முரசு அறிவிப்பவர்கள் என்று அதுவும் ஒரு அரண்மனைதானே? இப்படிப்பட்ட ஒரு அரண்மனையும் அதன் மேன்மை பொருந்திய மக்களும் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே அங்கே ஆட்சி புரிந்து நகர்கிறார்கள்!


வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்!

.சி. போட்ட கடைகளில் பளபளப்பாக அடுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை எந்தவிதப் பேரமும் பேசாமல் வாங்கி வந்துவிடுகிறோம். ஆனால், வீட்டுக்கே வந்து கீரை விற்கும் பெண்ணிடம் விலை அதிகம் என்று சண்டை போடுகிறோம். பொதுவாக, நமக்குக் கீழே இருக்கும் நபரிடம் நம்முடைய அதிகாரத்தை நிலைநாட்ட விழைகிறோம். அதுவே அவர் சுத்தமான ஆடை அணிந்து ஆங்கிலத்தில் பேசிவிட்டால் நாம் அவரை நம்புகிறோம். நினைத்துப் பாருங்கள். இதேபோல்  கீரை விற்கும் பெண்மணி கண்ணைக் கவரும் ஆடை அணிந்து, ஆங்கிலத்தில் பேசினால், உங்களுக்கு விலையைக் குறைத்துப் பேசத் தோன்றுமா என்ன?

எது நம்மை அந்த சாதாரணமான மனிதர்களிடம் இருந்து, அவர்களின் வலிகளை உணராமல் அவர்களை ஏமாற்றுபவர்களாக எண்ணத் தோன்றுகிறது? வெளித்தோற்றம்தானே? நாம் எப்போதும் ஒருவரை வெளித்தோற்றத்தினை வைத்தே எடை போடப் பழகி விட்டதால், உள்ளே அவர் கெட்டவராக இருந்தாலும் நல்லவராகவே நினைக்கிறோம்!


கோலி சோடா எங்கே போனது?

நான் எங்கு சென்றாலும் சோடா குடிப்பதென்றால் அங்கு உள்ள லோக்கல் ஃப்ளேவர் சுவையைத்தான் விரும்புவேன். இந்தத் தடவை மதுரைக்குச் சென்று இருந்தபோது வெயிலுக்கு இதமாக கோலி சோடாவைக் குடிக்கலாம் என்று அலையோ அலை என்று அலைந்ததுதான் மிச்சம். எங்கும் கிடைக்கவே இல்லை.

அந்தக் காலத்தில் இருந்த காளி மார்க் சோடா, பன்னீர் சோடா, கோலி குண்டு சோடா என்று பல விதமான சோடாக்கள் இருந்தன. முதன் முதலில் என் அப்பா ஒரு கோலி சோடா வாங்கிக் கொடுத்தபோது, சோடாவைக் குடித்து முடிப்பதற்குள் ஒரு நாற்பது முறையாவது அந்த கோலி எப்படி உள்ளே சென்றது என்று யோசித்திருப்பேன். பன்னீர் சோடா குடித்துவிட்டு என் அம்மாவிடம் சென்று ஊதி ஊதிக் காண்பிப்பேன்.

இன்று அவை எல்லாம் என்னவாயின? என்ன செய்தன இந்த வெளிநாட்டுக் கம்பெனிகள்? எப்படி நம்முடைய மனது இதை நாடிச் சென்றது? ஒரு சுனாமி போல வந்து சிறிய கம்பெனிகளைச் சுருட்டிச் சென்றுவிட்டன இந்த வெளிநாட்டுக் கம்பெனிகள். அங்கு வேலை செய்த ஆட்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? இன்று அந்த வெளிநாட்டு பானத்தை குடிக்கும்போது அதன் சுவை நாக்கில் இருந்தாலும், மனதில் வேலை இழந்த அந்த ஆட்களின் ஞாபகமே வருகிறது!


அன்புள்ள அப்பா!

நேற்று என் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி ஓடியது... எப்போது இருந்து என் தந்தையை நான் நேசிக்கத் தொடங்கினேன்?

சிறு வயது முதல் அப்பா என்றால் திட்டு அல்லது அடி என்றே தோன்றும். என்னைப் பொறுத்தவரை அப்பா என்றால் காசு கொடுக்கும் எந்திரம், அல்லது எனக்கு விரும்பியதை வாங்கிக் கொடுக்கும், அல்லது என்னை விருப்பப்பட்ட இடத்துக்கு கூட்டிச் செல்லும் ஒரு மனிதன். எப்போதுமே பொருள் தேடி ஓடிக்கொண்டு இருக்கும் நம் தந்தையைப் பற்றி என்றாவது புரிந்துகொண்டு இருக்கிறோமா? அவருக்கு எந்த நடிகரைப் பிடிக்கும், என்ன இசை, என்ன கலர், எந்தப் புத்தகம், என்ன உணவு, எந்த இடம் பிடிக்கும் என்று நமக்குத் தெரியுமா?

முதன் முதலில் என் தந்தையை எனக்கு மிகவும் பிடித்தது, அவர் என்னைக் காணவில்லை என்று தேடியபோதுதான். திருச்சியில் உள்ள முக்கொம்புக்கு கூட்டிச் சென்றுவிட்டு, எனக்குக் கடையில் சாக்லேட் வாங்கி வருவதற்குள் நான் ஒரு குரங்கைப் பார்த்துவிட்டு அப்பாவின் கண் பார்வையில் இருந்து மறைந்துவிட்டேன். அவர் கண்ணில் நீர் வர என்னைத் தேடி இருக்கிறார். என்னைப் பார்த்ததும்,  அவர் அடிப் பின்னி எடுத்துவிட்டார். ஆனால், அந்தக் கண்ணீரைப் பார்த்தபோதுதான் அவருக்கு என்னைப் பிடிக்கும் என்பதே தெரியும்!

COMMENT(S): 1

very nice

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

ஆனந்த விகடன்
< 18 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook