மாசி மக நன்னாளில்.. மகனாக வந்த மகேஸ்வரன்!
திருவண்ணாமலை! பனி நிறைந்த அந்தப் பின்னிரவுப் பொழுதில் ஊரே உறங்கிக் கொண்டிருக்க... அரண்மனையில் மன்னனும் அவன் மனைவியர் இருவரும் உறங்காமல் விழித்திருந்தனர். 'பிள்ளை இல்லையே’ என்று நெடுநாட்களாக அவர்களை வாட்டி வதைக்கும் துக்கமும் ஏக்கமும் அன்று அதீதப்பட்டது போலும்! துக்கம் நெஞ்சை வாட்ட, தூக்கம் எங்கிருந்து வரும்?! மறுநாள் அரசவையைக் கூட்டினார் மன்னர். மந்திரிகள் கூடியிருந்த அந்த அவையில், குழந்தை இல்லாத மனக்குறையைச் சொன்னார். அதைக்கேட்ட மந்திரிகள் எல்லோரும் ஒருமித்த குரலில், ''மன்னா! குழந்தை பிறக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு, யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்யலாம். முக்கண் முதல்வன் மகப்பேறு அருள்வான்'' என்றார்கள். சபை கலைந்தது. மறுநாளே கோட்டையிலும் முக்கியமான இடங்களிலும் முரசும் ஒலித்தது, ''யார் வந்து, எது கேட்டாலும் மன்னர் அளிப்பார்''. . .