முதல் வணக்கம் முதல்வனுக்கே!
கவி காளமேகம் தமது யாத்திரையின்போது சோழ நாட்டின் ஒரு ஊருக்கு வந்தார். அந்த ஊரின் பெயர் ஆலங்குடி என்றும், அந்தத் திருத்தல இறைவனின் திருநாமம் ஆலங்குடியார் என்றும் கூறினர். அகிலாண்டேஸ்வரியின் திருவருள் பெற்ற ஆசுகவி அல்லவா காளமேகம்?! உடனே, அருமையான வெண்பா ஒன்றை அழகாகப் பாடினார். ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேல் வானும் குவலயமும் எல்லாம் மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து என்பதுதான் அந்தப் பாடல். 'சிவபெருமான் ஆலம் (விஷம்) குடித்தவராயிற்றே? அவரை ஆலம் குடிக்காதவர் (குடியான்) என்று எப்படிச் சொல்ல முடியும்! அவர் ஆலம் குடித்திருக்காவிட்டால், வானுலகும் மண்ணுலகும் அழிந்திருக்கும் அல்லவா? அவ்வாறு நேர்ந்திடாமல், அனைவரையும் காக்க ஆலம் (விஷம்) குடித்து அருளிய பெருமானை, 'ஆலங்குடியான்’ எனச் சொல்வது. . .