'கை நிறைய சம்பளம், வார இறுதியில் பார்ட்டி, எதற்கெடுத்தாலும் ட்ரீட்... கொண்டாட்டம்...’ - இது, சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பரவிக்கிடக்கும் பொது எண்ணம். 'இந்த எண்ணம் தவறு’ என்று தங்கள் செயல்களால் உணர்த்திவருகிறார்கள் 'நம்மவர்கள்’! - இது, சென்னை சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் சேர்ந்து தொடங்கி உள்ள சமூக சேவை அமைப்பு.

ஆர்வம் இருந்தும் படிக்க வசதி இன்றி வறுமை யில் வாடும் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதே 'நம்மவர்க’ளின் நோக்கம்.
''என் பெயர் ஜான் ராஜா. ஹெக்சாவேர் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கேன். வறுமையான சூழலில் வளர்ந்தாலும் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கேன். ஏழ்மையில் உள்ள மாணவர் கள் படிக்க உதவ வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அதைச் சொன்னால் நண்பர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்கிற தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. என் நண்பர்கள் பலரும் இதே எண்ணத்தில் இருப்பது பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. முதலில் 10 பேர் சேர்ந்து ஆளுக்கு
100 வீதம் பணம் போட்டு, அந்த
1,000 ரூபாயில் சோழிங்கநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தந்தோம். மன நிறைவான அந்த நாள் எங்களுக்கு உற்சாகத்தையும் நிம்மதியையும் அளித்தது. இதையே தொடர்ந்து செய்தால் என்ன? என்கிற கேள்வி எழுந்தபோது, உருவானதே 'நம்மவர்கள்’!
'எங்களின் இந்தப் பணியை சிலர் வெளிப்படையாகவே ஏளனம் செய்தனர். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இன்று பல நிறுவனங்களில் பணிபுரியும் 86 பேர் 'நம்மவர் களி’ல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இங்கு நான் உட்பட யாருக்கும் எந்தப் பதவியும் இல்லை. ஆனால், வரவு-செலவு கணக்குகளைப் பார்க்க மட்டும் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளோம். அவரவர்கள் தங்களால் இயன்ற தொகையை மாதாமாதம் கொடுக்க வேண்டும் என்பதே அடிப்படையான விதிமுறை.
வடசென்னை பகுதியில், நன்றாகப் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள 15 மாணவர்களைத் தேர்வுசெய்துள் ளோம். அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும் அதற்கான முழுச் செலவையும் 'நம்மவர்கள்’ அமைப்பே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவருக்கும் எங்களின் உறுப்பினர் ஒருவர் பொறுப்பாளர். அந்த மாணவரின் கல்வியைக் கண்காணிப்பது தொடங்கி அவருக்கான உதவிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினர் வழியாகத்தான் சென்றடையும். இதேபோல் இன்னும் 15 மாணவர்களை இந்த மாத இறுதிக்குள் இணைக்க உள்ளோம். இந்த மாதிரியான உதவி தேவைப்படும் மாணவர்கள் பற்றி யார் வேண்டுமானாலும் எங்களுக்குத் தகவல் தரலாம். தகவல் கிடைத்ததும் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும் அவர்களுடைய வீட்டுக்கும் நேரடியாகச் சென்று விவரங்களைச் சேகரித்து, உதவி பெறத் தகுதியான மாணவர் என்றால் அவரை உடனடியாக இணைத்துக்கொள்வோம். இதுபோல் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு என்றே ஒரு குழுவையும் அமைத்துள்ளோம்.
இதுநாள்வரை மாணவர்களைத் தனித்தனியாக அணுகித்தான் தேர்வு செய்தோம். இப்போது அரசு பள்ளிகளைத் தத்து எடுத்து உதவுவது என்று முடிவெடுத்துள்ளோம். சமீபத்தில் பாண்டிச்சேரி, சென்னை அம்பத்தூர் ஆகிய இடங்களில் இரு பள்ளிகளைத் தத்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதன் மூலம் அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எங்களால் செய்து தர முடியும் என, நம்புகிறோம். எங்களின் அமைப்பைப் பற்றி அறிந்த வெளிநாட்டு நண்பர்கள் பலர், உதவ முன்வந்துள்ளனர். இதையெல்லாம்விட எங்கள் பெற்றோர் முழுக்க முழுக்க எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். மாதத் துக்கு ஒருமுறையோ இருமுறையோ அனைவரும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்போம்.
இதற்காகவே ஃபேஸ்புக்கில் குழுமம் ஒன்றை உருவாக்கி உள்ளோம். அதன்மூலம் ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம். அதில் சமச்சீர்க் கல்வியின் தேவை குறித்த விவாதத்தை முன்னெடுத்துச் சென்றோம். எங்களைப் பொறுத்தவரை இப்போதைய சமச்சீர்க் கல்வி இன்னும் தரம் உயர்த்தப்படலாம். இங்கு கல்வியால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் கல்வியை அடிப்படையாக வைத்தே எங்கள் செயல்பாடுகள் இருக்கும். கற்றறிந்த சமூகத்தை உருவாக்குவதே எங்களின் லட்சியம்' என்கிற ஜான்ராஜாவின் உறுதியை 'நம்மவர்கள்’ டீம், புன்னகையோடு வழிமொழிகிறது!
- பா.பற்குணன்
படங்கள்: பா.காயத்ரி அகல்யா




Previous
Venkat1 Years ago




