'மனிதர்கள் செய்யக்கூடிய மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்று, கொள்கையற்ற அரசியல்’ என்றார் அண்ணல் காந்தி. ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி மக்கள் நலனுக்காகவே இயங்கும் அரசியல் கட்சி ஒன்றுகூட இன்று இந் தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. தான் நேர்ந்து கொண்ட லட்சியப்பாதையில் பொது மக்களை நடத்திச்செல்ல முயலாமல், அவர்களுடைய மலினமான மனோபாவங்களைத் தன் சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தரம் குறைந்த சந்தர்ப்பவாத சாகசமே தலைமைக்குரிய தகுதியாகிவிட்டது. எந்தத் தவறான பாதையில் தடம் பதித்தாவது பதவியைப் பெறுவது, அதிகாரத்தை அடைந்து அளவில்லாமல் பணத்தைப் பெருக்குவது, வாழ்க்கை தரும் இன்பங்களை வகை வகையாய் சுவைப்பது என்ற மூன்று அந்தரங்க ஆசைகளுடன் நம் பெரும்பாலான அரசியல்வாதிகள் 'பொதுத் தொண்டு’ என்னும் போலி வேடம் புனைந்து சமூக வீதிகளில் சஞ்சரிக்கின்றனர்.