பால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்!
காணக் கிடைக்காதது கிடைத்தால்... அதை 'அத்திப் பூத்தாற்போல’ என்பார்கள். காரணம், அத்தி மரத்தில் பூ பூப்பது, கண்ணுக்குத் தெரியாமல் நிகழும். அத்தி மரத்தின் இலை, பால், பழம், பிஞ்சு, காய், பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருந்துப் பொருளாகவோ அல்லது துணை மருந்தாகவோ சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. அத்திப் பழத்தை அன்றாட உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்துக்கொள்ளலாம். நீர்நிலைகளின் அருகாமையில் அதிகம் காணப்படும் அத்தி மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து விவரிக்கிறார் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கோசிபா. இலை ''உலரவைத்துப் பொடித்த அத்திமர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லவை. காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும் இதைக்கொண்டு நிறுத்தலாம். இந்தப் பொடியில் தயாரித்த லோஷனைக்கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களைக் கழுவினால் குணம் கிடைக்கும். இதன் இலைகளைக் கொதிக்கவைத்த தண்ணீரால் வாய் கொப்புளித்தால் வாய்ப் புண்கள் ஆறும். ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும். பிஞ்சு. . .