ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையம் அருகில் உள்ள ஊர் மலையப்பப்பாளையம். இங்குள்ள அழகிய மலையின் மீது, அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீமுத்துவேலாயுத ஸ்வாமி. இந்த மலையை உதயகிரி என்று சொல்வார்கள். எனவே, உதயகிரி ஸ்ரீமுத்துவேலாயுத ஸ்வாமி கோயில் என அழைக்கிறார்கள், பக்தர்கள்! சுமார் 600 வருடங்களுக்கு முன்பு, எம்மாம்பூண்டி கிராமத்தில் உள்ள முத்துக்குமார செட்டியார் என்பவர் கட்டிய கோயிலாம் இது! பிறகு, அந்த ஊர்க்காரர்கள் அடிக்கடி இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்து வந்தனர் என்கிறது ஸ்தல வரலாறு. ஸ்ரீகாசிவிசாலாட்சி அம்பாள், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்!. . .