மலையின் இடுப்பில் இருந்து தவறி விழுந்த குண்டுக் குழந்தையாய் ஒரு குன்று. ஒரு பாறையின் உச்சியில் எமிலி; அவள் காலாடும் பள்ளத்தில் சின்னப்பாண்டி. ஐந்தாறு சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆள் துடைத்த தனிமை. பள்ளத்தில் புள்ளிகளாய் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு, மாடுகள். காற்றோடு இசை மீட்டும் மாட்டு மணிச் சத்தம். மலைவிட்ட பட்டங்களாய் ஆகாயத்தில் சில துண்டு மேகங்கள். மஞ்சள் நதியில் நீராடும் மேற்கு. புலன்களுக்குள் பூ மலர்த்தியது அந்தச் சுற்றழகு. எல்லா நிலவியலுக்கும் ஒரே மொழி இல்லை. இடம் பொருளுக்கு ஏற்ப மாறுபடும் மொழியும் தொனியும். மௌனமே மொழியாய்த் தோன்றியது அவர்களுக்கு. சூழல் கூட்டுவித்திருக்கும் ஒரு சௌந்தர்யத்தை - மௌனத்தின் அலைவரிசையில் மட்டுமே துய்க்க வேண்டிய ஒரு நாத உபாசனையை உடைத்துவிடுமோ என்று விட்டு விலக. . .