திருச்சி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பார்வையற்றோர் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் மத்தியில் செல்வராஜ் என்கிற பெயருக்குத் தனி மரியாதை உண்டு. அப்படி என்ன செய்தார் இந்த செல்வராஜ்?
இதுவரை 676 நபர்களிடம் இருந்து கண்களைத் தான மாகப் பெற்று, அந்தக் கண்களைப் பார்வைத் திறன் பாதிப்பு உடையவர்களுக்கு தலா ஒரு கண் வீதம் பொருத்தி 1,352 பேர், இந்த உலகைக் காண உதவி உள்ளார்.
''1993-ம் ஆண்டு ஒரு நாள்... இரவு உணவுக்குப் பின் வீட்டில் ஹாயாக டி.வி பார்த்துக்கொண்டு இருந்தேன். தூர்தர்ஷன் சேனலில் 'பார்வையற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான ஒரு குறும்படத்தை ஒளிபரப்பி, இறுதியில் 'கண்தானம் செய்வதன் மூலம் இவர்களை சங்கடத்தில் இருந்து காப்பாற்றலாம்’ என்கிற வேண்டுகோளை வைத்தனர். அந்தக் குறும்படம், அன்று இரவு முழுக்கஎன்னைத் தூங்க விடவில்லை. அந்த இரவில்தான் 'பார்வையற்றவர்களுக்கு எந்தெந்த வகையில் எப்படி எல்லாம் உதவலாம்?’ என திட்டமிட ஆரம்பித்தேன்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக் குச் சென்று, 'கண்தானம்’ பெறும் வழிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். முறைப்படி அங்கே பதிவுசெய்து பின்னர், பாய்லர் ஆலையின் கேன்டீன், பயிற்சி அரங்கம், நுழைவு வாயில்களில் துண்டு பிரசுரங்கள், செய்திப் பலகை விளம்பரம், சக ஊழியர்களிடம் வாய் வழிப் பிரசாரம் என விழிப்பு உணர்வு பணியை ஆரம்பித்தேன்.

1994 டிசம்பர் 27-ம் தேதி பாய்லர் ஆலை ஊழியரான பாஸ்டின் ஜோஸப் என்பவர் இறந்து போனார். அவருடைய கண்களை எப்படியும் தானமாகப் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். இறந்து போனவரின் மனைவி, அண்ணன் மற்றும் மகன்களிடம் பேசி அனுமதி வாங்குவ தற்குள் 5 மணி நேரம் கடந்துவிட்டது. ஒருவர் உயிர் இழந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிப் பாதுகாக்க வேண் டும் என்பதால் அனுமதி பெற்ற அடுத்த நொடி ஜோசப் கண் வங்கிக்கு தகவல் கொடுத்தேன். அரை மணி நேரத்தில் மெடிக்கல் டீம் வந்தது. அடுத்த 15 நிமிடங்களில் இறந்து போன பாஸ்டினின் இரண்டு கண்களைத் தானமாக பெற்றுச் சென்று, பார்வையற்ற இருவரின் வாழ்க்கையில் முதன்முதலில் ஒளி யேற்றியதை என்னால் மறக்க முடியாது'' என்று சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் செல்வராஜ்.

பிறவியிலேயே பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு நண்பர்கள் உதவியுடன் இலவச திருமணம் நடத்திவைக்கும் இவர், 2 கிராம் தாலி, பட்டு வேட்டி, சேலை, குடும்பம் நடத்தத் தேவையான 75 விதமானப் பொருட் கள் என சீர்வரிசையும் கொடுத்து அசத்துகிறார். இதுவரை 66 ஜோடிகளை திருமண பந்தத்தில் இணைத்துள்ளவர், அந்த ஜோடிகளின் வளை காப்பு, பிரசவம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் என ஒரு சராசரி குடும்பத்தில் நிகழும் அனைத்து சம்பிரதாயங்களையும் உடன்பிறவா சகோதரராக இருந்து செய்து மகிழ்விக்கிறார்.
சாதனை மனிதருக்கு சல்யூட்!




Previous
Partha1 Years ago




