தீப்புடிச்ச மாதிரி சேதி பரவுது ஊருக்குள்ள. தெருத் தெருவா சாட்டிக்கிட்டே போறான் தோட்டி மாதப்பன். ''அய்யா... இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... அட்டணம்பட்டி சீனிச்சாமி மகன் கருத்தமாயிக்கும் கருத்தமாயி மகன் முத்துமணிக்கும் சொத்துத் தகராறுல ஒரு பஞ்சாயத்து இருக்கிறபடியால, எட்டுப் பட்டரை சாதிசனமும்வாற புதன் கெழமை காலையில பத்து மணிக்கு அரசமரத்தடி அம்பலக் கல்லுல வந்து கூடணுமுன்னு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு... ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு!'' ''கிணிமிட்டி கிணிமிட்டி கிணிமிட்டி கிணிமிட்டி'' தமுக்கு அடிச்ச சத்தம் தேஞ்ச இடத்துல இருந்து ஊராளுக பேச்சு ஆரம்பிச்சிருச்சு. ''எல்லாருக்கும் எதிரி வெளிய இருந்து வாறதில்லப்பா; வீட்டுக்குள்ளயிருந்துதான்.'' ''பாவம் கருத்தமாயி... இந்த மனுசன் எத்தனையச் சமாளிப்பாரு பாவம். ரெண்டு தலைமுறையாக் கழியாத கடன்; ஒரு தலைமுறையாப் பேச்சுவார்த்தை இல்லாத பொண்டாட்டி; பாலூத்தி. . .