ஒரு வரலாற்றுச் சாதனை இது. நிகழ்த்தியவர்கள்... நம் இந்திய விவசாயிகள். வரலாறு பார்த்திராத அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, அரிசி உற்பத்தி 10.34 கோடி டன்; கோதுமை உற்பத்தி 9.23 கோடி டன். விவசாயிகளுக்காகத் துரும்பையும் இழக்க விரும்பாத ஓர் அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தி எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வேண்டும்? ஆனால், டெல்லியில் நம் உணவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இந்தியத் தானியக் கிடங்குகளில் இடம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 1.3 டன் தானியங்களைக் கூடுதல் ஒதுக்கீடு செய்தாலும், வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது?. . .