|  | | பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும்,
பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன்.
இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது.
உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது. |
|
|  | | ‘காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும்.
சமூகத்தின் பிரதிபலிப்பாக மிளிர்பவனே கலைஞன்.
இந்த வரையறையை உறுதி செய்கிறது பழநிபாரதியின் சமூகச் சாடல். மீசைக்கவிஞனின் பெயரைச் சுமப்பதாலோ என்னவோ... பன்னாட்டு ஊடுருவல் தொடங்கி பாலியல் மீறல்கள் வரை
சாடித் தீர்க்கிறது பழநிபாரதியின் எழுத்து. ஒரு பாடலாசிரியராக வாழ்வியலின் மென்மையைப் பதிவு செய்யும் பழநிபாரதி
தான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கவும் தவறவில்லை.
இன்றைய வாழ்வின் இன்னல்களை, சமூக அவலங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் உருமாறிப்போகும் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை, கலாசார சீரழிவுகளைக் காற்றின் கையெழுத்தாக நம் நெஞ்சுக்குள் உள்வாங்கும் மூச்சுக்காற்றுபோல் உணர்த்துகிறார் பழநிபாரதி.
சமூகத்தின் பன்முகத் தளங்களிலும் ஊடுருவி, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் தொடங்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரை பலருடைய பிரதிபலிப்புகளையும் இந்த நூல் பந்திவைக்கிறது. ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் இலையாக, இந்தக் காற்றின் கையெழுத்து சகல திசைகளிலும் உங்களை இழுத்துச் செல்லும்! |
|
|  | | மின்சாரம் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அந்த மின்தேவையை நிவர்த்தி செய்ய, நம் நாட்டில் அணுமின் நிலையங்களும் உலைகளும் அதிகப் படுத்தி வரும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பிரச்னைகள், பாதிப்புகள், அபாயங்கள், அழிவுகள், விழிப்பு உணர்வு குறித்து தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.
அணுமின் நிலையங்கள், வெறுமனே மின்சாரம் தயாரிக்கும் உலைகள் மட்டும் அல்ல, அணு ஆயுதத் தயாரிப்போடும் தொடர்பு உடையவை. கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றப்பட வேண்டிய இந்த நிலையங்கள், நாட்டின் பாதுகாப்போடும், ராணுவக் கட்டமைப்புகளோடும் நேரடியாகப் பின்னிப் பிணைந்தவை. நம் சுற்றுச்சூழலில் இயங்கும் அணு உலைகள், கதிரியக்கம், அதன் விளைவுகள், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அணு உலைகள் வெடித்து மக்கள் கதிர்வீச்சுக்கு உள்ளான பாதிப்பு... என அணுவின் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை விசயங்களையும் அணு அணுவாக, விறுவிறுப்பாக விவரித்துள்ளார் நூலாசிரியர் சுப.உதயகுமாரன்.
மன்ஹாட்டம் திட்டம் தொடங்கி, உலகின் மிகவும் கொடூர ஆயுதமான அணுகுண்டை தயாரித்த ராபர்ட் ஓபன் ஹெய்மர், உலகின் முதல் அணுசக்தி நிலையத்தை வடிவமைத்த என்ரிகோ ஃபெர்மி, அணுகுண்டின் மாறாத அடையாளமான ஹிரோஷிமா, நாகசாகி... என அணுசக்தித் துறையின் ஆணிவேர்களை அலசி எழுதியிருக்கிறார்.
ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த ‘அணு ஆட்டம்’, கூடங்குளம் போராட்டத்தை உலகறியச் செய்தது. உலகின் பல நாடுகள் அணுமின் உலைகளை மூடிவரும் இந்த வேளையில், அணுமின் உலைகளால் ஏற்படும் ஆபத்துகளையும், அணுக் கழிவுகளிலிருந்து வரும் கதிவீச்சுகளால் ஏற்படும் அழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையையும் அறிய உதவுகிறது இந்த நூல். |
|
|  | | ‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே!
ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’
ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’! ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது!
அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம். |
|
|  | | உயிர் பிழைக்க வேண்டும் என்ற உச்சக்கட்ட அவசரத்தில் அப்பாவி மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!
சிதறிய உடல்கள், சாலைகளில் ஒட்டியிருக்கும் சதைகள், உணர்வுகளற்று ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்கள்... என, மூச்சிரைத்து வந்த சமூகத்தின் முனகல் சத்தமே அங்கு பேரவல ஒலியாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
கை, கால், முகம் என காயம் ஆறாத இளம் பெண்கள், ரணம் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், குழந்தைகளின் தாகம் தணிக்க முடியாத தாய்மார்கள், மனைவியின் மானத்தைக் காக்க முடியாத கணவன்மார்கள்... துயரம் தோய்ந்த அந்தச் சமூகத்தில் பலியான உயிர்களின் எண்ணிக்கை, இலக்கங்களால் வரையறுக்க முடியாது!
கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் இடம் பெயர்வதற்கான காரணம், அதில் இலங்கை அரசின் சூழ்ச்சி, இடப்பெயர்வின்போது ஏற்பட்ட இன்னல்கள், போராட்டங்கள், உடைமையும் உணர்வையும் இழந்து உயிரைக் காக்க அவர்கள் பட்ட பாடு... இப்படி, முள்வேலி முகாம்வாசிகளின் அவலங்களை மூடி மறைக்கும் இனவெறி அரசின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.மகேந்திரன்.
ஈழத் தமிழ் அகதிகளின் அன்றாட வேதனைகளை வேர் அறுக்கும் முயற்சியாக ‘வீழ்வே னென்று நினைத் தாயோ?’ என்ற தலைப்பில், ஆனந்த விகடன் இதழ்களில் வெளி வந்த தொடரோடு, மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த நூல், கொடுமை செய்வதையே கடமையாகக் கொண்டுள்ள இனவெறி அரசின் வஞ்சக முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான முன்னோட்டமாகத் திகழும்.
‘அடக்கியவர்கள் நிலையாக ஆளப்போவதில்லை!’ என்பதே கடந்த கால சரித்திரம் உணர்த்தும் பாடம்! |
|
| |
|
|
|
You have 0 item in your cart
|
ஷிப்பிங் சார்ஜஸ்: புத்தக விலையுடன் ஒரு புத்தகம் என்றால்
ரூபாய் 20ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் கூடுதலாக ரூபாய் 10ம் சேர்க்கப்படும்.
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |