|  | | அச்சு மணம் மாறாமல் மடியில் துள்ளும் மலரை நீங்கள் புரட்டும் இந்தத் தருணம் மிக விசேஷமானது. அதிலும், இளைய தலைமுறைக்கு இந்த தீபாவளி மலர் ஏராளமான இனிய சங்கதிகளைத் தாங்கி நிற்கிறது.
இளமை என்றாலே புதுமை என்பது நிஜம்தான். அதே சமயம், காலத்தின் ஓட்டத்தில் கடந்து போய்விட்ட பல நல்ல விஷயங்களை மறுபடி கண்முன் நிறுத்திக் காட்டும்போது.... அது இன்றைய தலைமுறைக்கு இனிய பரிசுதானே! அதோடு சேர்த்து, இன்றைய வானில் ஒளிரும் நட்சத்திரங்களையும் இணைத்துக் கொடுத்தால், அந்த 'டபுள் தமாக்கா'வுக்கு ஈடு இணைதான் ஏது!
இந்த 'தீபாவளி மலர் 2012' ஆன்மிக செய்திகளையும் கூடுதலாகவே தாங்கி வந்திருக்கிறது. அதனை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்திருப்பதுதான் இந்த மலரின் தனிச் சிறப்பு. ஓவியக் கலைஞர் பத்மவாசனின் கைவண்ணத்தில் தெய்வங்கள் உங்கள் இல்லம் தேடி வந்திருக்கிறார்கள். பூஜிப்பதற்காக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி போன்று வண்ணப்படங்களுடன் ஏராளமான தகவல்களையும் அள்ளித் தெளித்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு இப்போதிலிருந்தே நீங்கள் திட்டமிடலாம்.
அசோகமித்ரன், தமிழருவிமணியன், முத்துலிங்கம் என்று சிறுகதை விருந்து படைக்க வந்திருப்போரின் பட்டியல் உங்களைப் பரவசப்படுத்தும். மேலும் விகடனுக்கே உரித்தான நகைச்சுவை அம்சங்களும், நெஞ்சைத் தொடும் கவிதைகளும் குறைவில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன.
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா உலகப் பிரவேசம் பற்றிய கட்டுரை பல ஆச்சர்யங்களை உங்களுக்குள் எழுப்பும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் நடிகர் திலகம் சிவாஜியும் இரு துருவமான போட்டியாளர்கள் என்ற நினைப்பை நொறுக்கும் வண்ணம் இருக்கிறது ஒரு கட்டுரை. அவர்களுக்குள் இருந்த அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும் படித்துப் பாருங்கள்.
பயணம் என்றாலே அதில் எதிர்பாராத இனிய அனுபவங்கள் ஏராளமாகக் கிடைக்கும். அவை அளவு கடந்த ஆனந்தம் தரும். அது போன்று இந்த மலரிலும் உங்களுக்குப் புதிது புதிதாக பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. உருக வைக்கும், குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும், பிரமிப்பில் விழிகளை விரிய வைக்கும் அந்த ஆச்சர்யங்களை ஆசைதீர ருசியுங்கள். எப்போதும் போல், உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்ப சற்று நேரம் ஒதுக்குங்கள்.
என்றும் இனிதே விளையட்டும்..! |
|
|  | | ஒவ்வோர் ஆண்டும் தித்திக்கும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தை மட்டுமல்ல... விகடன் தீபாவளி மலரையும் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் மொத்தத்தையும் மிஞ்சும்வண்ணம் நவரச சுவைகளையும் அள்ளித்தெளித்துத் தயாரித்துள்ள இந்த மலரை, மகிழ்ச்சியான கொண்டாட்டத் தருணத்தில் உங்கள் கைகளில் அன்புடன் சமர்ப்பிக்கிறோம்.
தீபாவளி நினைவுகள் ஒரு கணத்தில் கடந்து செல்பவை அல்ல... அவை என்றென்றும் மனதில் நிலைத்து நின்று இன்பம் தருபவை. அதற்கு ஈடுதரும் வகையில், இந்த மலரிலும் உங்கள் நெஞ்சைவிட்டு என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கிறோம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளில் தொடங்கி... இமயத்தில் குடிகொண்டுள்ள சக்தி பீடங்கள் வரையிலான ஆன்மிகக் கட்டுரைகள் உங்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துவது நிச்சயம்! வாசித்து முடித்ததும் கோடிலிங்கேஸ்வரரை தரிசிக்க, இல்லத்துப் பெரியவர்கள் கண்டிப்பாக யாத்திரை கிளம்பி விடுவீர்கள்.
வாழ்த்துகளைச் சொல்லி,
கருத்துகளுக்காகக் காத்திருக்கிறோம்...
அறிவுமதியின் கவிதைநடைக் கதையில் இளையோர் நனைந்து பாருங்கள், இதயம் வரை இனிக்கும். கவிஞர்கள் இனிய சிந்தனையாளர்கள் மட்டுமல்ல... நயம் மிக்க நகைச்சுவையாளர்களும்தான் என்பதை உள்ளே சில கவிதைகளில் உணர்வீர்கள். கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை, அவர் மகன் கார்க்கி பாசமும் ரசனையும் கலந்து வகைப்படுத்தி வழங்கியிருக்கிறார். உங்கள் ரசனையோடு அவர் தேர்வை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
புகழ்மிகு எழுத்தாளர்களின் சிறுகதை மற்றும் சற்றே நீண்ட சிறுகதைகளின் ஆதிக்கம் இந்த மலரில் கூடுதலாக இருக்கும். அது சுவை பொங்கும் ஆதிக்கம் என்பதை தயங்காமல் ஒப்புக்கொள்வீர்கள்.
மலரும் நினைவுகள் இல்லாத தீபாவளி மலரா..! ஸ்ரீதர், எம்.ஜி.ஆர். பற்றிய நினைவுகள் உங்களைக் கால யந்திரத்தில் பின்னோக்கி கூட்டிச் செல்லும். மதிப்புக்குரிய மனிதர்களின் பேட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு துறை... ஒவ்வொன்றும் ஒரு ரகம்... சொல்லும் கருத்துகள் அத்தனையும் புதுவிதம்! படித்து ரசித்துவிட்டுச் சொல்லுங்களேன்..!
இவை தவிர இளமைத் துள்ளல் மிக்க ஏராளமான ஆச்சர்யங்களும் இதழுக்குள் காத்துக் கிடக்கின்றன. சுவைப்பதோடு நின்றுவிடாமல், வாசித்து முடித்த பின் சில வரிகளில் உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதுவே எங்களுக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசு!
|
|
| |
| 1  | Displaying 1 - 2 of 2 |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |