பொது: உங்கள் ராசிக்கு 11-ஆமிடத்தில் சனி உலவுவது விசேடமாகும். இதனால் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உழைப்புக்குரிய பயனைப் பெற்று வருவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். சுக சௌக்கியங்கள் பெருகும். பழைய நண்பர்களது சந்திப்பு நிகழும். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். நீதி, நியாய, தர்மப்படி நடந்து கொள்வீர்கள். குரு பலம் இந்தப் புத்தாண்டு முழுவதும் சிறப்பாக இல்லாததால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் இருந்துவரும். ராகு பலம் இல்லாததால் அலைச்சல் கூடும். 10-ல் கேது உலவுவது சிறப்பாகும். இதனால் பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். மனத்தில் தெளிவும் பிறக்கும். சனி பலத்தால் இந்தத் தமிழ்ப்புத்தாண்டு ஓரளவு சிறப்பாக இருக்குமெனச் சொல்லலாம்.
ஆரோக்கியம், குடும்பம்: குரு 3-ல் இருப்பதாலும் ராகு 4-ல் இருப்பதாலும் மார்பு, இதயம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இராது. மக்களாலும், உறவினர்களாலும் சங்கடம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தந்தையால் அளவோடு நலம் ஏற்படும்.
இட மாற்றம், வீடு மாற்றம் சிலருக்கு உண்டாகும்.
பொருளாதாரநிலை: குரு பலம் இல்லாததால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பது அரிது. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
நிலபுலங்கள்: சனி வலுத்திருப்பதால் சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் பராமரித்துக் கொள்ளவும் வாய்ப்புக் கூடிவரும். டிசம்பர் 9-ஆம் தேதி முதல் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.
தொழில்: தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் ஆகியவை லாபம் தரும். எரிபொருட்களாலும் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் ஆகிய பொருள் நடமாட்டமுள்ள இனங்களில் தொடர்பு கொண்டு தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். வீண் பழி சுமத்தப்பட நேரலாம்.
மாணவர்களுக்கு: தொழில் கல்வியில் வளர்ச்சி காணலாம். பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலுபவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும்.
மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். குருப் பிரீதி செய்வது நல்லது.
அதிர்ஷ்டக் குறிப்புக்கள்:
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: கருநீலம், மெரூன்.
எண்கள்: 7, 8.
தெய்வம்: மகாலட்சுமி, மகாவிஷ்ணு
பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி செய்யுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமைகளில் துர்க்கையையும் வழிபடவும். பெரியவர்களையும், குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், வேதவிற்பன்னர்களையும் வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறவும்.
|