புறா பாண்டிபடங்கள்: ரா. ராம்குமார்
''

சாப்பிடுவதற்கும், எண்ணெய் எடுப்பதற்கும் ஏற்ற நிலக்கடலை ரகங்கள் எவையெவை?'
எஸ். சுந்தரம், தலைவாசல்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் விதை நுட்பவியல் விஞ்ஞானி முனைவர். கே. நடராஜன் பதில் சொல்கிறார். ''கொடிக்கடலை என்றொரு ரகம் உண்டு. இது130 நாட்கள் வயது கொண்ட பாரம்பரிய ரகம். செடியில் இருந்து, கொடிகள் ஓடும். அந்த கொடிகள் மண்ணில் இறங்கி காய்ப்பிடிக்கும். இந்தக் கடலையில் எண்ணெய்ச் சத்து குறைவாக இருக்கும். எனவே, சாப்பிடவும், தின்பண்டம் செய்யவும் இது ஏற்றது.
இதைப் போலவே, விருதாச்சலம் ஆராய்ச்சி நிலையத்தில் வி.ஆர்.ஐ2 என்ற ரகத்தை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த ரகத்தின் சிறப்புத்தன்மை எண்ணெய்க்கும் பயன்படுத்தலாம். சாப்பிடவும் நன்றாக இருக்கும். 'காந்தி கடலை’ என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரகத்தையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ரகமும் நமது கொடிக் கடலை போன்ற குணாதிசயம் கொண்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, அதிக வயது கொண்ட ரகங்கள் தாக்குப் பிடிப்பதில்லை. காரணம், காய்ப்பிடிக்கும் நேரத்தில் பருவ மழை பெய்துவிடும். இதனால், மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூல் தரக்கூடிய ரகத்தை திண்டிவனம், எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் டி.எம்.வி.13 என்ற ரகத்தை, வெளியிட்டுள்ளோம். இந்த ரகம் காய்ப்பிடிக்கும் பருவத்தில் வறட்சி ஏற்பட்டாலும்... தாங்கி வளரும். ஏக்கருக்கு சராசரியாக 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தில் 50% அளவுக்கும் அதிகமாக எண்ணெய்ச் சத்து இருக்கும். ஆகையால், இதை எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை தின்பண்டமாகப் பயன்படுத்துபவர்கள் அதிகம் சாப்பிட்டால், மயக்கம் வந்துவிடும் என்பது கவனிக்கதக்கது.

இந்த ரகத்தின் வயது 100 நாட்கள்தான். அறுவடை நாட்கள் குறைவு என்பதாலும், வறட்சியைத் தாங்கி மகசூல் கொடுப்பதாலும்... இந்த ரகத்தை நிறைய விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.'
தொடர்புக்கு, செல்போன்: 9994315004
''ஆழ்கூள முறையில் நாட்டுக்கோழி வளர்க்கிறோம். மழை மற்றும் குளிர் காலத்தில் ஆழ்கூளத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதை தவிர்ப்பது எப்படி?'
ஆர். கவிமணி, பல்லடம்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் அனுபவம் உள்ள, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் பதில் சொல்கிறார்.

''கோழிப் பண்ணையின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றைப் பொருத்து ஆழ்கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிக் கெட்டியாகிவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆழ்கூள முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, மழை மற்றும் குளிர் காலங்களில் அதிக எச்சரிக்கை தேவை!
சிமென்ட் தரை கொண்ட கோழிப் பண்ணையில் மரத்தூள், மரஇழைப்புச் சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புச் சக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச்சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து, கோழிகளை வளர்க்கலாம். இப்படி ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள், நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடிய தாக இருக்க வேண்டும். மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆழ்கூளத்தைக் கிளறிவிடும்போது, காற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும்.
சரியாகப் பராமரிக்காவிட்டால், ஆழ்கூளத் தில் அமோனியா வாயு உற்பத்தியாகி, கோழி களுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதோடு ரத்தக் கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால், கோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சி குன்றி, எடையும் குறைந்து இருக்கும்.
ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரம் அதிகமானால், 100 சதுர அடிக்கு8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டு, கிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை, ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்துக்கும், மூன்று வாரத்துக்குப் பிறகு 10 செ.மீ. உயரத்துக்கும் தரையில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கிளறிவிட வேண்டும்.
மேலும், இந்தக் காலக்கட்டத்தில் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும். இளம்கோழிக் குஞ்சு களுக்கு முக்கியமான எதிரி, அசுத்தமான தண்ணீர்தான். இளம்குஞ்சுகளின் இறப்பு, அசுத்தமான குடிநீரால் ஏற்படும். ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து, குடிநீரை எடுக்கிறோமோ அந்த இடத்தில் எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் இருக்கவேண்டும். குறிப்பாக சாக்கடைக் கலப்படம் அல்லது தொழிற் சாலைக் கழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.'
நறுமணப் புகைக்குப் பயன்படுத்தப்படும் சாம்பிராணி மரத்தை வளர்க்க விரும்புகிறோம். விவரம் சொல்லுங்கள்?'
ம. வரதராஜபெருமாள், சின்னகாஞ்சிபுரம்.
நீலகிரி மாவட்டத் தோட்டக்கலை அலுவலர், ராம்சுந்தர் பதில் சொல்கிறார்.
''ஆன்மிக ரீதியான பயன்பாடுகளுக்கு மட்டுமல்ல... மருந்து தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். குங்கிலிய மரத்தின் பட்டையில் இருந்து கிடைக்கும் கோந்துதான் சாம்பிராணி. இதை 'டாமர்’ என்பார்கள். சீமைக் குங்கிலியம், கருங்குங்கிலியம், வெள்ளைக் குங்கிலியம், பூனைக்கண் குங்கிலியம் எனப் பல வகைகள் உண்டு. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில், வெள்ளைக் குங்கிலிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இது அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது. இதை நாட்டுக் குங்கிலியம் என்றும் சொல்வார்கள். இதன் தாவர இயல் பெயர் 'வெட்டேரியா இண்டிகா’ (Vateria Indica). 100 அடி உயரம் வரை வளரக்கூடிய பசுமை மாறாத மர இனம் இது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரம் கொண்ட இடத்தில் மட்டும்தான் வளரும்.

நீலகிரிப் பகுதியில் ஏராளமான குங்கிலிய மரங்கள் இருந்தாலும், இவற்றி லிருந்து சாம்பிராணி எடுக்க முடியாது. மரப்பட்டைகளில் வாசனை மட்டும்தான் வரும். இலை, மரப்பட்டைகளில் இருந்து, மருந்தும்; விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சோப், மெழுகுவர்த்தி போன்றவையும்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில்தான், சாம்பிராணி தயாரிக்கப் பயன்படும் மரங்கள் உள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயற்கையாக வளர்ந்துள்ள மரங்கள்தான் உள்ளன. இன்னும் யாரும் இதை தனிப்பயிராக சாகுபடி செய்யவில்லை. அப்படி செய்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் கிடைப்பது போல வாசனையான சாம்பிராணி கிடைக்குமா?’ என்பது சந்தேகத்துக்குரியது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலம் இருந்தால், பரிசோதனை முயற்சியாக ஒரு சில மரங்களை மட்டும் வளர்த்து பார்ப்பது நல்லது. மற்றபகுதிகளில் இந்த மரம் வளர்வதற்கு வாய்ப்புகள் குறைவு.''