அசத்தும் இயற்கை இல்லம்!
‘‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற முதுமொழிக்கான அர்த்தம், இன்னும் சில வருடங்களில் குடிநீருக்காக குடத்தைத் தூக்கிக்கொண்டு அலையும்போதுதான் பலருக்கும் புரியும். நான் இப்போதே புரிந்துகொண்டதால் மழைநீரைச் சேமித்து, எனது தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறேன்’’ என்று தீர்க்கதரிசனப் பார்வையோடு பேசுகிறார் ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்த சிவசுப்ரமணியன். ஐ.டி நிறுவனம் ஒன்றில் உயர்அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், மழைநீர்ச் சேகரிப்பின் மகத்துவத்தைப் பலருக்கும் எடுத்துச் சொல்லியும் வருவது சிறப்பு!

கற்றுக்கொடுத்த பசுமை விகடன்!
‘‘பல தனியார் நிறுவனங்கள்ல உயர் அதிகாரியா வேலை செய்திருக்கேன். போதும்கிற அளவுக்கு பணம் சம்பாதிச்ச பிறகு, இயற்கைச் சூழல்ல அமைதியா வாழறதுக்காக சொந்த ஊரான பவானிக்கு வந்துட்டேன். இங்க வந்ததிலிருந்து, பசுமை விகடனைத் தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்றேன். இயற்கை விவசாயம், ஆரோக்ய உணவுகள் பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். பல விவசாயிகளைத் தொடர்பு கொண்டதுல நட்பு வட்டம் உருவாகிடுச்சு.

இயற்கை மீது ஆர்வம் வந்ததும், மழைநீர்ச் சேகரிப்பைக் கையிலெடுத்தேன். பவானியில் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, ஊராட்சிக்கோட்டையில் நிலம் வாங்கி, இங்க வீடு கட்டினேன். கட்டும்போதே மழைநீர்ச் சேமிப்புக்கு தகுந்த மாதிரி பிளான் போட்டுதான் வேலையை ஆரம்பிச்சோம். சமையல் அறையின் மேற்பரப்பில், 10x8 அளவில் 4,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட, தொட்டியை குடிநீர் தேவைக்காக அமைச்சேன். இதனால குடிநீருக்கு கேன் வாட்டர் வாங்குற செலவு மிச்சாமாகிடுச்சு. மத்த பயன்பாடுகளுக்காக, பெட்ரூம்ல 10x6 அளவில் 4,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட, தொட்டியை அமைச்சேன். மொட்டை மாடியில் இருக்கற அறையில 2,800 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை அமைச்சிருக்கேன். மொட்டை மாடியில் பெய்யுற மழைத்தண்ணி, குழாய் வழியா எல்லா தொட்டிகளுக்கும் போயிடும். குடிநீர்த் தொட்டிக்குப் போற குழாய்ல மட்டும் சுத்திகரிப்பு முறையை அமைச்சிருக்கேன்’’ என்ற சிவசுப்ரமணியன், கான்கிரீட் தொட்டிகளை அமைப்பதில் சிலநுட்பங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்.

இப்படித்தான் அமைக்கணும் தொட்டி!
இதோ அந்த நுட்பங்கள்... கான்கிரீட் தொட்டிகள், சூரிய வெப்பத்தால் பாதிக்காத வகையில், அமைக்கப்பட வேண்டும். அதிக சூரிய வெப்பத்தால் எளிதில் பாசி பிடித்துவிடும். மேலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து புழுக்கள் வந்துவிடும். எனவே, முதலில் தொட்டியினுள் வழக்கமான சுவரை அமைத்து, பிறகு தொட்டி முழுவதும் ‘தெர்மாக்கோல்’ வைத்து பிறகு, மீண்டும் ஒரு கான்கிரீட் சுவரை அமைக்க வேண்டும். பின்னர் தொட்டி முழுவதும் டைல்ஸ் கற்களைப் பதிக்க வேண்டும். இப்படி அமைப்பதன் மூலம் ஐந்தாண்டுகள் வரைத் தொட்டியைக் கழுவாமல் மழைநீரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

‘‘முதலில் கட்டிய வீட்டை ஒட்டி, ரெண்டாவதா ஒரு வீட்டைக் கட்டியிருக்கேன். அந்த வீட்டுலயும் முழுமையான மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை அமைச்சிட்டேன். அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்காக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளை தனியா வெச்சிருக்கேன். இப்ப எங்க வீட்டுல விழுற ஒரு மழைத்துளிக் கூட வீணாகுறதில்லை. ஒரு வருஷத்துக்கு மழையே பெய்யலனா கூட எங்களுக்கு தண்ணி பிரச்னை இருக்கவே இருக்காது’’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் சிவசுப்ரமணியன்!

இயற்கை இல்லம்!
வீட்டில் மழைநீர்ச் சேமிப்பைத் தொடர்ந்து, சோலார் மின்சாரம், காலி இடத்தில் இயற்கை விவசாயம் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் உற்பத்தி என இயற்கையோடு இயைந்து வாழ்வதால், தனது வீட்டுக்கு ‘இயற்கை இல்லம்’ என பெயரிட்டுள்ளார். ‘‘ஒரு வருஷத்துக்கு மழையே பெய்யலைன்னா கூட எங்களுக்கு எந்த தண்ணி பிரச்னையும் இல்லை.’’ என்கிறார் சிவசுப்ரமணியன்.
தொடர்புக்கு,
பி.சிவசுப்ரமணியன்,
செல்போன்: 90951-56797
கு.ஆனந்தராஜ்
படங்கள்: த.ஸ்ரீநிவாசன்