
ஓவியம்: ஹரன்
ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் நம்ம தமிழ்நாட்டுல அறவே இல்லாம போயிடுச்சுனுதான் சொல்லணும். ஆனா, வடநாட்டுல ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கு. உத்தரப் பிரதேசத்துல, ஜமுனாபாரி ஆட்டுல இருந்து பாலைக் கறந்து விற்கிற காட்சியைப் பார்த்திருக்கேன். ஆட்டுப்பால்னு சொன்னா, நம்ம கண்ணு முன்னாடி காந்தி தாத்தாத்தான் வந்து போவாரு. காந்தி பெரிய அரசியல் தலைவர் மட்டுமில்லீங்க. நல்ல இயற்கை வாழ்வியல் வல்லுநரும் கூட. அதனாலதான், ஆட்டுப்பாலையும், நிலக்கடலையையும் சாப்டுட்டு, வெள்ளக்காரனை வெரட்டி அடிச்சாரு.
போன வருஷம், டெங்கு காய்ச்சல் வந்த சமயத்துல, நம்ம சித்த மருத்துவருங்க, நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கச் சொல்லி, நம்ம மக்களைக் காப்பாத்துனாங்க. ஏன்னா, டெங்கு காய்ச்சல் இங்கிலீஷ்காரன் கண்டுபுடிச்ச மருந்துக்குக் கட்டுப்படல. அதனால, நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறுனு இயற்கை மருத்துவம் பக்கம் திரும்புனாங்க.

அந்த சமயத்துல டெல்லியிலயும் கூட, டெங்கு ஆபத்து அதிகமா இருந்திருக்கு. அதாவது. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி, ஆட்டுப்பாலுக்கு இருக்குனு மருத்துவருங்க ஆலோசனை சொல்லியிருக்காங்க. இந்தத் தகவல் தனக்கு கிடைச்ச மறுநிமிஷம், இப்ப டெல்லியில முதல்வரா இருக்கிற அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால் இந்தப் பாலை அருந்தினால், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சலை குணமாக்கும்‘னு வீதிக்கு வந்து பிரசாரம் செய்தாரு. இதுக்கு முக்கிய காரணம், ரொம்ப வருஷம் தும்மல், சுவாசக்கோளாறு, பிரச்சனைகளால, மப்ளரு கட்டிக்கிட்டு, சிரமப்பட்டாரு கெஜ்ரிவால். டெல்லி முதல்வர் பதவிக்குப் பின்னாலதான். பெங்களூருவுல இருக்கிற இயற்கை மருத்துவ மையத்துல சிகிச்சை எடுத்துக்கிட்டு குணமானாரு. அதனாலத்தான், இயற்கை மருத்துவம் மேல அவருக்கு அலாதி பிரியம்.
டெல்லி மக்களும் மூக்கைப் பிடிச்சுக்கிட்டு ஆட்டுப்பாலைக் குடிச்சாங்க. ஏன்னா, ஆட்டுப்பால்ல, ஒரு விதமான நெடி வீசும். வெண்ணெய்ச் சத்தை எல்லாம் எடுத்து, வாசம் இல்லாத பாக்கெட்டு பாலைக் குடிச்சவங்களுக்கு ஆட்டுப்பால் நெடி கஷ்டமாத்தான் இருக்கும். டெங்கு பாதிப்பு இருந்த காலக்கட்டத்துல ஆட்டுப்பால் ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய்க்கு மேல வித்திருக்கு.
டெல்லி சுற்று வட்டாரத்துல, இருக்கிற விவசாயிங்க இப்போ, இறைச்சிக்காக ஆட்டை வளர்க்கிறதை விட, பாலுக்காகத்தான் அதிகமா வளர்க்கிறாங்களாம்.
இப்போதான், ஆட்டுப்பால் அருமை மக்களுக்குத் தெரியுது. ஆனா, சித்த மருத்துவத்துல ஆட்டுப்பால் முக்கியமான மருந்து. நாமதான், சித்த மருத்துவத்தை மறந்துட்டோம். அதனால, ஆட்டுப்பாலோட மகிமை தெரியல. ஆனா, விஞ்ஞானிங்க. ஆட்டுப்பாலை அணு, அணுவா ஆராய்ச்சி பண்ணி, அதன் பலனைச் சொல்லியிருக்காங்க.

‘‘ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் மாட்டுப்பாலை விட மிதமாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிறது. ஆட்டுப்பால் குடிப்பதால், இரும்புச் சத்து எளிதா கிடைக்குது. ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. தொடர்ந்து ஆட்டுப்பால் குடிச்சு வந்தோம்னா, ஜீரணிக்கும் திறன் அதிகமாகி நல்ல பசி எடுக்கும். நாள்பட்ட வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கும் ஆட்டுப்பால் உதவுது. பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் குடிப்பதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும் உயிரி வினைப்பொருட்கள் தாய்ப்பாலில் உள்ளது போலவே, ஆட்டுப்பாலிலும் அதிகம் காணப்படுவதால் ஆட்டுப்பால் அருந்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுது. ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் இருக்குது. இதனால பச்சக் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலைப் பயன்படுத்தலாம்‘னு விஞ்ஞானிங்க பரிந்துரை செய்யுறாங்க.
மலேசியா நாட்டுல இருக்கிற சீன வம்சாவளி மக்கள், ஐஸ் க்ரீம் சாப்பிடற மாதிரி ஆட்டுப்பாலை விரும்பிக் குடிக்கிறதைப் பார்த்திருக்கேன். இத்தனைக்கும் 250 மில்லி பாலை 7 வெள்ளி (` 112)க்கு விற்பனை செய்றாங்க. ‘‘ஆட்டுப் பால்ல, ஒரு வித வாசம் அடிக்கலையானு?” கேட்டேன்.
அந்த சீன விவசயி ‘கண்ட, கண்ட மருந்தை எல்லாம் இங்கிலீஷ் மருந்துனு சொல்லி, வாங்கி குடித்து பணத்துக்கும், உடம்புக்கும் வேட்டு வைக்கிறோம். ஆனால், ஆடுகள், மனிதர்களை விட புத்திசாலிகள். தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளைப் பார்த்து மேய்ந்து, அதன் பாலை நமக்கு மருந்தாகக் கொடுக்குது. சுருக்கமா சொன்னால், ஒவ்வொரு ஆடும், நடமாடும் மருந்து தொழிற்சாலை. ஒரு பொருளை விரும்பினால், அதுல இருக்கிற குறை தெரியாது. நிறைதான் தெரியும். எங்களைப் பொறுத்தவரை ஆட்டுப்பாலில் நெடி அடிக்கவில்லை. வாசம்தான் வீசுது‘னு நெத்தியில அடிச்ச மாதிரி பதில் சொன்னாரு.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ‘ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால் இந்தப் பாலை அருந்தினால், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சலை குணமாக்கும்’னு வீதிக்கு வந்து பிரசாரம் செய்தாரு.