
புறா பாண்டி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘‘சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா? இதனால் என்ன நன்மைகள்?’’
மா.வ.செளந்தரராஜன், திருச்சிராப்பள்ளி.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர்.ஆறுமுகம் பதில் சொல்கிறார்.
சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளியிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. காரணம், மழை பெய்யும் காலங்களில் வெங்காயம் வயலில் இருந்தால் அழுகிவிடும். அதைத் தவிர்க்கவே, குறிப்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்துவருகிறோம்.
இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக, கோயம்புத்தூர் உள்ளிட்ட

சில பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் நிலவும், தட்ப வெப்பநிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன. வெங்காய விதைகளை நாற்றங்கால் விட்டு, அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும். ஆனால், நேரடியாக விதை வெங்காயத்தை விதைக்கும் போது, ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு டன் அளவுக்கு விதை தேவைப்படும். தற்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அதேசமயம், வெங்காய விதைகளின் விலை ஒரு கிலோ
4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே!
எங்கள் துறையின் மூலம் வெங்காய விதைகளை விற்பனை செய்கிறோம். விதைவெங்காயம் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் நாங்கள் விதைகளையும் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். விதைவெங்காயம் பற்றி கூடுதல் விவரங்கள்அறிந்துகொள்ள திருச்சியில் உள்ள மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியில் உள்ள காய்கறித்துறையை அணுகலாம்.
தொடர்புக்கு,
தொலைபேசி: 0431-2918033/2918034
‘‘எங்கள் பகுதியில் மயில் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்கள்?’’
கே.கண்ணகி, விராலிமலை.
திருச்சியில் உள்ள ‘குடும்பம்’ தொண்டு நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் பதில்

சொல்கிறார்.
“இயற்கையாகவே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. குறிப்பாக விராலிமலைப் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகம்தான். மயில்கள் மட்டுமல்ல பல இடங்களில் குரங்குகளும் வயல்வெளிகளில் நடமாடி, விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணுகின்றன.
இந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான உணவு, காடுகளிலேயே கிடைத்ததால், அவையெல்லாம் வயல்வெளிகளுக்கு வரவில்லை. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு இல்லாமல் போனதால் அவை உணவுக்காக விவசாய நிலங்களுக்கு வருகின்றன.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்களை விரட்ட ஒலி எழுப்புவது, ஒலிநாடாக்களை வயலில் சுற்றி கட்டி வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஒலிநாடாக்கள் காற்றில் அசையும்போது ஒலி எழுப்பும். இதற்கு மயில்கள் பயந்துகொண்டு வருவதில்லை சில பகுதிகளில் மீன் அமீனோ அமிலத்தை பயிர்களில் தெளித்துவிடுகிறார்கள். மீன் அமிலத்தின் வாசம் உள்ளவரை மயில்கள் வராது. வாசம் போய் விட்டால், மீண்டும் மயில்கள் வரத்தொடங்கும்.

இவை எல்லாம் தற்காலிக தீர்வுகள்தான். நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், ஊரிலிருக்கும் அனைத்து விவசாயிகளும் கூடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஊருக்குப் பொதுவான இடம், அருகில் உள்ள காடு போன்ற இடங்களில் தானியங்களை விதைத்து விட்டால், அவை விளைந்தவுடன் மயில்களுக்கு உணவாகும். கீழே சிந்தும் தானியங்கள் மீண்டும் மீண்டும் முளைத்து மயில்களுக்கு உணவாகிக் கொண்டே இருக்கும். இதற்குப் பிறகு, ஊரிலிருக்கும் வயல்களின் பக்கம் மயில்கள் வராது. மறந்தும் கூட, மயில்கள் நடமாடும் பகுதிகளில், அவற்றைக் கொல்லும் விதமாக விஷங்களைத் தெளித்துவிடக்கூடாது. விலங்குகள், பறவைகள் போன்றவற்றை துன்புறுத்துவதும், வேட்டையாடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.”
தொடர்புக்கு, செல்போன்: 98426-14413
‘‘நாங்கள் விவசாயத்துக்கு புதியவர்கள். சூரியகாந்தியை சாகுபடி செய்ய விரும்புகிறோம். வழிகாட்டுங்கள்?’’
வீ.மலர், நாவல்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துகள் துறையின்

தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.
‘‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி என்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி 0.55 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 0.41 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த சூரியகாந்தி விதை உற்பத்தியில் இம்மாநிலங்கள் 82 சதவிகிதம் பங்களிக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன், ரஷ்யா, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது.
ஈரோடு, கரூர், ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. சூரிய காந்தி சாகுபடியைப் பொறுத்தவரை அடிப்படையாக ஒரு பிரச்னை உள்ளது. அதாவது, பறவைகள் சூரிய காந்தி விதைகளை விரும்பி உண்ணும். எனவே, குறைந்தபட்சம் 100 ஏக்கர் அளவில் ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் மட்டுமே, பறவைகள் மூலம் ஏற்படும் சேதம் சற்று குறையும். ஊரில் நீங்கள் மட்டும் சாகுபடி செய்தால், பறவைகள் அனைத்தும் உங்கள் சூரியகாந்தியை பதம் பார்த்துவிடும். எனவே, முதலில் 25 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்யவும். பறவைகள் வருகை எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு, சாகுபடி அளவை விரிவுப்படுத்தலாம்.

கோ-2 என்ற ஒட்டு ரகம் நல்ல விளைச்சலைத் தருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் விதைப்பு செய்யலாம். ஏக்கருக்கு 1,800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ.35 வரை விற்பனையாகிறது. விதைகள் தேவைப்பட்டால், எங்கள் துறையில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.’’
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்துக்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 , தொலைபேசி: 0422-2450812
