மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!

மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!

கோடை காலம்  கொடுக்கிற வரங்கள்ல ‘மாம்பழமும்’ ஒண்ணு. தமிழ்நாட்டுல மாம்பழம்னு சொன்னா, சேலம்தான் நினைவுக்கு வரும். சேலத்துக்கு ‘மாங்கனி’ நகரம்’னே ஒரு பேரு உண்டு. சேலம் மாவட்டம் ஒரு காலத்துல தர்மபுரி, கிருஷ்ணகிரினு பரந்து விரிஞ்சி இருந்ததுதான் காரணம்.

சேலம் தொடங்கி கிருஷ்ணகிரி வரையிலும் மாம்பழத் தோட்டங்களா பரவி இருக்கு. ஒப்பீட்டு அளவுல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துல மாம்பழ சாகுபடியோட பரப்பளவு அதிகம். ஆனா, சேலம் பகுதியில விளையுற மாம்பழம்தான் சுவையில முதலிடத்துல நிக்குது. சேலம் பகுதியில விளையுற மாம்பழங்க நேரடியா சாப்பிடறதுக்கு ஏத்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில விளையுற மாம்பழங்களை பெரும்பாலும் பழக்கூழ் தயாரிக்கத்தான் பயன்படுத்தமுடியும்.

சேலத்து மாம்பழம் போலவே, பெயர் வாங்கின மாம்பழ ரகம் தமிழ்நாட்டுல இன்னொண்ணும்  இருக்கு.  ஒரு மாம்பழ சீசன் சமயத்துல மயிலாடுதுறைக்குப் போற வாய்ப்பு கிடைச்சது.  ஒரு நண்பரோட வீட்டுல தங்கியிருந்தப்போ, மாம்பழத்தை வெட்டி கொடுத்தாங்க. அந்த சுவையும், மணமும் ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு. இது என்ன ரக மாம்பழம்னு கேட்டு வெச்சேன். உடனே,  அந்த  நண்பர் மாம்பழம் பத்தின கதையை மணக்க மணக்கச் சொன்னார்.

1847 -ம் வருஷம் மயிலாடுதுறை (அப்போ, இந்த ஊருக்கு மாயவரம்னு பேரு) சுவிசேஷ லுத்ரன் திருச்சபையில பாதிரியாரா இருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஓக்சும், அவரது மனைவி சாரலும், பரிசுத்த இமானுவேல் ஆலயத்துக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில மாமரத்தை சாகுபடி செய்தாங்க. இந்த ரகத்தை பாதிரியார்தான் உருவாக்கினாருனும் சொல்றாங்க. அவங்க தோட்டத்துல விளைஞ்ச மாம்பழத்தை திருச்சபைக்கு வந்த மக்களுக்கு கொடுத்திருக்காங்க. அதோட சுவையும், மணமும் மக்களை மயங்க வெச்சிருக்கு. மாம்பழத்தை சாப்பிட்ட கையோட, சில பேர், அந்த மாங்கொட்டையை விதைச்சு மரமாக்கினாங்க. இன்னும் சில பேர் பாதிரியார்கிட்ட போய், மா மரகன்னை வாங்கிட்டு வந்து நடவு செய்திருக்காங்க. பாதிரியார் கொடுத்த மாங்கன்னுக்கு ‘பாதிரி’ மாமரம்னே மாயவரம் மக்கள் பேரு வெச்சிட்டாங்க. இந்த மாம்பழத்தோட தனித்தன்மை முக்கியமானது. பொதுவா மாம்பழம் நாள் ஆகிட்டா, அழுகிடும். ஆனா, இந்த பாதிரி மாம்பழம் மட்டும், அழுகாது. தோல் மட்டும் சுருங்கும். கொஞ்சம் சுவையில வித்தியாசம் தெரியும்.

169 வருஷத்துக்கு முன்னால, உருவான பாதிரி ரகம் நாகப்பட்டினம் மாவட்டத்தை தாண்டியும் இப்ப வளர்ந்து நிக்குது.

ஒவ்வொரு வருஷமும், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில ‘மேங்கோ டிப்ளமசி’ னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதாவது, பக்ரீத் பண்டிகை சமயத்துல, இந்த நிகழ்ச்சி நடக்கும். அப்போ, பாகிஸ்தான் பிரதமர், இந்தியா நாட்டு பிரதமருக்கு 10 கிலோ மாம்பழமும், ஜனாதிபதிக்கு 15 கிலோ மாம்பழமும் அழகான கூடையில வைச்சு அனுப்பி வைப்பாரு. பாகிஸ்தான் மாம்பழம்தான் சுவையில முதலிடத்துல இருக்கு... உலக சந்தையிலயும் கூட, இந்திய மாம்பழத்தை விட, பாகிஸ்தான் மாம்பழத்துக்குத்தான் வரவேற்பு அதிகம்.

நம்ம ஊர் மாம்பழத்தை சாப்பிட்டா சூடுனு சொல்லி, அமெரிக்காவுல இருந்து இறக்குமதியாகிற ஆப்பிள் ஆப்கன் அத்தினு சாப்பிடற மக்களும் இருக்கத்தான் செய்யறாங்க. மக்கள் வசிக்கிற பகுதியில ஒரு பருவத்துல விளையுற காய், கனிங்க அந்தப் பருவநிலையை, சமாளிக்கக் கூடியதா இருக்கும். அதனால, மாம்பழம் கிடைச்சா, மாம்பழத்தைச் சாப்பிடணும், கொய்யா பழம் கிடைச்சா கொய்யா சாப்பிடணும்னு தமிழ் மருத்துவம் சொல்லுது.

‘‘மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது. 11 ஆண்கள், 9 பெண்களுக்கு தினமும் 100 கிராம் மாம்பழத்தை மூன்று மாதங்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்து பார்த்தோம். அப்போது, அவர்களின் உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்திருந்தது. பெண்கள் மார்பில் ஏற்படும் புற்று திசுக்கள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கு.  மாம்பழத்துல இருக்கிற ஏ.சி, பி-6 போன்ற வைட்டமின்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுதுனு அமெரிக்காவுல இருக்கிற ‘ஃபெடரேசன் ஆஃப் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் எக்ஸ்பரீமென்டல் பயாலஜிங்’கிற (Federation of american societies for experimental biology) அமைப்பு அறிவிச்சிருக்கு.