மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!

மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!

ஓவியம்: ஹரன்

மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!

மின்சாரக் கட்டணத்தைக் கட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மா வாத்தியாரைப் பார்க்கவும், அவரோடு இணைந்துகொள்ள, இருவரும் பேசிக் கொண்டே தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். தோட்டத்தில் இருந்து கிளம்ப எத்தனித்துக்கொண்டிருந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், இருவரையும் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டார்.

“என்னய்யா எங்கேயோ கிளம்பிட்ட போல இருக்கு” என்று காய்கறி கேட்கவும், “நேத்து லேசா மழை பேஞ்சதால தண்ணி கட்டுற வேலை இல்லை. ரொம்ப நேரமா உங்களை எதிர்பார்த்துட்டே உக்காந்திருந்தேன். உங்களையும் காணோம். அதனால லோன் விஷயமா சொசைட்டிக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்திடலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றார். அப்படியே மூவரும் கல்திட்டில் அமர்ந்துகொள்ள, ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், ஏரோட்டி.

“மானாவாரி பயிர்களை எப்படி வறட்சியில் இருந்து பாதுகாக்குறதுனு ‘பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர்’ சண்முகம், விவசாயிகளுக்கு யோசனை சொல்லியிருக்கார். ‘மானாவாரியா விதைச்ச கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி மாதிரியான பயிர்கள் மழை இல்லாததால வாடிக்கிட்டு இருக்கு. அதனால, இந்தப் பயிர்களை வறட்சியிலிருந்து காப்பாத்த வேண்டியது அவசியம். 100 மில்லி ‘மெத்தைலோ பாக்டீரியா’ங்கிற திரவ வடிவ நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்துல பயிர் மேல நல்லா படுறபடி தெளிக்கணும்.

15 நாட்கள் கழிச்சு திரும்பவும் இதேமாதிரி தெளிக்கணும். இப்படி செஞ்சா பயிர்கள்ல உயிரோட்டம் குறையாது. செடிகள்ல இலைப் பரப்பு, இலைத் துளைகளோட எண்ணிக்கை, பச்சையம் எல்லாத்தையும் அதிகப்படுத்த முடியும். அதனால மகசூலும் கூடும். இந்த நுண்ணுயிர் உரத்தை கண்டிப்பா ரசாயன உரத்தோட கலந்து பயன்படுத்தக்கூடாது’னு சண்முகம் சொல்லிருக்கார்” என்றார், ஏரோட்டி.

காய்கறி, தான் கொண்டு வந்திருந்த நீராகாரத்தை ஆளுக்குக் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்துவிட்டு  “பேரையூர்ல இருக்குற எங்கக்கா வந்திருந்தப்போ, கால் மூட்டை புழுங்கல் அரிசி கொடுத்துட்டுப் போனா. அந்த ஏரியாவுல நிறைய பேர், அவங்களாவே நெல்லை அவிச்சு அரிசியா அரைச்சுக்குவாங்க. அதனால சோறு சுவையா இருக்கும். நீராகாரம்கூட சுவையா இருக்கும்” என்று கூடுதல் தகவல் கொடுத்தார்.

மட்டை ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சுவையான நீராகாரத்தை ரசித்துக் குடித்தபடியே ஒரு செய்தியை ஆரம்பித்தார், வாத்தியார்.

“ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சுத்தியிருக்குற நரிப்பையூர், குதிரைமொழி, மாணிக்க நகர் உள்ளிட்ட பகுதிகள்ல பனைமரங்கள் நிறைய இருக்கு. இந்தப்பகுதிகள்ல ஓலைப்பெட்டி, பாய்னு பனைப்பொருட்கள் தொழிலும் சிறப்பா நடக்குது. வீடுகள், தோட்டங்களுக்குப் பனைமட்டை கொண்டுதான் இந்தப்பகுதிகள்ல வேலி அமைப்பாங்க.

மட்டை ஓரத்துல அரம் மாதிரி முள்ளு முள்ளா இருக்குறதால சிறு பிராணிகள்கூட அதுக்கு இடையில நுழைய முடியாது. இந்த மட்டைகள் வெயில்லயும், மழையிலயும் இருந்தாக்கூடப் பத்து வருஷத்துக்கு மேல அப்படியே இருக்குமாம். இப்போ இந்த மட்டைகளோட பயன்பாடுகளைத் தெரிஞ்சுக்கிட்டு, வேலி அமைக்கிறதுக்காகப் பல ஊர்கள்ல இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து பனை மட்டைகளை வாங்கிட்டுப் போறாங்களாம். அதனால மட்டைகளுக்குக் கிராக்கி அதிகரிச்சுருக்குதாம். ஒரு மட்டை 50 காசுனு இப்போ விற்பனையாகிட்டுருக்குதாம்” என்றார், வாத்தியார்.

அந்த நேரத்தில், ஏரோட்டியின் செல்போனில் ஓர் அழைப்பு வர, எழுந்து சென்றார். அத்தோடு மாநாடும் முடிவுக்கு வந்தது. 

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016 குறித்த கட்டுரை இந்த இதழில் இடம் பெறவில்லை.

கோமாரி தடுப்பூசி... தரத்தில் குறையில்லை!

கடந்த 10.10.2016 ‘பசுமை விகடன்’ இதழில் வெளியான ‘மரத்தடி மாநாடு’ பகுதியில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி தரமற்ற வகையில் இருக்கிறது என விவசாயிகள் சொன்ன புகார் குறித்து எழுதியிருந்தோம். இதுகுறித்து ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார், தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை இயக்குநர் த.ஆபிரகாம்.

அக்கடிதத்தில், ‘‘கோமாரி தடுப்பூசி மருந்துக்கு ‘இந்தியன் இம்யூனோலாஜிகல்’ உள்ளிட்ட 4 நிறுவனங்களை மத்திய அரசு பரிந்துரை செய்து, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தியது. அதன்படி, குறைந்த விலைப்புள்ளி அளித்த ‘ப்ரில்லியன்ட் பயோ ஃபார்மா லிமிடெட்’ என்னும் நிறுவனத்திடம் கோமாரி தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இம்மருந்தின் மூலம், செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து 28-ம் தேதி வரை, தமிழகத்தில் 51 லட்சத்து 98 ஆயிரத்து 85 மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட மாடுகளுக்குப் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. மருந்தின் அளவும் சரியாக 100 மில்லிதான் உள்ளது. ஒருவேளை மருந்தின் அளவு குறைவாக இருந்தாலோ, மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, உடனே எங்கள் அலுவலகத்துக்குப் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 24338714.