
புறாபாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார்

“நாட்டுப் பசு மாடுகள் வளர்த்து வருகிறோம். இதன் சிறுநீரைச் சேகரித்து, மருந்துப் பொருட்கள் தயாரிக்கவுள்ளோம். ஆனால், சிறுநீர் சேகரிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு எளிய வழிமுறை உண்டா?”
எம்.பரமேஸ்வரி, ஓமலூர்.

சேலம், நாமமலை அடிவாரத்தில் உள்ள ‘சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.
“நாட்டு மாட்டின் பால் மட்டுமல்ல, அதன் சிறுநீரும் மருத்துவக் குணம் கொண்டது. இதற்கான தேவை அதிகரித்து வருகிறது. பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அமுதகரைசல், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையைச் சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாகச் சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம்.

மருந்து தயாரிக்கப் பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அடிப்படையான விஷயம்.
சிறுநீரைப் பிடிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.
பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவக் குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், 3 நாட்களில் அதைப் பயன்படுத்தி மருந்து தயாரித்துவிட வேண்டும். வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் கூடுதலாக சிறுநீர் கழிக்கும். அந்த நேரத்தில் சிறுநீர் சேகரிப்பில் ஈடுபடலாம். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர் விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் சிறுநீர் கொடுத்து வருகின்றன.”
தொடர்புக்கு, செல்போன்: 94432 29061.
‘‘நாவல் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ளோம். எந்த ரகம் ஏற்றது?’’

ஆர்.சிவராமன். விழுப்புரம்.
மரம் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த ‘மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.
‘‘இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நாவல் பழ மரங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அதிக லாபம் தரும் பழமாக வணிக ரீதியில் சாகுபடி செய்யப்படுகிறது. நம் நாட்டில் அழகுக்காகவும் நிழலுக்காகவும் சாலையோரத்தில் வளர்க்கப்படுகிறது. கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம். சென்னை நகரில் இன்றும்கூட, சாலை ஓரங்களில் பல நாவல் மரங்கள் தப்பித்து நிற்கின்றன. இந்த மரங்கள் சுமார் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. நாவல் மரங்கள் பெரும்பாலும் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. நல்ல சதையுடன் கூடிய பெரிய வகைப் பழங்களைத் தேர்வு செய்து அவற்றின் விதைகளைப் பாலித்தீன் பைகளில் போட்டு முளைக்க வைத்து நடவுக்குப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நாவல், ராஜேந்திரா, கொங்கண்.. எனப் பல வகையான ரகங்கள் உண்டு.
இதில் ஒட்டுக்கட்டப்பட்ட ‘ஜம்பு’ என்ற பெரிய ரக நாவல்தான் விரும்பி சாகுபடி செய்யப்படுகிறது. சமீபகாலமாக ஆந்திர மாநிலத்தில் ‘ஜம்பு’ நாவல் சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் ‘ஜம்பு’ ரக நாவல் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சில தனியார் நாற்றுப்பண்ணைகளிலும் ‘ஜம்பு’ நாவல் கன்றுகள் கிடைக்கின்றன. ஒட்டுக் கட்டிய ‘ஜம்பு’ நாவல் 4 அல்லது 5 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கிவிடும். இப்பழ மரங்கள் எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. களர், உவர் மற்றும் உப்புத் தன்மையால் பாதிக்கப்பட்ட நிலங்களிலும் நன்கு வளரக்கூடியது.

25 அடி இடைவெளியில் நாவல் மரங்களை நடவு செய்யலாம். இதன்படி ஏக்கருக்கு 75 மரங்கள் பிடிக்கும். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், பஞ்சகவ்யா, ஜீவாமிர்த கரைசல் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்லது. பூச்சி விரட்டியைத் தெளிப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய்களைத் தடுக்க முடியும். அதிகத் தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். மானாவாரியிலும் வளரும் தன்மை கொண்டது. நாவல் மரத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்த ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும்.
நாவல் பழத்தில் 70 சதவிகிதப் பகுதி உண்ணப் பயன்படுகிறது. இனிப்போடு துவர்ப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும் இப்பழங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளதால் ஜாம், ஜல்லி, வினிகர் மற்றும் ஒயின் தயாரிக்கப் பயன்படுகிறது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் இப்பழங்களை அறுவடை செய்யலாம். நான்கு ஆண்டுகள் கடந்த மரம் ஆரம்பத்தில் 50 கிலோ பழங்களை மகசூலாகக் கொடுக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 80 முதல் 100 கிலோ பழங்களை மகசூலாக கொடுக்கும். தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் நாவல் பழங்கள் கிலோ 120 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஏக்கருக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை லாபம் எடுக்க முடியும்.’’
தொடர்புக்கு, செல்போன்: 93661 09510.
‘‘பாரம்பர்ய மாடுகள் வளர்த்து வருகிறோம். பாரம்பர்ய இன மாடுகளின் உறை விந்து குச்சிகள் மற்றும் காங்கேயம் கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’
எம்.சந்தானம், அவிநாசி.

“மைசூரை ஆட்சி செய்த, ஹைதர் அலியின் படைக்குத் தேவையான குதிரைகளை வளர்க்க உருவாக்கப்பட்டதுதான், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள அரசு கால்நடைப் பண்ணை. ஆங்கிலேயர் காலத்திலும் குதிரைப் பண்ணையாகவே நீடித்தது. விடுதலைக்குப் பிறகு தமிழக அரசின் மாவட்ட கால்நடைப் பண்ணையாக மாற்றப்பட்டது. ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணை, சுமார் 1,700 ஏக்கரில் உள்ளது. இது ஆசியக் கண்டத்தில் உள்ள பெரிய கால்நடைப் பண்ணை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, காங்கேயம் காளை உள்ளிட்ட நாட்டு மாடுகளின் உறை விந்து குச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை தங்களது பகுதி கால்நடை மருத்துவமனை மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். கால்நடை மருத்துவமனையில் உறை விந்து குச்சி குறித்து போதுமான தகவல் கிடைக்கவில்லை என்றால் ஓசுர் கால்நடைப் பண்ணையை தொடர்பு கொள்ளவும். மேலும், காங்கேயம், சிவப்பு சிந்தி நாட்டு மாட்டுக் கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.”
தொடர்புக்கு, மாவட்ட அரசு கால்நடைப் பண்ணை, மத்திகிரி, ஓசூர்-635110. தொலைபேசி 04344 262632.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.