மற்ற எபிசோடுகள்
Published:Updated:

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

நீங்கள் கேட்டவைபுறாபாண்டி

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

‘செம்மரம் வளர்க்க விரும்புகிறோம். ஒரு டன் என்ன விலைக்கு விற்பனையாகிறது. இதை விற்பனை செய்வதில் பிரச்னை இருக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?’’

சி.நடராஜன், திருவள்ளூர்.

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?



கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

‘‘செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு வைக்க ‘சொத்துடைமைக் குறி’ (Property Mark) தடி மரங்கள் மீது குறியீடாக (வெட்டிய 15 நாட்களுக்குள்) அடையாளப்படுத்த வேண்டும்.

சொத்துடைமைக் குறி பதிக்கப்பெற்ற தடி மரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு தடி மரங்கள் (Timber Transit Rules, 1965) எடுத்துச் செல்லும் விதிகளின்படி ஃபார்ம் II மூலம் வன அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். வன அலுவலரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பிறகே, தடி மரங்கள் எடுத்துச்செல்ல முடியும்.

செம்மரத்திற்கு வனத் துறையின் தலைவரிடமிருந்து சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆர்ஜின் (Certificate Of Orgin) அதாவது செம்மரம் உற்பத்திச் சான்றிதழ், தமிழகத்தின் பூர்விக மரம் செம்மரம்தான் என்கிற சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஆந்திர அரசு, செம்மரம் எங்கள் மாநிலத்தில் இயற்கையாக வளர்ந்த பூர்விக மரமாகும். தனிமரமாக, செம்மரம் வளர்க்க முடியாது எனவும் மற்ற மாநிலங்கள், தமிழகம் உட்பட யாருக்கும் மேற்படி சான்றிதழ் அளிக்க உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உண்மையில், ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திர வனப் பகுதியில்தான் செம்மரங்கள் அதிகளவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆந்திர மாநிலம் தங்கள் பகுதியில் மட்டுமே செம்மரம் உள்ளது என்று சொல்லிவருகிறது.

ஆகவே, இயற்கையில் வளர்ந்த செம்மரம் என்கிற பூர்விகச் சான்றிதழ், தமிழகத்தில் வளர்ந்துள்ள செம்மரங்களுக்குக் கிடைப்பதில்லை. நமது விவசாயிகள் தமிழக அரசின் மூலம் ஆந்திர அரசு பூர்விக மரம் எனச் சொந்தம் கொண்டாடும் செம்மரம் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தமிழகத்திலும் செம்மரங்கள் இயற்கையில் வளரும் என்றும் பூர்விகச் சான்றிதழ் தமிழக வனத்துறை வழங்கவும் அனுமதி பெற வேண்டும்.

மேலும் செம்மரங்கள் அரிய வகைத் தாவரமாக ஐயூசிஎன் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்துள்ளது. செம்மரங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகளுக்குச் செம்மரம் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உலகளாவிய மரப் பாதுகாப்பு அமைப்புகள் கோரியுள்ளன. இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆகவே செம்மரங்களை, தடி மரங்களாக வெட்டி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அளவில் உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஒரு டன் மரம் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகிறது என்பது கவனிக்கத்தக்கது.’’

தொடர்புக்கு, செல்போன்: 94433 84746, 99432 84746.

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

‘‘ஸ்பைருலீனா என்ற சுருள்பாசியை வளர்க்க விரும்புகிறோம். இதன் விற்பனை வாய்ப்புகள் குறித்துச் சொல்லுங்கள்?’’

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?



கே.கவிதா, புதுச்சேரி.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வள அலுவலர் பயிற்சி நிலையத்தின் பேராசிரியர் டாக்டர். கி. ராவணேஸ்வரன் பதில் தருகிறார்.

“தற்போது ஸ்பைருலீனா பாசி வளர்ப்பு என்பது ‘குடிசைத்தொழில்’ என்கிற நிலை தொடங்கி, அதிநவீனத் தொழிற்சாலைகளில் நடக்கும் ‘பெரும்தொழில்’ என்று பல மட்டங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. இப்பாசி வளர்ப்பு, இத்தனை வேகமாகப் பரவி வர காரணம் அதில் உள்ள சத்துக்கள்தான். வைட்டமின் பி-12 என்கிற சத்து இதில் உள்ளது. ரத்தச்சோகையை நீக்கும் வல்லமை இதற்கு உண்டு. இந்தியாவில் ரத்தச்சோகை பாதிப்புக்கு ஆளானோர் அதிக அளவில் இருப்பதால், ஸ்பைருலீனா பாசியை ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பாசியைத் தூள் செய்து, எலுமிச்சம் பழச் சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இப்பாசியை உணவோடு சேர்த்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல கால் நடைகளுக்கும் சிறந்த உணவாக இப்பாசி பயன்படுகிறது. மாட்டுத் தீவனம் தயாரிக்கும்போது இப்பாசியைக் கலந்து தயாரித்தால், மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்குக் கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலீனா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்குக் கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். சென்னை அருகே உள்ள கொளத்தூரில் நிறைய மீன் பண்ணைகள் உள்ளன. அங்கு அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் விதை மீன்கள் உற்பத்தி நடந்துவருகிறது. இதை குறிவைத்து இப்பகுதியில் இயங்கும் மீன் தீவனத் தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்பைருலீனாவை வாங்கிக்கொள்ளத் தயாராக உள்ளன. தீவனத்துக்காக வாங்கும்போது பாசியில் உள்ள புரதச்சத்தின் அளவைக் கணக்கிட்டு, விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். உதாரணமாக, 60 முதல் 65% புரதச்சத்து உள்ள பாசிக்கு நல்ல விலை கிடைக்கும்.

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள், சீனாவில் இருந்துதான் இப்பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய உற்பத்திக்கு மதிப்புக் கூடியிருக்கிறது. ஸ்பைருலீனா பாசி வளர்ப்பு விற்பனை வாய்ப்புகள் மற்றும் மீன் வளர்ப்பு முறைகள் குறித்துத் தொடர்ந்து கட்டணப் பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

டிசம்பர் 14-15 தேதிகளில் கிஃப்ட் திலேப்பியா மற்றும் கெளுத்தி மீன் வளர்ப்புப் பயிற்சியும்கூட நடைபெற உள்ளது. இரண்டு நாட்களுக்கும் ரூ.500 கட்டணம். பயிற்சிச் சான்றிதழ் மற்றும் கையேடு வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தகவல் பெற எங்கள் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.’’

தொடர்புக்கு. இயக்குநர், மீன்வள அலுவலர் பயிற்சி நிலையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகம், இரண்டாவது தளம், அசோக் நகர், சென்னை-83.
தொலைபேசி: 044 24740744.

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

‘‘தேனீ வளர்ப்புக்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’

க.பாலமுருகன், திருவெறும்பூர்.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது. இதற்குக் கட்டணம் உண்டு. இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பு பற்றிய அடிப்படையான விஷயங்களுடன் ‘பெட்டிகள் எங்கு கிடைக்கும், தேனை எப்படி விற்பனை செய்வது?’ போன்ற தகவல்களும் கிடைக்கும்.’’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003. தொலைபேசி: 0422 6611214.

1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400-22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.