மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

புறா பாண்டி

‘‘கிராம மக்களுக்குப் பயனுள்ள காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள். மேலும், மரப் பயிர்களுக்குக் காப்பீடு வசதி உள்ளது எனக் கேள்விப்பட்டோம். எந்த வகையான மரங்களுக்குக் காப்பீடு செய்யலாம்?’’

சி.சாந்தகுமார், ஈங்கூர். 

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

சென்னையில் உள்ள ‘யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை மேலாளர் பன்சல் பதில் சொல்கிறார்.

‘‘கிராமப் பகுதிகளுக்கான காப்பீடு திட்டத்தில் பயிர்கள், தொழில்கள், உபயோகிக்கும் பொருள்கள்... என அனைத்துக்கும் காப்பீடு செய்துகொள்ள முடியும். வாகனங்களுக்குக்கூட காப்பீடு செய்திருக்கும் நாம், எந்நேரத்திலும் பாதிக்கப் படக்கூடிய விவசாயப் பயிர்களுக்குக் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப்புற காப்பீட்டுத் திட்டத்தில் கிராமத்தில் வசித்துவரும் ஒரு நபர், அவருக்கு உரிமையான சைக்கிள், வீடு, பயிர்கள், ஆடு, மாடு, கோழி, பம்ப்செட், சொட்டுநீர்ப்பாசனக் குழாய், தானியங்களைச் சேமிக்கும் கிடங்கு, தேனீப் பெட்டி, பசுமை வீடு என அனைத்தையும் காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் காலத்தில் நிகழும் எதிர்பாராத தீ விபத்து, மழை, வெள்ளம், நோய்த் தாக்குதல், கலவரங்களால் ஏற்படும் சேதம், வனவிலங்குகளின் தாக்குதல், பாம்பு கடித்தல், மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொள்வது... போன்றவற்றால் நிகழும் விபத்துகளுக்கு இழப்பீடு கிடைக்கும். 

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

ஒரு விவசாயி, தனது வீடு மற்றும் தோட்டத்தில் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்து ‘ஃபார்ம் பேக்கேஜ் பாலிசி’ என்ற பெயரில் ஒரே காப்பீடாக எடுக்கலாம். இதில் விளைபொருள்கள் திருட்டு, தீ, வெள்ளம், கலவரம்... என எந்த வகையில் இழப்பு ஏற்பட்டாலும் இழப்பீட்டைப் பெறலாம். இதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”



‘ஜனதா பாலிசி’ திட்டத்தில் பாம்பு கடித்தல், குடிசை பாதிக்கப்படுதல் போன்றவற்றுக்கு இழப்பீடு கிடைக்கிறது. பெண்களுக்கான ‘அன்னை தெரசா மகளிர் காப்பீட்டுத் திட்டம்’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்காக இருபதுக்கும் மேற்பட்ட ‘மைக்ரோ காப்பீடு’ திட்டங்கள் இருக்கின்றன. பசுமைக் குடில், மூலிகைப் பண்ணை, நர்சரி தொழில் செய்பவர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.

‘தேசிய வேளாண்மைப் புதுமைத் திட்டம்’ மூலம் மரப்பயிர்களுக்கும் காப்பீட்டு செய்யும் திட்டம் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வணிகரீதியாக பயன்படும் சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு, சவுண்டல் (சூபாபுல்), குமிழ், சிசு, பெருமரம் ஆகிய ஏழு மரங்களுக்கு மட்டும், தற்போது காப்பீடு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இவை ஏழு வருடங்களுக்குள் பயன்தரும் மரங்கள்.

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”


தீப்பிடித்தல், அரசுத் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுதல், இடி, மின்னல், நோய்கள், வனவிலங்குகள், வெள்ளம், கலவரங்களால் ஏற்படும் சேதம் போன்ற இயற்கைக் காரணங்களுக்கு இழப்பீடு பெறலாம், காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவை அரசின் அறிவிப்புக்கு தக்கப்படி மாறுபடும். இந்தத் திட்டம் குறித்துக் கூடுதல் விவரங்கள் பெற எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.’’ தொடர்புக்கு,
 
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம், சென்னை. தொலைபேசி: 044 28575404/304

‘‘இறவையில் எள் சாகுபடி செய்துள்ளோம். எந்தச் சமயத்தில் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டுமென்று சொல்லுங்கள்?’’
 
சி.ராமபாண்டியன், நடுவக்குறிச்சி. 

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பதில் சொல்கிறார். ‘‘எள், உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, தட்டைப்பயறு, சோயா போன்ற 90 நாள்கள் வயதுகொண்ட பயிர்களுக்கு ஜீவாமிர்தத்தின் முதல் தெளிப்பு, விதைப்புச் செய்த 21-ம் நாள் தெளிக்க வேண்டும்.

100 லிட்டர் நீரில், 5 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்து 21 நாள்கள் கழித்து இரண்டாவது தெளிப்பு. 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்திலும் மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்கிற விகிதத்திலும் கலந்து தெளிக்க வேண்டும்.

நான்காவது தெளிப்பு, பயிரில் பால் பிடிக்கும் தருணத்தில் செய்யப்பட வேண்டும். 200 லிட்டர் நீருடன், பசு அல்லது எருமை மாட்டின் மோர் 5 லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கிடைக்கிறது. இதனால் பயிர் வேகமாக வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும்.’’

நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா?”

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும்  அனுப்பலாம்.