
சுற்றுச்சூழல் ‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன்

உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனித்துவமான குணத்தைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மரங்கள் வளர்கின்றன. பாலைவன நிலங்கள், பனிப்பிரதேச நிலங்கள், சதுப்பு நிலங்கள், தரிசு நிலங்கள்... எனச் சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகை நிலத்திலும் மரங்கள் வளர்கின்றன. அந்த வகையில், அதிக பனி பெய்யும் மலைப்பிரதேசங்களில் வளர்பவை ‘ஊசியிலை மரங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

உலகில் உயரமாக வளரக்கூடிய மரவகைகளில் ஊசியிலை மரங்களும் ஒன்று. இந்த வகை மரங்களின் தண்டுப்பகுதி உயரமாக மேல்நோக்கி வளர்ந்து, கீழ்நோக்கி கிளைகளைப் பரப்பும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் முந்நூறு அடி உயரத்துக்குமேல் வளரக்கூடியவை. இவ்வளவு உயரமாக மரம் வளர்வதால், வேரினால் உறிஞ்சப்படும் நீர், உச்சி வரை செல்வதில்லை. இதனால் உச்சிப்பகுதி குறுகி, ஊசிமுனைபோலக் காணப்படும். இந்த ஊசிமுனைகள், மரத்தில் படியும் பனியை, இலையில் தேக்கிவைத்து உறிஞ்சிக் கொள்ளும். இதனால்தான் பனிப் பிரதேசங்களிலும் இந்த வகை மரங்கள் வளர்கின்றன.
தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் ஊசியிலை மர வகைகள் வளர்வதற்கான சூழ்நிலை இருப்பதைக் கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதற்கு முன்பாக, புல்தரைகள் நிரம்பிய மலைகளாகத்தான் கொடைக்கானலும் ஊட்டியும் இருந்தன. இந்தப் பகுதிகளில் ஆங்கிலேயர்களால் நடப்பட்ட ஊசியிலை மர வகைகள் பெருகி, தற்போது மலைப்பகுதிகள் முழுவதும் இம்மரங்கள்தான் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் உயரமான சரிவுப்பகுதிகளில் குளிர்கால வெப்பநிலை, உறைநிலைக்குச் செல்கிறது. கோடைக்கால வெப்பநிலையும் அதிகமாக இருப்பதில்லை.

இந்தச் சூழலில்தான் யூகலிப்டஸ் என்ற தைல மரங்களை ஆங்கிலேயர்கள் நடவு செய்தார்கள். ‘புளுகம்’ என்ற யூகலிப்டஸ் வகை, குளிர் நிறைந்த பகுதிகளில் நடவு செய்ய ஏற்றதாக இருந்தது. இதே வெப்பநிலை, ‘மலைகளின் இளவரசி' எனப்படும் கொடைக்கானலிலும் நிலவுவதால், அங்கும் இந்த வகை மரங்கள் அதிகளவில் நடப்பட்டன. ஆனால், இந்த மரங்களால் கடும் குளிர் நிறைந்த பள்ளத்தாக்குகளில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், ஆரம்ப நிலையிலேயே இவை கருகிவிட்டன. அந்த

வெற்றிடத்தை நிரப்ப முடிவு செய்த வனத்துறை, பல்வேறு பகுதிகளிலிருந்து பைன் மற்றும் சாம்பிராணி மரங்களைக் கொண்டு வந்து நடவுசெய்தது. இந்த மரங்கள், நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறும் டிசம்பர் மாதக் கடுங்குளிரிலும் தாக்குப்பிடித்தன. இமயமலையின் மேற்கு பகுதிகளிலிருந்து, உத்தரப்பிரதேசத்தின் கார்வல் பகுதிகள் வரை கடுமையான குளிர் நிறைந்தவை. இங்கு, இயற்கையாகத் தேவதாரு போன்ற ஊசியிலை மரங்கள் வளர்கின்றன. அதைத்தவிர, பைனஸ் இனத்தைச் சேர்ந்த ‘ராக்ஸ் பர்’ இன மரங்கள், கீழ் இமயமலைப் பகுதிகளிலும், சிவாலிக் குன்றுகளின் குளிர்ப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. இந்த மரங்கள் நூறடி உயரத்துக்கு மேல் வளர்கின்றன. கடுமையான காற்றைக்கூட இவை தாங்கி வளர்கின்றன. அதிகபட்ச காற்று வீசும்போதுகூடச் சில மரங்களில் முறிவு மட்டுமே ஏற்படும். எனவே, மலைகளைக் காப்பதில் இந்த மரங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்த மரங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவே சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ‘ராகஸ் பர்’ இன பைன் மரங்கள் முதிர்ச்சியடைய 120 ஆண்டுகள் ஆகும். பல தலைமுறைகளுக்குப் பிறகே இவற்றை மரச் சாமான்கள் செய்யப் பயன்படுத்த முடியும்.
மரங்கள் அனைத்தும் ஆக்சிஜன் தருபவைதான். ஆனால், அதிகளவில் ஆக்சிஜன் தருபவை பைன் மரங்கள். இவை பசுமை மாறா ஊசியிலை வகையைச் சேர்ந்தவை. மலை வாசஸ்தலங்கள் உடலுக்கு நன்மைதரும் என்பது பைன் மரங்களைக் கருத்தில்கொண்டே கூறப்பட்டது. மலைப்பிரதேசங்கள் உயர்ந்து, கிளைகளைப் பரப்பி, கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும் பைன் மரங்கள், அழகுக்கு மட்டுமன்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கியமான இடம் வகிக்கின்றன.
- வளரும்
கொடைக்கானலில் பைன் மரங்கள்
மலைப்பிரதேசங்களில் கடும் குளிரைத் தாக்குப்பிடிப்பது மரங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். இதனால், குளிர்காலத்தில் பனி உறையும் பள்ளத்தாக்குகளில், இருபது வகையான பைன் இனங்களைத் தேர்வு செய்து, வனத்துறைப் பரீட்சார்த்த முறையில் நடவுசெய்தது. மேல்மலைப் பகுதியில் உள்ள பேரிஜம், மன்னவனூர் போன்ற இடங்களில் இந்தவகை மரங்கள் நடப்பட்டன. சில தலைமுறைகளைக் கண்ட இந்த மரங்கள், இன்னும் அறுவடைக்குத் தயாராகவில்லை. மாறிவரும் இயற்கைச் சூழ்நிலையில், இவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே மண் அரிமானத்தைத் தடுக்க முடியும். தற்போது, இவை நிரந்தரமாக வளர அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் கட்டைகள் உயர்தரமான ரூபாய் நோட்டுகள் தயாரிக்க ஏற்றவை. தவிர, வீட்டுக் கட்டுமானங்கள், பேனல் வேலைகளுக்கும் இம்மரங்கள் பயன்படுகின்றன. ஏர் கண்டிஷன் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறைகளில், குளிரை நிலைநிறுத்துவதற்காகத் தரை மற்றும் சுவர்களில் பைன் மரப் பலகைகள் பதிக்கப்படுகின்றன.
இவற்றின் நிறம், உறுதி, பளபளப்பு ஆகியவை கட்டுமான அலங்காரப் பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளன. இதுதவிர ரெசின், சாம்பிராணி போன்ற பொருள்களையும் தருகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ‘வேட்டில் மரங்கள்' ஊசியிலை மரங்களின் பட்டியலில் இல்லை.
ஊசியிலை மரங்கள்
தேவதாரு, சாம்பிராணி, பைன் வகையில் உள்ள மரங்கள், கோனிபிரஸ் வகை மரங்கள் ஆகியவை ஊசியிலை மர வகையைச் சேர்ந்தவை.
கெய்ரன்வர் சாம்பிராணி மரங்கள்
கோயம்புத்தூரிலிருந்து செல்லும்போது ஊட்டிக்கு 8 கிலோமீட்டர் முன்பாக வானுயர வளர்ந்து நிற்கும் மரக்கூட்டத்தைக் காணலாம். ‘கெய்ரன்வர்’ என அழைக்கப்படும், அந்தப் பகுதியில் ஏராளமான சாம்பிராணி மரங்கள் இருக்கின்றன. இவை, சுமார் நூறு ஆண்டுகள் வயதுடையவை. இப்பகுதியில் பறவைகள் அதிகமாக இருப்பதால்,
1987-ம் ஆண்டு இங்கு ‘சூழல் கல்வி மையம்’ தொடங்கப்பட்டது. தற்போது இப்பகுதியிலுள்ள சாம்பிராணி மரங்களைப் பார்வையிட, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காட்சிக்கூடம் ஒன்றும் இங்குள்ளது. உயரத்தில் சென்று பார்வையிடும் வகையில் ‘ட்ரீ வாக்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சாம்பிராணி மரங்களின் உயரமான கிளைகளை, கழுகு போன்ற வேட்டையாடும் பறவைகள் உபயோகப்படுத்துகின்றன. மத்தியப் பகுதியிலுள்ள கிளைகளை, ஆந்தைகள் தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. கீழ்நிலையிலுள்ள பகுதியை ஈப்பிடிப்பான், மைனா, மரங்கொத்தி போன்ற பறவைகள் பயன்படுத்துகின்றன. இப்பகுதியில் உள்ள மரங்களைப் பறவைகள், அடுக்குமாடி குடியிருப்புபோல் பயன்படுத்துவதைக் காலை, மாலை நேரங்களில் பார்த்து ரசிக்க முடியும்.