
நீர்நிலைதுரை.நாகராஜன்
தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, குளங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவருகிறது. சுற்றுச்சூழல் மீது ஆசை கொண்டவர்கள் பலர் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்து விதைப்பந்து தூவுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், மாடித்தோட்டம் அமைத்தல் போன்ற இயற்கையைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் பல நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்குமுன் இப்படிச் சீரமைக்கப்பட்ட பல நீர் நிலைகளில் தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கிக் கைமேல் பலன் கிடைத்துள்ளது.

அந்த வகையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குமேல் கேட்பாறற்றுக் கிடந்த ஒரு தடுப்பணையை மக்கள் சீரமைத்ததில் கிட்டத்தட்ட 15 லட்சம் லிட்டர் தண்ணீர் அதில் சேமிக்கப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலூகா, சமுசிகாபுரம் பஞ்சாயத்தில் அமைந்திருக்கின்றன சொக்கலிங்காபுரம், கலங்காப்பேரி, மீனாட்சியாபுரம் ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் உள்ள ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைதான் இந்த மூன்று கிராமங்களுக்கும் நீராதாரமாக இருந்து வந்திருக்கிறது. சேதமடைந்து கிடந்த இந்தத் தடுப்பணையைத்தான் இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சீரமைத்திருக்கிறார்கள். தடுப்பணை சீரமைக்கும் பணியை ஒருங்கிணைத்து வந்த முத்துக்குமாரிடம் பேசினோம்.

“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே இந்தத் தடுப்பணை சேதமாகிடுச்சு. அதனால அதிகளவுல தண்ணீர் சேமிக்க முடியலை. இப்போ கொஞ்ச வருஷமா கடுமையான வறட்சியால நிலத்தடி நீர் சுத்தமா இல்லாத நிலை உருவாகிடுச்சு. அதனால, இந்தத் தடுப்பணையைச் சரி செய்யலாம்னு முடிவெடுத்து நாலு வருஷமா அரசு அலுவலகங்களுக்கு அலையா அலைஞ்சோம். கலெக்டர், பொதுப்பணித்துறைனு மனு அனுப்பியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. நாங்களே செலவை ஏத்துக்கிறோம்னு சொல்லியும் சீரமைக்கிறதுக்கான அனுமதி கிடைக்கலை.

அதுக்கப்புறம் ராஜபாளையத்தில் இருக்கிற ‘துளி’ங்கிற அமைப்புகிட்ட உதவி கேட்டோம். அவங்க முயற்சி எடுத்து அனுமதி வாங்கிக் கொடுத்தாங்க. அப்புறம் இளைஞர்களை ஒண்ணு சேர்த்து நண்பர்கள்கிட்டயும் மூன்று கிராம மக்கள்ட்டயும் நிதியுதவி கேட்க ஆரம்பிச்சோம். துளி அமைப்பும் நிதியுதவி செஞ்சாங்க. போதுமான அளவு நிதி சேர்ந்ததும், போன ஜூலை மாசம் 19-ம் தேதி வேலைகளை ஆரம்பிச்சோம். தடுப்பணையைச் சரி செஞ்சு, வரத்து வாய்க்கால்களையும் சரி செஞ்சோம். வேலைகளை முடிச்ச உடனேயே மழை பெஞ்சுடுச்சு. இயற்கையே எங்களைப் பாராட்டுற மாதிரி நாங்க உணர்றோம். இப்போ தடுப்பணை முழுசும் நிரம்பியிருக்கு. 25 வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் இந்தத் தடுப்பணை நிறைஞ்சு நிக்கிது” என்ற முத்துக்குமார் நிறைவாக, “இப்போ தடுப்பணையைச் சுத்தி இருக்குற கிணறுகள்ல ஊற்று எடுக்க ஆரம்பிச்சுருக்கு. கண்டிப்பா எங்க மூணு கிராமங்கள்லயும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துடும்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.

கடுமையான போராட்டத்துக்கப்புறம் தான் இது சாத்தியமாச்சு. துளி அமைப்பு, ஊர் மக்கள், இளைஞர்கள் எல்லாரும் இணைஞ்சு நிதியுதவி கொடுத்து வேலை செஞ்சதாலதான் இது சாத்தியமாச்சு” என்றார், நெகிழ்வுடன்.

அவர்களுக்குப் பசுமை விகடன் சார்பில் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.