மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

ந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மரம் ‘ஆவி மரம்’. இதன் பெயரை வைத்து வேறெதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கற்பனைக்கும் இம்மரத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. இம்மரங்களைச் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் ஓரத்தில் அதிகளவில் காண முடியும். முந்தைய காலங்களில் ரயில்வே துறையின்மூலமாக நாடு முழுவதுமுள்ள ரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்குக் காரணம் உண்டு. இம்மரங்கள் புகையை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை. தொடர் வண்டிகளில் எரிபொருளாகக் கரி பயன்படுத்தப்பட்டபோது வெளியேறும் கரும் புகையை உறிஞ்சிக் கொள்வதற்காகத்தான் இம்மரங்கள் நடப்பட்டன.  

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

மேலும், ‘பிளைவுட்’ தயாரிக்க, கடைசல் வேலைப்பாடுகள் செய்ய, கட்டில்கள் செய்ய, மாட்டு வண்டிகள் செய்ய... எனப் பல விதங்களில் இம்மரம் பயன்படுகிறது. வட மாநிலங்களில் இம்மரத்தின் இலைகளைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் மற்றும் மரக்கரியாகவும் இம்மரக்கட்டைகள் பயன்படுகின்றன.

இந்த மரம் வெப்பமண்டலத் தாவரம். இது விதை மூலமாகப் பரவிப் பெருகுகிறது. இதன் விதைகள் மிகவும் மெல்லியவை. அரச இலையில் சிறிய  விதையை ஒட்டி வைத்தாற்போல தோற்றமளிக்கும். விதைகளைச் சுற்றிலும் மெல்லிய படலம் படர்ந்திருக்கும்.

விதை முதிர்ந்ததும் காற்று மூலமாக விதைப்பரவல் ஏற்பட்டு... தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் (ஜூன்-செப்டம்பர்) இயற்கையாகவே முளைத்துவிடும்.   

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

அனைத்து உயிர்களுக்குமான எண்ணிக்கையைச் சமமாகப் பராமரிக்கும் இயற்கை, இம்மரத்துக்கும் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது. காற்றின் மூலமாகப் பரவுவதால், இந்த மரங்கள் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ள வாய்ப்பு உண்டல்லவா... அதனால்தான் அந்தக் கட்டுப்பாடு. விதை முளைக்கும் காலங்களில், அந்த இடத்தில் மழைநீர் தேங்கினால் வேரழுகல் ஏற்பட்டு, இளம் செடிகள் இறந்துவிடும். அதில் தப்பிய விதைகள்தான் மரங்களாகின்றன. ஆவி மரங்கள் செடிப்பருவத்தில் மிதமான வளர்ச்சியும் முற்றிய பிறகு விரைவான வளர்ச்சியும் கொண்டவை. இம்மரங்களில் வறட்சிக்காலத்தில் இலைகள் உதிர்ந்து சில நாள்களில் மீண்டும் துளிர்க்கும். இம்மரத்தின் பலகைகள், மஞ்சள் கலந்த சாம்பல் நிறமாகவும் மிதமான கடினத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இமயமலைத்தொடரின் வெளிப்பகுதிகளிலிருந்து திருவிதாங்கூர் (கேரளா) வரை பரவியுள்ள இந்த மரம், ‘ஆயா மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலையுதிர் காடுகளிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழைக்காடுகளிலும் இம்மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!



கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரமான பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது. கரிசல் மண்ணில் இம்மரங்கள் வளர்வதில்லை. மற்ற மண் வகைகளில் நன்றாக வளரும். ஆண்டுக்கு 300 மில்லிமீட்டர் அளவு மழை கிடைக்கும் இடங்களில்கூட இம்மரம் உயிர் வாழும். ஆண்டுக்கு 500 மில்லிமீட்டர் அளவுக்குமேல் மழை கிடைக்கும் பகுதிகளில் இம்மரங்கள் சிறப்பாக வளர்கின்றன. நல்ல சூழ்நிலை அமைந்தால் நூறடி உயரம்கூட வளரும்.

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

இம்மரம், மண் கண்டம் (மண்ணின் ஆழம்) அதிகமான பகுதிகளில் செழிப்பாகவும், குறைவான பகுதிகளில் குட்டையாகவும், மணற்பாங்கான பகுதிகளில் படர்ந்ததாகவும் காணப்படும். இது மண் வகைக்கேற்ப தன்னை நீட்டி, சுருக்கி, மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. நிலத்தில் மண்ணின் ஆழம் (மண் கண்டம்) அதிகமாக இருக்கும்போது மரத்தின் உயரமும் பருமனும் அதிகரிக்கிறது. இதன் இலைகள் அடர்த்தியாக இருக்கும் என்பதால் அதிக இலையுரம் (பயோமாஸ்) கிடைக்கும். இம்மரம் வாஸ்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்படாதது என்பது இதன் தனிச்சிறப்பு.

சுவீடன் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு வனத்துறை மூலமாகச் செயல்படுத்தப்பட்ட ‘சமூகக்காடுகள் திட்ட’த்தில் மலைக்குன்றுகள், கண்மாய்க் கரையோரங்கள், சாலையோரங்கள், ரயில்பாதை ஓரங்களில் இம்மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, தற்போது நன்கு வளர்ந்து செழுமையுடன் காணப்படுகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் ‘தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம்’ மூலமாக ஆவி, வெப்பாலை, ஆச்சா போன்ற மரங்கள் அதிகளவில் நடப்பட்டுவருகின்றன.  

மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

‘ஹோலோப்டெலியே இன்ட்டெகரிஃபோலியா’ (Holoptelea Integrifolia) என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஆவி மரத்தைச் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், நேரடி விதைப்பு மற்றும் நாற்று மூலம் நடவுசெய்யலாம். ஒரு கிலோ அளவில் சுமார் 27 ஆயிரம் விதைகள் இருக்கும். நன்கு முற்றிய நெற்றுகளைச் சேகரித்து உலர்த்தி, விதைகளைச் சேமிக்க வேண்டும். இந்த விதைகளை நீண்ட நாள்கள் இருப்பு வைக்கக் கூடாது. அப்படி இருப்பு வைத்தால் முளைப்புத்திறன் குறையும்.

-வளரும் 

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற மரம்!

ம்மரத்தை நடவுசெய்து சில மாதங்கள் வரை தண்ணீர் கொடுத்தால் போதும். அதன் பிறகு தன்னால் வளர்ந்துவிடும். வறட்சியைத் தாங்கி வளரும் வகையில் படர்ந்து பரவும் வேர் அமைப்பைக்கொண்டது.

இம்மரங்களால்  அருகிலுள்ள பயிர்களுக்குப் பாதிப்பிருக்காது. எனவே தோட்டங்களிலும் ஆவி மரங்களை நடவுசெய்து வளர்க்க முடியும். மழைக்காலத்தில் மானாவாரி நிலங்களில் விதைத்தால், மழைத்தண்ணீரைக்கொண்டே வளர்ந்துவிடும். சாலையின் இரு பக்கத்திலும் இம்மரக் கன்றுகளை நடவு செய்தால், சில ஆண்டுகளில் சாலையே சோலையாக மாறிவிடும்.