மரம் செய விரும்பு! - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்!

சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படங்கள்: தி.விஜய்
வடகிழக்குப் பருவ மழையைப் பயன்படுத்தித் தரிசு நிலங்களிலெல்லாம் மரங்கள் வளர்க்கும் விதம் பற்றிக்

கடந்த இதழில் பார்த்தோம். அந்தக்கட்டுரை வெளியான பிறகு, பலரும் என்னைத் தொடர்புகொண்டு... ‘மரக் கன்றுகளை எப்படித் தேர்வு செய்வது’ என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்காகச் சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பயன்பாடு, வளரும் சூழல், மண்ணின் தன்மை, மழையளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மர வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ‘இந்த மரத்தை நட்டால் லட்சக்கணக்கில் பணம் பார்க்கலாம். கோடிகோடியாகக் கொட்டும்’ என்ற ரீதியில் வலை விரிப்பவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சதிகாரர்களின் சதுரங்கவேட்டைக்குப் பலியாகிவிடாமல், நமது பகுதியில் வளரும் மரக்கன்றுகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
விறகு, தீவன உற்பத்தி, சிறிய தடிகள், பெருமரங்கள், பழவகை மரங்கள்... எனப் பயன்பாட்டு அடிப்படையில் பிரித்து வைத்துக்கொண்டு, அவற்றில் நமக்கு எது தேவை என்று யோசித்து முடிவு செய்ய வேண்டும். இப்படித் தேர்வுசெய்த பிறகு உங்கள் பகுதியில் வளரக்கூடிய மர வகைகளை நட வேண்டும்.

வேளாண் காடுகள்:
விவசாய நிலங்களில் விவசாயத்துக்கு இடையூறு இல்லாமல், வரப்போரங்கள் மற்றும் நிலத்தைச்சுற்றியும் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். இதைத்தவிர, நிலம் முழுவதும் மரப்பயிர்களை நடவுசெய்து வேளாண் காடுகளை உருவாக்கலாம்.

வரப்போரங்களில் வளர்ப்பதன்மூலம் விவசாயத்தைப் பாதிக்காமல், விரும்பும் மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும். ஆனால், இந்த முறையில் படர்ந்து வளரக்கூடிய மரங்களைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், இத்தகைய மரங்களின் நிழல் விழுவதால் அதன் அடியிலுள்ள பயிர்கள் பாதிக்கப்படும். நிலம் முழுவதும் மரக்கன்றுகளை மட்டுமே சாகுபடி செய்வதாக இருந்தால், வரிசைக்கு வரிசை 12 அடி, செடிக்குச் செடி 10 அடி என்ற இடைவெளியில் மரக்கன்றுகளை நட வேண்டும்.
மரக்கன்றுகளை நடவுசெய்த பிறகு உளுந்து, நிலக்கடலை, பாசிப்பயறு போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர்களுக்குத் தண்ணீர், இடுபொருள்கள் கொடுக்கும்போது மரப்பயிர்களும் அவற்றை எடுத்துக்கொண்டு வளர்ந்துவிடும்.

பத்து ஆண்டுகளுக்குமேல் மரப் பயிர்களிலிருந்து கணிசமான தொகை வருமானமாகக் கிடைக்கும். 12 அடிக்கு 10 அடி என்ற இடைவெளியில் மரக்கன்றுகளை நடுவதால், உழவு முதலான பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.
விரிவாக்க வனங்கள்:
பஞ்சாயத்து நிலங்கள், கிராமப் பொது நிலங்கள் போன்றவற்றில் தீவனப்புற்கள், தீவனத்துக்கான மரங்கள், பழமரங்கள், விறகுக்கு ஏற்ற மரங்களை நடவுசெய்யலாம். விரைவாக வளரும் இயல்புடைய மரங்களைச் சாலையை ஒட்டிய நிலங்களிலும் கால்வாய்க் கரைகளிலும் நடலாம். ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் மரக்கன்று நடுவதற்குத் தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து நடவுசெய்ய வேண்டும்.
கிராமங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகளை நடவுசெய்தால், மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகளை எளிதாக வளர்த்துவிடலாம். நீர் நிலைகளின் கரையோரங்களில் பனைமரங்களை வளர்க்கலாம். வீட்டைச்சுற்றிப் பழமரங்கள் மற்றும் அதிகளவில் ஆக்ஸிஜன் வெளிவிடும் மரங்களை நடவுசெய்யலாம்.

வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் சூழ்நிலையில், இந்த அருமையான சூழல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வனத்துறை, வேளாண்துறை, தன்னார்வ அமைப்புகள் போன்றவற்றின்மூலம் மரக்கன்றுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதைத்தவிர அனைத்து நர்சரிகளிலும் நாட்டு மரக்கன்றுகள் கிடைக்கின்றன. மரக்கன்றுகளை நடவுசெய்து, தரிசு நிலங்களைத் தாவரங்களால் நிரப்புங்கள். இது நமக்கான சமூகக்கடமை.
- வளரும்
பல்வேறு பயன்பாட்டுக்கான மரங்கள்
தீவன உற்பத்திக்கு உகந்த மரங்கள்:
சவுண்டல், அத்தி, கொடுக்காப்புளி, வெள்வேல், கருவேல், வாகை, இலவம், அகத்தி, மந்தாரை, வேம்பு, கிளரிசீடியா, ஆச்சா, சிலவாகை, இலுப்பை, வன்னி போன்ற மரங்கள் பசுந்தீவனத்துக்கு ஏற்றவை. இவற்றில், சிலவகை மரங்களின் காய்களும் தீவனமாகப் பயன்படுகின்றன.
கொன்றை, வாதநாராயணன், சித்தகத்தி, பொன்னாவாரை, கிளரிசீடியா ஆகிய மரங்கள் பசுந்தாள் உர உற்பத்திக்குப் பயன்படுகின்றன.
விறகுக்கான மரங்கள்:
உசிலை, கருவேல், வெள்வேல், குடைவேல், வேலிக்கருவை, சவுக்கு, சிசு, வேம்பு, யூகலிப்டஸ், கொன்றை, வெப்பாலை, சவுண்டல், வன்னி, பரம்பை, புங்கன் ஆகிய மரங்கள் விறகுப் பயன்பாட்டுக்கு ஏற்றவை. சவுண்டல், புளி, வேலிகாத்தான் ஆகிய மரங்கள் சிறந்த எரிபொருளாகப் பயன்படுகின்றன.

சிறுதடிக்கான மரங்கள்:
வேம்பு, சிசு, வாகை, கருவேல், ஆவி, கருவாகை, மலைவேம்பு, இலுப்பை, மாமரம், கொடுக்காப்புளி, மூங்கில், தேக்கு, பூவரசு, பலா, ஆச்சா, சவுக்கு ஆகியவை சிறு தடிகளுக்கு ஏற்றவை.
பெரிய வகை மரங்கள்:
தேக்கு, தோதகத்தி, கருமருது, வெண்தேக்கு, பிள்ளைமருது, ஆச்சா, நீர்மருது, வாகை, கருவாகை, மகோகனி, வேம்பு, பனை, செம்மரம், பலா, பூவரசு ஆகியவை பெரிய மரங்களாக வளர்பவை. பல்வேறு வகைகளில் பயன்படக்கூடியவை.
காகிதம் தயாரிக்க ஏற்ற மரங்கள்:
சவுக்கு, சிசு, மூங்கில், மலைவேம்பு, குடைவேல் ஆகியவை காகிதத் தயாரிப்பில் பயன்படுகின்றன.
பழவகை மரங்கள்:
நாவல், முந்திரி, பலா, பெருநெல்லி, அருநெல்லி, விளா, கொடுக்காப்புளி, சீத்தா, இலந்தை, புளி, மா, கிளாக்காய், எலுமிச்சை, கொய்யா போன்றவை பரவலாக வளரக்கூடிய பழ மரங்கள்.
தீக்குச்சிப் பயன்பாட்டுக்கான மரங்கள்:
பெருமரம், மலைவேம்பு, இலவம், முள்முருங்கை, முள் இலவம் ஆகிய மரங்கள் தீக்குச்சித் தயாரிக்கப் பயன்படுகின்றன.
எந்த நிலத்தில் என்ன வகையான மரம்?
கரிசல் நிலத்தில் கருவேல், வாகை, வேம்பு ஆகியவற்றை நடவுசெய்யலாம். சுண்ணாம்பு நிலத்தில் வெள்வேல் சிறப்பாக வளரும். கருவேல், வேம்பு, மஞ்சணத்தி ஆகியவை களர் நிலத்தில் நன்றாக வளர்பவை.
சவுக்கு, பூவரசு ஆகியவை உவர் நிலத்துக்கு ஏற்றவை. வாகை, ஆச்சா, கொன்றை, வெள்வேல் ஆகியவை சரளை மண் நிலத்தில் சிறப்பாக வளரும். நீர் தேங்கும் நிலங்களில் கருவேல், மூங்கில், நாவல், வெள்ளை மருது, நீர் மருது, இலுப்பை ஆகியவற்றை நடவுசெய்யலாம்.