
மாத்தியோசிஓவியம்: வேலு
அண்மையில, நபார்டு வங்கியோட நிறுவன நாள் விழா சென்னையில நடந்துச்சி. அமைச்சர், அரசு

அதிகாரிகள்னு பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் வந்து, நல்லா பேசுனாங்க. தேநீர் இடைவேளை நேரத்துல, எல்லாரும் தேநீர் குடிக்க வரிசையில நின்னோம். தேநீர் கொடுக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே, ரெண்டு இளைஞர்கள் நின்னுக்கிட்டு, ஏதோ ஒரு பானத்தை ஆர்வத்தோடு ஊத்திக் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. தேநீர் வரிசையைக் காட்டிலும், அங்க ஆள்களோட எண்ணிக்கை குறைவா இருந்துச்சி. கூட்டம் குறைவா இருந்தா, ஏதோ விஷயம் இருக்குன்னு புரிஞ்சது. உடனே, அந்தப் பானத்தைக் குடிக்கப் போய் நின்னேன்.
‘‘ஐயா, இது தென்னை மரத்துலிருந்து இறக்குன நீரா பானம். இயற்கையானது, சுவையானது, ஆரோக்கியமானதுனு சொல்லிக்கொண்டே டம்ளர் நிறைய, நீராவை ஊத்திக் கொடுத்தாங்க. முதல் முறையா நீராவைச் சுவைச்சுப் பார்த்தேன். அடடா... அற்புதம், அருமை... ரெண்டு டம்ளர் நிறைய வயிறுமுட்டக் குடிச்சிட்டு திரும்பிப் பார்த்தேன். அதே நாலு பேர்தான், நீராவை ருசிச்சி குடிச்சிக்கிட்டிருந்தாங்க. மத்தவங்க எல்லாம், பவ்யமா வரிசையில நின்னும், தேநீருக்காகத் தேமேனு காத்துக்கிட்டிருந்தாங்க. இவ்வளவு அருமையான இயற்கை பானத்தைக் குடிச்சி ருசிக்காம, இப்படி வரிசையில நிக்கிறாங்களேன்னு பரிதாபமாத்தான் வந்துச்சி. ஆனா, சில விவரம் தெரிஞ்ச அதிகாரிங்க, நீராவைக் குடிச்சிட்டு, அத பத்தின விவரங்களை ஆர்வமா கேட்டதையும் பார்க்க முடிஞ்சது. நிகழ்ச்சி முடிஞ்சி, மதிய உணவு இடைவேளை விட்டாங்க, நட்சத்திர ஓட்டல் சாப்பாடுன்னா சகலமும் இருக்கும். ஆனா, எனக்கு நீரா மேலயே நினைப்பா இருந்துச்சி. அந்தக் காரசாரமான சாப்பாடைக்காட்டிலும் நீராவைக் குடிப்போம்னு, திரும்பவும் நீரா குடிச்சேன். இன்னும்கூட நீராச் சுவை நாக்குல ஒட்டிக்கிட்டே இருக்கு. நீராவைப் பத்தி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், அதோட சுவையும் மணமும் என்னைக் கட்டிப் போட்டுச்சி. நீராவை அன்போடு சுவைக்கக் கொடுத்த, காளிங்கராஜ், சரவணன்ங்கிற அந்த இரண்டு இளைஞர்கள்கிட்ட பேச்சுக் கொடுத்தேன்...

‘‘பொள்ளாச்சியில உள்ள கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், நபார்டு வங்கியின் உதவியோடு செயல்பட்டு வருது. 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், 45 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள்ல, 1,897 விவசாயிகள் உறுப்பினரான இருக்குறாங்க. இதுல 1,000 விவசாயிகள், கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்துல பங்குதாரரா இருக்காங்க. பொள்ளாச்சியில உள்ள வாணவராயர் வேளாண்மை கல்லூரியோட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கோம். அதன் மூலமா நீரா பானம், நீரா மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான நீரா கிரிஸ்டல் சுகர், நீரா ஹனி, நீரா பால்கோவா, தேங்காய் பர்ப்பினு வித விதமான பொருள்களை உற்பத்தி செய்றோம்.
பக்கத்து மாநிலமான கேரளாவுல உள்ள அளவுக்கு, நம்ம ஊர்ல நீராவுக்கு இன்னும் மரியாதைக் கிடைக்கிலைன்னுதான் சொல்லணும். அங்க, நீராவைத் தலையில தூக்கி வைச்சிக்கிட்டு கொண்டாடுறாங்க. இந்தச் சத்து நிறைஞ்ச பானத்தோட அருமையை, நம்ம மக்களுக்கும் புரிஞ்சிக்குவாங்கன்னு நம்புறோம். நீரா குடிக்கிறது மூலமா, நம்ம விவசாயிகளை வாழ வைக்கிறோம்ங்கிற எண்ணம் உருவானா போதும், நீராவுக்கு நல்ல காலம் பிறந்திடும்’’னு சொன்னவங்கிட்ட, நீரா எப்படி உற்பத்தி செய்றீங்கன்னு கேட்டேன்.

‘‘தமிழ்நாட்டுல அரசு அனுமதியோடு நீரா பானத்தைத் தென்னை மரத்துல இருந்து இறக்க, அனுமதி பெற்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள்ல, எங்க நிறுவனமும் ஒண்ணு. நீரா என்பது வெடிக்காத தென்னம் பாளைகளிலிருந்து வடித்து எடுக்கப்படும், இளம் பழுப்பு நிறமுள்ள, தித்திப்பான சாறு. தென்னம்பாளையில, புதிய ஐஸ் பாக்ஸ் தொழில்நுட்ப முறையுல நீராவை வடிச்சி எடுக்கிறோம். நீரா, இனிமை நிறைந்த பானம். 200 மில்லி அளவுள்ள, பானத்தை ரூ.30க்கு விற்பனை செய்றோம். இதுல இயற்கைச் சர்க்கரை, தாது உப்புகள், வைட்டமீன்கள்னு உடலுக்கு நல்லது செய்யுற பல பொருள்கள் உள்ளதுன்னு நாங்க சொல்லல, ஊட்டச்சத்து நிபுணருங்க சொல்றாங்க’’னு அந்த இளைஞர்கள் ஆதாரத்தோடு சொல்லி முடிச்சாங்க.
‘‘நன்கு பராமரிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்குச் சராசரியாக 140 முதல் 200 தேங்காய்கள் வரை அறுவடை செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டு வருமானமாகக் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் கிடைக்கும். ஆனால், நீரா இறக்கி விற்பனை செய்யும்போது மாதம் 1,500 ரூபாய் வீதம் 6 மாதங்களில் 9 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும். அழிந்துவரும் தென்னை விவசாயத்தைக் காப்பாற்றவும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கிடைத்துள்ள வரப்பிரசாதம்தான் நீரா’னு தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல துணை இயக்குநர் பாலசுதாகரி, பல முறை என்கிட்ட ஆதாரத்தோட நீரா மகிமையைச் சொல்லியது நினைவுக்கு வந்துச்சிங்க.