படங்கள்: வீ. சிவக்குமார், செ. சிவபாலன், மகா. தமிழ்ப்பிரபாகரன்
புறா பாண்டி
பண்ணைக் கருவிகள் சிறப்பிதழ்
##~## |
''சின்னச் சின்ன விவசாயக் கருவிகளை நான் கண்டுபிடித்திருக்கிறேன். எனது ஆராய்ச்சிகளை விரிவுப்படுத்த, நிதி உதவி கிடைக்குமா?’'
கே. கணேசன், திருவையாறு.
குஜராத் மாநிலத்தில் உள்ள தேசியக் கண்டுபிடிப்பு மையத்தின் விஞ்ஞானி டாக்டர். ஆர்.கே. ரவிக்குமார் பதில் சொல்கிறார்.
''படித்து, பட்டம் பெற்றவர்களைவிட, கிராமத்தில் உள்ள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அவர்களுடையது சிறந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை மேலும் ஆய்வு செய்து விரிவுப்படுத்த முடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். அதை நிவர்த்தி செய்து வருகிறது எங்கள் மையம்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் துணையுடன் 2000-ம் ஆண்டு எங்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதுவரை, 1 லட்சத்து 40 ஆயிரம் ஊரகக் கண்டுபிடிப்பாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். தகுதியானக் கண்டுபிடிப்புகளைத் தேர்வு செய்ய, ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறோம். இந்தப் போட்டியில் தேர்வு பெறும் கண்டுபிடிப்புகளை முறையாகப் பதிவும் செய்கிறோம். இதனால், யாரும் அந்தத் தொழில்நுட்பத்தைத் திருட முடியாது.

கண்டுபிடிப்பை விரிவுபடுத்தத் தேவையான நிதி உதவிகளைச் செய்வதோடு, வணிக ரீதியாக உற்பத்தி செய்யவும் வழிகாட்டுகிறோம். எங்கள் மையத்தில் அகில இந்திய அளவில் ஊரகக்

கண்டுப்பிடிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உங்கள் கண்டுபிடிப்பு நாடு முழுக்க பரவ வாய்ப்புகள் உள்ளன.
மேலும் நபார்டு வங்கியின் நிதி உதவியையும் கூட நீங்கள் பெற முடியும். எங்கள் அமைப்பில் இருந்து பயனுள்ள கண்டுபிடிப்பு என்று சான்று பெறப்பட்டால், இத்தகைய நிதி உதவிகளை எளிதாகப் பெற முடியும். உடனே, உங்கள் கண்டுபிடிப்பு குறித்த விவரங்களுடன் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.''
தொடர்புக்கு:
National Innovation Foundation,
India PO Box 15051,
Vastrapur
Ahmedabad 380 015,
Gujarat.
செல்போன்: 098250-71992.
''எனக்கு மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பால்பண்ணை தொடங்க விரும்புகிறேன். வங்கிக் கடன் பெற யாரை அணுக வேண்டும்?''
கே. மகேஷ், மஷார், திருவண்ணாமலை மாவட்டம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் உதவிப் பொதுமேலாளர் (தொழில்நுட்பம்) கே. சின்னதுரை பதில் சொல்கிறார்.
''பால் பண்ணைத் தொழிலை முறையாகச் செய்தால், விவசாயத்தைவிட நல்ல லாபம் பெற முடியும். பால் பண்ணைத் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, 'டெய்ரி பிளஸ்’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக 10 கறவை மாடுகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளை வாங்கும் முன்பு கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். பத்து மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் சாகுபடி செய்ய நிலம் வேண்டும். ஒரு ஏக்கர் நிலம், பத்து மாடுகளுக்கு வேண்டிய தீவனத்தை உற்பத்தி செய்ய போதுமானதாக இருக்கும். உற்பத்தி செய்யப்படும் பாலை, தனியார் பண்ணைகளுக்கோ, கூட்டுறவு சங்கத்திலோ விற்பனை செய்யலாம். புல் வெட்டும் இயந்திரம், பால் கறவை இயந்திரம்... போன்றவற்றைப் பயன்படுத்துவது, வேலைப்பளுவைக் குறைக்கும். நவீன முறைகளைப் பின்பற்றுவதால், பண்ணையை நன்கு விரிவாக்க முடியும்.

இது தவிர, இரண்டு மாடுகளுக்கான கடன், பண்ணையை விரிவுப்படுத்தக் கடன்... போன்ற திட்டங்களும் உண்டு. ஒரு லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு அடமானம் தேவையில்லை. அதற்கு மேல் கடன் பெற, கடன் மதிப்புக்கு ஈடான சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.
கறவை மாடு வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். மேலும் கடன் திட்டம் பற்றிய விவரங்களைப் பெற உங்கள் பகுதியில் உள்ள எங்களது வங்கியின் ஊரக வணிகப் பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.''
''காங்கேயம் இன மாடுகளை விரும்பி வளர்த்து வருகிறோம். சிவப்பு நிறத்தில் உள்ள செவலை, கருப்பு நிறத்தில் உள்ள காரி, பழுப்பு நிறத்தில் உள்ள குர்ரா... போன்ற நிறங்களில் காங்கேயம் மாடுகள் உள்ளன. ஆனால், பசு வெள்ளை நிறமாகவும், காளை கருப்பு மற்றும் வெள்ளை நிறமாகவும் இருந்தால் மட்டும்தான் அது காங்கேயம் இனம் என்கிறார்கள். இது சரியா?''
என்.எஸ். பழனிச்சாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், நாதகவுண்டன்பாளையம். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் மரபியல் துறை பேராசிரியர் டாக்டர். எஸ். பன்னீர்செல்வம் பதில் சொல்கிறார்.
''முற்காலத்தில் பழையக்கோட்டை பட்டக்காரர் நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார், தன்னுடைய பண்ணையில் இருந்த நாட்டுமாடுகளில் சிறந்த ரகங்களைத் தேர்வு செய்து, இனக்கலப்பு செய்து காங்கேயம் ரகத்தை இன விருத்தி செய்தார். இதற்கான ஆதாரம் ஏடுகளில் உள்ளது.

இப்படி உருவான காங்கேயம் மாடு நல்ல உழைப்புத்திறன் கொண்டது. ஏறத்தாழ டிராக்டருக்கு சமமாக, 4 டன் எடையைக்கூட எளிதாக இழுக்கும் திறன் கொண்டது. எவ்வளவு வெயிலில் வேலை செய்தாலும் அசராது. இந்தச் சிறப்புத் தன்மைகள் இருந்ததால்தான் விவசாயிகள் காங்கேயம் மாடுகளை விரும்பி

வளர்த்தார்கள். கொங்கு மண்டலத்தையும் தாண்டி பல பகுதிகளிலும் தற்போது காங்கேயம் மாடு வேகமாகப் பரவியிருக்கிறது.
காய் அடிக்கப்படாத காங்கேயம் காளைக்கு கழுத்து, தொடை, கால் பகுதிகள் கருமை நிறத்தில் இருக்கும். உடல் பகுதி வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். காயடிக்கப்பட்ட காங்கேயம் எருது, பசுவைப் போல வெள்ளை நிறத்துக்கு மாறி விடும். இதுதவிர, இயற்கையாகவே 2% முதல் 3% வரை செவலை, காரி நிறங்களிலும் காங்கேய இனங்கள் இருக்கின்றன.
சில விவசாயிகள் சிந்து, ஜெர்சி... மாடுகளுடன் காங்கேயத்தைக் கலப்பினம் செய்து விடுகிறார்கள். இதன் மூலம் பல நிறங்களில் மாடுகள் உருவாகும். அவற்றை கலப்பினம் என்றுதான் சொல்ல வேண்டும்.''
''அண்மையில் சென்னை நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் இருந்து மாங்கன்று வாங்கினேன். ஒட்டுக் கட்டிய பகுதி மண்ணுக்குக் கீழே இருக்குமாறு நடவு செய்யச் சொன்னார்கள். ஆனால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்தில், ஒட்டுக் கட்டிய பகுதி மண்ணுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் எது சரி?''
கிரிச்டிசன், சென்னை.
மா சாகுபடியில் அனுபவம் வாய்ந்தவரும், தமிழ்நாடு மா உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவருமான சிற்றரசு பதில் சொல்கிறார்.
''பொதுவாக ஒட்டுக் கட்டிய பகுதி, மண்ணுக்குக் கீழே இருக்கும்படிதான் நடவு செய்ய வேண்டும். பொதுவாக, மாங்கன்றுகள் சுமார் 3 அடி உயரம் வரை கூட இருக்கலாம். ஒட்டுக் கட்டிய பகுதி மேலே இருந்தால், காற்று வீசும்போது, அந்தப்பகுதி முறிந்து விடும். அதனால்தான், ஒட்டுக் கட்டிய பகுதியை மண்ணுக்குக் கீழே இருக்க வேண்டும் என்கிறோம்.

தற்சமயம் மென்தண்டு ஒட்டுமுறை பிரபலமாக உள்ளது. மாங்கொட்டையில் இருந்து முளைத்து

வரும், செடியின் தண்டைப் பிளந்து ஒட்டுக் கட்டுகிறார்கள். இந்தச் செடி சுமார் ஒரு அடி உயரம்தான் இருக்கும். இப்படிப்பட்ட கன்றுகளாக இருந்தால், ஒட்டுக் கட்டிய பகுதி மண்ணுக்கு மேல் இருக்கலாம். அதனால் பாதிப்பு ஏற்படாது.
சில இடங்களில் கன்று நடவு செய்யும்போது, ஒட்டுக் கட்டுவதற்காக சுற்றப்பட்ட பாலீதின் பேப்பரை அகற்றாமல் நடவு செய்கிறார்கள். அப்படிச் செய்தால், வெப்பம் ஏற்பட்டு, செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், கண்டிப்பாக பாலீதின் பேப்பரை நீக்கிவிட்டுத்தான் நடவு செய்ய வேண்டும்.''
தொடர்புக்கு, செல்போன்: 94428-76160.
''அசோலா வளர்க்க விரும்புகிறேன். தரமான விதை எங்கு கிடைக்கும்?''
இ. தனிஸ்லாஸ், மலையடிப்பட்டி.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், அசோலா விதை கிடைக்கிறது.
தொடர்புக்கு,
தொலைபேசி: 04652-246296.
