புறா பாண்டி படங்கள்: வீ. சிவக்குமார்
##~## |
''வெட்டிவேரிலிருந்து எண்ணெய் மற்றும் உபபொருட்களைப் பிரித்து விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கு விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?''
-ஏ. பாலகுமார், திருச்சி.
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள 'இந்தியா வெட்டிவேர் நெட்வொர்க்’ அமைப்பின் கௌவரச் செயலர் கே.ஆர். இந்திரா பதில் சொல்கிறார்.
''வெட்டிவேர், பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஓர் அற்புத மூலிகை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த உலக வங்கி அதிகாரி 'டிக் க்ரிம்ஸா’ என்பவர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா.... போன்ற மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் வெட்டிவேரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்து, அதன் மகத்துவங்களைத் தெரிந்து கொண்டு, வெட்டிவேர் சாகுபடியைப் பரவலாக்க சர்வதேச அமைப்பை உருவாக்கினார். அதனால், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா... என்று அனைத்துக் கண்டங்களிலும் வெட்டிவேர் சாகுபடி நடந்து வருகிறது.
உலகின் பல நாடுகளில், செருப்பு, படுக்கை, மெத்தை, விசிறி என பல பொருட்கள் வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு நல்ல விற்பனை வாய்ப்புகளும் உள்ளன. இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், ஒரு லிட்டர் அதிகபட்சம் 90 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெட்டிவேரிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பெரிய அளவில் விற்பனை வாய்ப்பு இல்லை. வெட்டிவேரில் இருந்து எண்ணெய் எடுக்கும் இயந்திரம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைத்தாலும், தமிழ்நாட்டில் எண்ணெய் எடுக்கும் ஆலைகளே கிடையாது. அதேசமயம், கேரள

மாநிலத்தில் மூன்று ஆலைகள் உள்ளன.
கழிவு நீரைச் சுத்திகரிக்க, ரசாயன உரத்தின் விஷத்தன்மையை நீக்க, மண் அரிப்பைத் தடுக்க... என பலவிதமான பயன்பாடுகளுக்கும் வெட்டிவேரை சாகுபடி செய்யலாம். வெட்டிவேர் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த, பல கருத்தரங்குகளை, நாங்கள், நடத்தி வருகிறோம். இந்திய அளவில் வெட்டிவேர் சாகுபடி செய்பவர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்து வருகிறோம். இதில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வெட்டிவேர் சாகுபடி மற்றும் விற்பனை வாய்ப்புகள் போன்றவை குறித்த வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.''
தொடர்புக்கு: INDIA VETIVER NETWORK, A / THERAMBIL APARTMENTS, 7 th STREET, ISALAND AVENUE, POONKUNNAM, THRISSUR, KERALA. செல்போன்: 094470-21885.
''சூரிய மின்வேலி அமைக்க அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமா? இது எவ்வளவு காலத்துக்குத் தாங்கும். எங்கு கிடைக்கும்?''
-ராமகிருஷ்ணன், தளக்காவூர்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர். வெங்கடாசலம் பதில் சொல்கிறார்.
''காட்டு விலங்குகள், கால்நடைகள்... போன்றவை வயலுக்குள் வருவதைத் தடுக்க சூரிய மின்வேலி அமைக்கலாம். இந்த அமைப்பில், சூரிய ஆற்றல், மின்னாற்றலாக மாற்றப்பட்டு மின்கலத்தில் சேமிக்கப்பட்டு அது, இரவு நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளின் நடமாட்டம் இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும். ஆகையால்தான் இந்த மின்வேலியை இரவு நேரத்தில் இயக்கச் சொல்கிறார்கள். இயங்கிக் கொண்டிருக்கும் வேலியைத் தொடும் விலங்குகளுக்கு அதிர்வு ஏற்பட்டு தூர எறியப்படுவதால், அவை பயந்து கொண்டு தோட்டத்தின் பக்கம் வருவதில்லை. மனிதர்கள் தொட்டால், 'விர்’ என்று இழுத்து, சில நிமிடங்களுக்கு வலியும் இருக்கும்.

இந்தச் சூரிய மின்வேலியால் மனிதர்களுக்கோ, கால்நடைகளுக்கோ... உயிர்ச்சேதம் ஏற்படுவதில்லை என்பதால், இதை அமைக்க அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. தமிழக வனத்துறை, வனத்துக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சுற்றி, சூரிய மின்வேலிகளை அமைத்து வருகிறது. ஒரு மீட்டர் 240 ரூபாய் முதல் மின்வேலிக் கம்பிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை,
25 ஆண்டுகள் வரை உழைக்கும். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம்... போன்ற பகுதிகளில் சூரிய மின்வேலிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், உயிர் ஆற்றல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422-6611276.
''பி.கே.எம். ரக செடிமுருங்கையின் சிறப்புத் தன்மை என்ன?''
-கு. பாலசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை.
முன்னாள் தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சம்பந்தமூர்த்தி பதில் சொல்கிறார்.
''பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1993-ம் ஆண்டு 'பி.கே.எம்.-1’ (பெரியகுளம்-1) என்னும் செடிமுருங்கை ரக ஆராய்ச்சியைத் தொடங்கினோம். அப்போது, தோட்டக்கலை ஆராய்ச்சி வயலில் இந்த ரகத்தை சாகுபடி செய்தபோது, சுமார் 8 அடி உயரத்தில் வளர்ந்திருந்த செடிகளில், முருங்கைக் காய்கள், 'சடைசடை’யாகக் காய்த்துத் தொங்கின. ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்த விவசாயிகள், அந்த விதைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். ஆந்திரா, கர்நாடகா... என்று பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தேடி வரத் தொடங்கியதில்... ஒரு கட்டத்தில், ஒரு விவசாயிக்கு 25 விதைகளை மட்டும்தான் கொடுக்க முடியும், என்ற அளவுக்குத் தட்டுப்பாடு வந்தது.

இந்த ரகத்துக்கு பல சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு முறையும், இந்த விதையைப் பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. நன்றாகக் காய்க்கும் திறன் கொண்ட செடிமுருங்கையைத் தேர்வு செய்து, அதிலிருந்து விதைகளை எடுத்து சேமித்துப் பயன்படுத்த முடியும். ஒரு முறை விதைத்தால், மூன்று ஆண்டுகள் வரை நன்றாகக் காய்க்கும். விதைத்த ஆறு மாதங்களில் காய்ப்புக்கு வந்து விடும்.

சராசரியாக ஒரு மரத்தில் 20 கிலோ வரை காய்கள் கிடைக்கும். பிப்ரவரி மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை காய்க்கும். இது வெயிலை விரும்பும் பயிர். வெயில் அடிக்க, அடிக்க, விளைச்சல் அதிகரிக்கும். மழைக்காலம் வந்தால், காய்ப்பு முடிந்து விடும். நவம்பர் மாதம் வாக்கில், தரையில் இருந்து, ஒரு அடி உயரம் விட்டு, செடியை வெட்டி விட்டு, புதியத் தளிர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் விளைச்சல் நன்றாக இருக்கும்.
செடியின் உயரம் குறைவு என்பதால், 8 அடி இடைவெளி கொடுத்தால் போதுமானது. ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தற்போது, பி.கே.எம்.-1, பி.கே.எம்.-2 ஆகிய ரகங்கள் புழக்கத்தில் உள்ளன. இதில் பி.கே.எம்.-2 ரகத்தின் காய்கள் சுமார் 3 அடி நீளம் வரை இருக்கின்றன. இதனால், விற்பனைக்கு எடுத்துச் செல்லும்போது, இடையூறு ஏற்படுகிறது. அதனால், 2 அடி நீளத்தில் காய்க்கும் பி.கே.எம்.-1 ரகத்தை பலரும் விரும்பி சாகுபடி செய்து வருகிறார்கள்.''
தொடர்புக்கு, செல்போன்: 94432-54543.
''பால்பண்ணை நடத்தி வருகிறேன். பாலில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கலக்காமல்தான் பண்ணைக்குக் கொண்டு செல்கிறேன். ஆனால், பால்மானியில் 25 டிகிரிக்கும் குறைவாகவே காட்டப்படுவதால், விலையைக் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள். என்ன செய்வது?''
-எஸ். மலர்கொடி, ஓலையாம்புத்தூர்.
கோயம்புத்தூர், சரவணம்பட்டியில் பால்பண்ணை நடத்தி வரும் ஜெ. சந்துரு பதில் சொல்கிறார்.

''பால்மானியில் (Lactometer) 25-க்கும் குறைவாக டிகிரி காட்டினால், 'அந்தப் பாலில் தண்ணீர் கலந்திருக்கலாம்' என்றுதான் சந்தேகப்படுவார்கள். பால் கறந்தவுடன் சோதனை செய்தால், இப்படிக் குறைவாகத்தான் காட்டும். கறந்த பிறகு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் கழித்துத்தான் சோதனை செய்ய வேண்டும். அடுத்து, தீவனக் குறைபாடு இருந்தாலும், பாலின் அடர்த்தி குறையும். மக்காச்சோளத் தட்டு, பசுந்தீவனங்கள் போன்றவற்றைக் கொடுப்பதன் மூலம் பாலின் அடர்த்தியைக் கூட்டலாம்.
பொதுவாக, ஹெச்.எஃப் மாடுகளில் பாலின் அடர்த்தி குறைவாகத்தான் உள்ளது. 200 ரூபாய் அளவிலேயே பால்மானிகள் விலைக்குக் கிடைக்கின்றன. அதனால், நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.''
