மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''இளநீர் பயன்பாட்டுக்கு மட்டுமான தென்னை ரகம் இருக்கிறதா? தேங்காயாக விற்பதைவிட, இளநீர் விற்பனையில் கூடுதல் வருமானம் கிடைக்குமா?''

 ஆர். புருஷோத்தமன், திண்டுக்கல்.

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தென்னை சாகுபடி ஆலோசகர் எஸ். சந்திரசேகர் பதில் சொல்கிறார்.

##~##

''எந்த ரகத்தையும் இளநீராகப் பயன்படுத்தலாம். என்றாலும்... இளநீர் பயன்பாட்டுக்கு செவ்விளநீர் ரகம் (Chowghat orange Dwarf) ஏற்றது. மற்ற ரகங்களைக் காட்டிலும் இதில், குளுக்கோஸ் கூடுதலாக உள்ளது. சராசரியாக ஒவ்வொரு காயிலும் 350 மில்லி அளவுக்கு இளநீர் இருக்கும். சுவையும் நன்றாக இருப்பதால், நுகர்வோர் விரும்பிக் குடிப்பார்கள். கோடைக் காலத்தில், ஒரு இளநீர் அதிகபட்சமாக

50 ரூபாய் வரைகூட விற்பனையாகிறது. ஆனால், தேங்காய் விலை அப்படியில்லை. தேங்காயுடன் ஒப்பிட்டால், இளநீர் சாகுபடி செய்வதுதான் லாபகரமானதாக இருக்கும்.

செவ்விளநீர் ரகத்தை ஏக்கருக்கு 80 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 250 காய்கள் கிடைக்கும். ஒரு காய் குறைந்தபட்சமாக

10 ரூபாய்க்கு விற்றாலும், ஒரு ஏக்கரில் இருந்து ஓராண்டுக்கு

2 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். விவசாயிகளே நேரடியாக விற்றால், இன்னமும் கூடுதல் வருமானம் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்தாலும், கூடுதல் விலை கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

போர்களின்போது, காயம்படும் வீரர்களுக்கு, குளுக்கோஸுக்கு பதிலாக இளநீரை உடலில் ஏற்றுவது வெளிநாடுகளில் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி உயிர் காக்கும் மருந்தாகப் பயன்படக்கூடிய இளநீர் குறித்த விழிப்பு உணர்வு, இங்கேயும் பெருகி வருகிறது. எனவே, அருகிலுள்ள பெரிய

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நோயாளிகளுக்கு இளநீர் விற்பதன் மூலம் நிலையான வருமான வாய்ப்பை உருவாக்கலாம்.

செவ்விளநீரை நடவு செய்தால், மூன்றாம் ஆண்டு தொடங்கி, ஐம்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், இந்த ரகக் கன்றுகளை வாங்கும்போது கவனம் தேவை. சுமார், முப்பது ஆண்டுகள் வயதுகொண்ட மரத்தில் இருந்துதான் விதைக்கன்று உற்பத்தி செய்யப்பட வேண்டும். அப்படிப்பட்ட கன்றுகள்தான், நல்ல விளைச்சல் கொடுக்கும்.''

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''கத்திரி சாகுபடி செய்துள்ளோம். இதில், பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்துவது எப்படி?''

கே. செந்தில்குமார், தென்காசி.

தமிழக அரசின் வேளாண்துறை அலுவலரும், பூச்சியியல் வல்லுநருமான நீ. செல்வம் பதில் சொல்கிறார்.

''பயிர்களில், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ஏற்படுவதற்கு சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. ஒட்டு மற்றும் வீரிய ரகப் பயிர்களில்தான் பூச்சிகளும், நோய்களும் அதிகம் தாக்குகின்றன. இவற்றின் இலைகள், மென்மையாக 'மொழுமொழு’வென்று இருப்பதால், பூச்சிகள் எளிதாக உண்ண முடியும். இவற்றுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவு. ஆனால், பாரம்பரியமிக்க நாட்டு ரகங்கள், கடினத் தன்மையுடனும், சுணையுடனும் கூடிய இலைகளைப் பெற்றிருப்பதோடு, அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டிருக்கின்றன. அதனால், பூச்சிகள், நோய்கள் எளிதில் தாக்குவதில்லை. இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை, நோய்த் தாக்குதல் ஏற்பட்ட பிறகு மருந்து தெளிப்பதைவிட, வருமுன் காப்பதுதான் சிறந்தது. கத்திரி விதைப்புக்கு முன்பு செய்யும் கடைசி உழவின்போதே, ஏக்கருக்கு 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்கிற கணக்கில் வயலில் தூவிவிட வேண்டும். இது கூட்டுப்புழுக்கள் உருவாகாமல், தடுத்துவிடும்.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

கத்திரியைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வேண்டாம். குறிப்பாக, கத்திரியுடன் வெங்காயத்தை சாகுபடி செய்வது நல்லது. இதனால் சில பூச்சிகள் அண்டாது. ஆனால், தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களை கத்திரியுடன் சேர்த்து செய்யக் கூடாது. இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால், பூச்சித் தாக்குதல் அதிகமாகிவிடும். நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்க, தட்டைப்பயறு, மக்காச்சோளம்... போன்றவற்றை கத்திரியுடன் விதைக்க வேண்டும். வரப்பு ஓரங்களில் பொறிப்பயிராக ஆமணக்கை விதைக்க வேண்டும். இதில்தான் அனைத்து வகையான பூச்சிகளும் முதல் தாக்குதலை நடத்தும். அதனால், ஆமணக்கை கவனித்து வந்தால், பூச்சி நடமாட்டத்தை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுத்து, கத்திரியைக் காப்பாற்றிவிட முடியும்.

மஞ்சள் சாமந்திப் பூ, குளவிகளைக் கவர்ந்து இழுக்கும். குளவிகள், புழுக்களைத் தின்று, கத்திரிச் செடியைப் பாதுகாக்கும். தவிர, நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தும். வயலில் கொண்டைப் புழுவின் தாக்குதல் இருந்தால், தாமதம் செய்யாமல், தாக்குதலுக்குள்ளான செடியை உடனே பிடுங்கி எரித்துவிட வேண்டும்.

பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பத்து நாட்களுக்கு ஒரு முறை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வந்தால், எந்த பூச்சியும் அண்டாது. இந்த எளிய நுட்பங்களைப் பின்பற்றி வந்தாலே, பூச்சி, புழுக்கள் உங்கள் தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காது. இன்னும், ஏராளமான தற்காப்பு நுட்பங்கள் இயற்கையில் உள்ளன. உங்கள் நிலத்தின் சூழ்நிலைக்கு தக்கபடி அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 94435-38356

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''வீட்டுக்குப் பக்கத்திலேயே 'செப்டிக் டேங்க்’ இருப்பதால், நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவறை கட்ட முடியுமா?''

பெருமாள், கிருஷ்ணராயபுரம்.

'ஆரோவில்’ பகுதியில் உள்ள 'ஈகோ புரோ’ அமைப்பைச் சேர்ந்த முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி சுமதி பதில் சொல்கிறார்.

''சமீபகாலத்தில், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய ஊர்களில் வாழும் மக்களின் அன்றாடப் பழக்க வழக்கங்கள், பெரிய நகரங்களில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களைப் போல் மாறி வருகிறது. அதில் ஒன்றுதான் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனிக் கழிப்பறைகளைக் கட்டுவது. கழிவை நீரூற்றி அகற்றி, அதை சிமென்ட் உறைகளினால் கட்டப்பட்ட ஒரு சிறிய கிணற்றுக்குள்(Soak pit) லுத்துகிறார்கள். இதனால், நிலத்தடி நீர் மாசுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 'சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிவறை’யைப் பயன்படுத்துவதன் மூலம் மாசுபாடைக் குறைக்கலாம்.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

சூழல் மேம்பாட்டு சுகாதாரக் கழிவறைகள், தரைமட்டத்துக்கு மேல் சுமார் 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பின் மேல், இரண்டு பகுதிகளாக நான்கரை அடி அகலம், ஐந்தரை அடி நீளத்தில் சிமென்ட் பிளாக்கினால் அமைக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும், மலம் கழிக்க ஒரு அடி விட்டமுள்ள ஒரு துளை, சிறுநீர் கழிக்க ஒரு சிறிய துளை, கழுவும் நீரை வெளியேற்ற ஒரு துளை என மூன்று துளைகள் இருக்கும். சிறுநீர், கழுவுநீர் ஆகியவை ஒரு குழாய் மூலம் கழிவறைக்கு வெளியே வந்து விடும். மலம் கழித்த பிறகு அதில், இலைச்சருகு, சாம்பல், மரத்தூள்.... போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தூவிவிட்டால்... துர்நாற்றம் வீசாது. எளிதில் மட்கி விடும்.

முதல் பகுதி தொட்டி, முக்கால் பங்கு நிரம்பியவுடன், அதில் கால் பங்கு, இலை தழைகளை.... போட்டு நிரப்பிவிட வேண்டும். அதிகபட்சம் ஒன்பது மாதங்களில் தொட்டியில் உள்ள கழிவுகள் எருவாகி விடும். இப்படி மாற்றி மாற்றி, இரண்டு தொட்டிகளையும் பயன்படுத்தலாம். இந்தக் கழிப்பறை கட்டுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அரசு மானியமாக 5 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் கழிப்பறையை ஒரு முறை பயன்படுத்தும் போது, 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இந்தக் கழிப்பறையில், 2 லிட்டர் தண்ணீர்தான் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் ஆண்டில், ஒரு மனிதனின் கழிவு மூலம் கிடைக்கும் உரத்தை வைத்து, அவனுக்கு ஓர் ஆண்டுக்குக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துவிட முடியும். நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் மாசுபடாது.''

தொடர்புக்கு, செல்போன்: 0413-2622469.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''கால்நடை மருத்துவமனை, எவ்வளவு நேரம் திறந்திருக்கும். அவசர உதவிக்கு, கால்நடை மருத்துவர்களை அழைத்தால், வருவார்களா?''

ஷா. ஜாகீர் உசேன். சோழகனூர், விழுப்புரம்.

விழுப்புரம், மாவட்ட கால்நடைப் பாரமரிப்புத் துறையின் உதவி இயக்குநர் டாக்டர். அழகரசன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''பொதுவாக கால்நடை மருத்துவமனைகள், காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் இயங்கும். இந்த நேரத்தில் கால்நடைகளைக் கூட்டி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அவசர சிகிச்சைக்கு எந்த நேரத்திலும், அந்தப் பகுதி கால்நடை மருத்துவர்களை அழைக்கலாம். கால்நடை மருத்துவர் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், ஒவ்வொரு மருத்துவமனையிலும் எழுதப்பட்டிருக்கும். ஒருவேளை, நீங்கள் அழைத்தபோது கால்நடை மருத்துவர் வரவில்லை என்றால், உயர் அதிகாரிகளுக்கு உடனே புகார் செய்யவும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94450-01123.

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி

''சாண எரிவாயுவை, சிலிண்டரில் அடைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும்?''

வி. பூபதி, முன்னுர்.

''மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கோ விக்ஞான் அனுசந்தன் கேந்திரா’வில் இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டல் கிடைக்கும்.

தொடர்புக்கு: Go-vigyan Anusandhan Kendra, Kamdhenu Bhavan, Pt. Baccharaj Vyas Square,
Chitar Oli, Mahal, Nagpur - 440 002 (INDIA).
Ph: 0712-2772273, 2734182 /2731639, 2731385

நீங்கள் கேட்டவை -  புறா பாண்டி