படங்கள்: தி. விஜய், சொ. பாலசுப்ரமணியன்
புறா பாண்டி
''காரி பசு, காராம் பசு என்று சொல்கிறார்களே... இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?''
-பா. ராஜ்மோகன், ஒட்டன்சத்திரம்
பாரம்பரிய கால் நடை இனங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் 'சேவா’ விவேகானந்தன் பதில் சொல்கிறார்.
''காரி என்றால் கருப்பு என்று பொருள். கருப்பு நிறம் கொண்ட மாடுகளை 'காரி மாடு’ என்று கிராமத்தில் சொல்வதுண்டு. காரி பசுக்கள், நாட்டு இன மாடுகளிலும், கலப்பின மாடுகளிலும் பரவலாக உள்ளன. காராம் பசு என்பவை, நாட்டு இன மாடுகளில் மட்டும் உள்ளவை. நாக்கு முதல் மடிக்காம்பு வரை என உடல் முழுவதும் கருப்பாக உள்ள நாட்டுப் பசுதான், 'காராம் பசு’ என்று அழைக்கப்படுகிறது. காராம் பசு தனி ரகம் என்றும் பலர் நினைக்கிறார்கள். இது, தவறு. நாட்டுப் பசுக்களில் அரிதாகப் பிறப்பவைதான், காராம் பசுக்கள்.

காராம் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. கருப்புத்தோல் கொண்ட பசு, சூரிய ஒளியை கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால், அதன் பாலில் கூடுதல் சத்துக்கள்

இருக்கின்றன. காராம் பசுவின் பால் கெட்டியாக இருப்பதோடு, அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், மணமாகவும் இருக்கும். முற்காலங்களில் புகழ்பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம் பசுவின் பாலை வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
சித்த மருத்துவத்தில் கருப்புக்கு தனிச் சிறப்பு உண்டு. கருந்துளசி, கரு நொச்சி, காராம் பசு... போன்றவை அந்தப் பட்டியலில் அடங்கும். தற்போது, தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் காராம் பசுக்கள் உள்ளன. அதனால்தான் காராம் பசு பல லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது. காரம் பசு வீட்டில் இருந்தால், அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால், இந்தப் பசுவை வளர்ப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2380082.
''ஆப்பிரிக்காவில் ஏராளமாக உள்ள விவசாய நிலங்களை, இந்திய விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். அங்கு நிலம் வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?'
-எஸ். சுந்தரமூர்த்தி, வேலூர்.
தென்னாப்பிரிக்கா நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை துணையமைச்சர், எலிசபெத் தபோத்தி பதில் சொல்கிறார்.
(சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது கேட்கப் பட்டது.)

''தென்னாப்பிரிக்கா வுக்கும், இந்தியாவுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. குறிப்பாக, தமிழ்நாட்டு வம்சா வழியினர் எங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் மீது, தென்னாப்பிரிக்காவுக்கு எப்போதும் தொழில்துறை சார்ந்த நட்பு உண்டு. குறிப்பாக கட்டுமானத்துறை, விவ சாயம்... போன்ற வற்றில் இந்திய நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவில் பணியாற்றி வருகின்றன.
மண்வளம், நீர்வளம் என இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் ஆப்பிரிக்க மண்ணில், இந்திய விவசாயிகளை விவசாயம் செய்ய அழைக்கிறோம். காய்கறி, பழங்கள்... போன்ற விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் தொழிற்சாலை தொடங்க ஆர்வம் உள்ளவர்களையும், எங்கள் நாடு இரு கரம் கூப்பி அழைக்கிறது. எங்கள் நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு... தென்னாப்பிரிக்காவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அலுவலர்கள், எங்கள் நாட்டின் சட்ட திட்டங்கள், முதலீடு செய்யும் பகுதி, விவசாயம் செய்வதற்கு எந்த மாநிலம் ஏற்றவை... போன்ற விவரங்களை வழங்குவார்கள். நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் இருப்பின், தென்னாப்பிரிக்காவில் நீங்கள் விவசாயம் செய்யலாம்.''
தொடர்புக்கு, Deputy Director,
Export Promotion Trade and Investment South Africa,
Private Bag x84, Pretoria, 0001
Tel: 0027123941755
customer contact centre: 0027123949500
Email:SSardha@thedti.gov.za
www.thedti.gov.za
''எங்களது நிலத்தில் நீர்வளம் குறைவாக உள்ளது. அரசு சார்பில் நிலத்தடி நீர்மட்டம் பார்த்துக் கொடுப்பார்களா? செயற்கைக்கோள் மூலம் நிலத்தடி நீர்வளத்தை அறிய முடியுமா?''
-ப. குமாரவேலு, திருவண்ணாமலை.
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையத்தின் தொழில்நுட்ப அலுவலர் எம்.கே. சுகுமாறன் பதில் சொல்கிறார்.
''நிலத்தடி நீர்வளத்தை அறியும் கருவி எங்கள் துறையில் உள்ளது. ஆனால், அக்கருவி மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உத்தேசமாகத்தான் கண்டறிய முடியும். 100% துல்லியமாகச் சொல்ல முடியாது. மேலும், நீர்வளத்தை அறியும் கருவியைப் பயன்படுத்த சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஆற்றுக்கும், நீர்வளம் பார்க்கும் பகுதிக்கும் 200 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்; 200 மீட்டர் தொலைவுக்குள் கிணறுகள் இருக்கக் கூடாது. இத்தகைய விதிமுறைகள் பொருந்தினால் மட்டுமே உங்கள் பகுதியில் உள்ள எங்கள் அலுவலர்கள், தோட்டத்துக்கு வந்து நிலத்தடி நீர்மட்டத்தைக் கண்டறிந்து சொல்வார்கள். ஓரிடத்தில் நிலத்தடி நீர் மட்டம் பார்க்க, 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

செயற்கைக்கோள் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தைப் பார்க்கும் முறை, ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில், உலக வங்கி நிதியுதவியுடன், ஹெலிகாப்டர் மூலம் நிலத்தடி நீர்வளத்தை அறியும் திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சோதனை அடிப்படையிலான திட்டம் என்பதால், இதன் செயல்பாடுகளை வைத்தே மற்ற மாவட்டங்களில் பின்பற்ற முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிலத்தடி நீர்வளம் குறைவாகவே உள்ளது. நமக்கு கிடைக்கும் மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல், சேகரித்துப் பயன்படுத்தினால் மட்டுமே, நீர்பற்றாக்குறை இல்லாமல், விவசாயம் செய்ய முடியும்.''
தொடர்புக்கு, செயற்பொறியாளர், நிலத்தடி நீர்ப்பிரிவு, பி.டபுள்யூ.டி காம்பளக்ஸ், 3-வது மாடி, காந்தி நகர் கிழக்கு, முனிசிபல் காலனி, வேலூர்-632004.
தொலைபேசி: 0416-2243298.

