தமிழக அரசின் கவனம் ஈர்த்த அரசம்பட்டி தென்னை; விரைவில் புவிசார் குறியீடு... மகிழ்ச்சியில் விவசாயிகள்!

அறிவிப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், அரசம்பட்டி நாட்டு ரகத் தென்னையைப் பெரிதும் விரும்பி சாகுபடி செய்து வருகிறார்கள். வறட்சி மற்றும் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொண்டு வளரக்கூடிய இந்தத் தென்னை ரகத்துக்கு, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங் களில் உள்ள விவசாயிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக, தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்ற, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதி விவசாயிகளும் கூட, இந்த ரகத்தைப் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த ரகத்தின் பூர்வீகமான அரசம்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங் களுக்கும் அனுப்பப்படுகின்றன.

அரசம்பட்டி தென்னையின் சிறப்பு குறித்தும், இதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், 10.03.2023 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், ‘தரம், சுவை, அதிகக் காய்ப்பு... அரசம்பட்டி நாட்டு ரகத் தென்னை, கிருஷ்ணகிரியின் அடை யாளம்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அரசம்பட்டி தென்னை ரகம் குறித்து தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இந்தத் தகவலையும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து, அரசம்பட்டி தென்னையின் முக்கியத்துவம் குறித்து அறிந்த தமிழக அரசு, அரசம்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அரசம்பட்டி நாட்டு ரகத் தென்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அண்மையில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘அரசம்பட்டி நாட்டுரகத் தென்னைக் குப் புவிசார் குறியீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி பிரபு, ‘‘இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள், அரசம்பட்டி தென்னை நாற்றுகள் உற்பத்தி செஞ்சு விற்பனை பண்ணிகிட்டு இருக்கோம். எங்க ஊர் தென்னையோட சிறப்பு பற்றி, பசுமை விகடன்ல கட்டுரை வெளியானதும், தமிழ்நாடு முழுக்க இது கவனம் ஈர்த்திருக்கு. குறிப்பா, தமிழக அரசு இதுல அக்கறை காட்ட ஆரம்பிச்சிருக்கு. அரசம்பட்டி தென்னைக்குப் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்னு பட்ஜெட்ல அறிவிப்பு வெளியானதால, எங்க பகுதி விவசாயிகள் உத்வேகம் அடைஞ்சிருக்கோம். புவிசார் குறியீடு கிடைச்சா, அரசம்பட்டி தென்னை நாற்றுகள் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். விலையும் கூடுதலா கிடைக்க வாய்ப்பிருக்கு. எங்க ஊர் தென்னையோட சிறப்பை உலகறிய செஞ்ச பசுமை விகடனுக்கும், புவிசார் குறியீடு கிடைக் குறதுக்கான நடவடிக் கையில இறங்கியிருக்குற தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிச்சிக்குறோம். அதேசமயம், இந்தப் பகுதி விவசாயிகளோட நீண்டகாலக் கோரிக்கையான, தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும்னு வலியுறுத்துறோம். அரசம்பட்டி நாட்டு ரகத் தென்னையை அடுத்தடுத்த தலைமுறை களுக்குப் பாதுகாத்து கொடுக்குறதுக்கும், இந்தப் பகுதிகள்ல உள்ள தென்னை மரங்கள்ல சமீபகாலமா அதிகரிச்சுக்கிட்டு இருக்குற பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்குத் தீர்வு காணவும், தென்னை ஆராய்ச்சி நிலையம் ரொம்ப அவசியம்’’ என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்து லிங்கம், ‘‘எங்க ஊர் நாட்டுரகத் தென்னை நல்லா வறட்சி தாங்கி வளரும். பல வருஷங் களுக்குத் தொடர்ந்து நிறைவான மகசூல் கொடுக்கக்கூடியது. தேங்காயும் சுவையா இருக்குறதுனால, சமையலுக்கு ரொம்ப நல்லா இருக்கும். மக்கள் இதை விரும்பி வாங்குவாங்க. இதனால வியாபாரிகள் மத்தியில அரசம்பட்டி தேங்காய்க்கு வரவேற்பு அதிகம். இதுல எண்ணெய் சத்தும் அதிகமா இருக்கும். 100 கிலோ கொப்பரையில 60 - 63 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எங்க ஊர்ல உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்னங்கன்றுகள் உற்பத்தியில ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனால், வெளிமாவட்டங்கள்ல சிலர், அரசம்பட்டி நெட்டைங்கற பெயரில், தரமற்ற தென்னை நாற்றுகளைத் தயார் செஞ்சு, அதிக விலைக்கு விற்பனை செய்றாங்க. அதனால எங்க ஊர் தென்னையோட பேர் கெட்டுப்போகுது.

புவிசார் குறியீடு கொடுத்தால், அரசம் பட்டியைத் தவிர்த்து மற்ற இடங்களில், இந்தப் பெயரை பயன்படுத்தித் தென்னை நாற்றுகள் தயார் செய்றது தடுக்கப்படும். மேலும், அரசம்பட்டி தென்னை நாற்று களுக்கான தேவை அதிகரித்து, எங்க ஊர் விவசாயிகளுக்கு சற்றுக் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கடந்த சில வருஷங்களா தேங்காய்க்கு ரொம்ப குறைவான விலைதான் கிடைச்சுக் கிட்டு இருக்கு. ஆனா, விவசாயப் பணியாளர்களுக்கான கூலியும், ரசாயன இடுபொருள்களோட விலையும் பல மடங்கு கூடிப்போச்சு. இதனால இந்தப் பகுதி விவசாயிங்க நஷ்டத்தைச் சந்திச்சுக்கிட்டு இருக்கோம். இயற்கை விவசாயம் மூலம், படிப்படியான செலவை குறைக்குறதுக்கும்... தென்னையில ஊடுபயிரா கோகோ, பாக்கு, ஜாதிக்காய் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்றதுக்கும் முறையான பயிற்சிகள் கொடுத்தா உதவியா இருக்கும்.

தென்னை சாகுபடிக்குத் தேவையான நவீன கருவிகளை மானிய விலையில கொடுக்கணும். விர்ஜின் தேங்காய் எண்ணெய், நீரா உட்பட இன்னும் பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக் கவும் எங்க பகுதி விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்யணும். இதுக்கான பயிற்சி மையத்தை அரசம்பட்டியில தொடங்கணும். தென்னை சார்ந்த பெரிய அளவிலான தொழிற்சாலைகளையும் இங்க கொண்டு வரணும். முதல்கட்டமா புவிசார் குறியீடு கிடைச்சுட்டாலே, அடுத் தடுத்து ஆராய்ச்சி நிலையம், மதிப்புக்கூட்டல் பயிற்சி மையம்னு ஒவ்வொண்ணா வந்துடும்ங்கற நம்பிக்கை இருக்கு’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்.