பனைமரங்களை வெட்டுவதற்குத் தடைவிதிப்பது குறித்தான விவசாயிகளின் முப்பது ஆண்டுக்கால கோரிக்கையை ஏற்றுத் தனி நிதிநிலை வேளாண் அறிக்கையில் பனைமரங்களை வெட்டுவதற்குத் தடை விதித்திருக்கிறது அரசு.
பனை மரங்களைப் பாதுகாப்பதன் மூலம் பதநீர், கருப்பட்டி போன்ற இயற்கைப் பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தமுடிவது மட்டுமின்றி சித்த மருத்துவத்துக்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆண்டு முழுவதும் குளிர்பானங்களே பெரும்பாலானோரின் விருப்ப பானங்களாக இருக்க, வெயில் காலம் வந்துவிட்டால் மட்டும் நுங்கு, இளநீர் என இயற்கை பானங்களைத் தேடிச் செல்கின்றனர்.

அதே வேளை மரங்களை வெட்டாமல் விட்டுவைத்தால்தான் வரவிருக்கும் வெயில் காலங்களிலும் இதைத் தொடர இயலும். இந்நிலையில்தான், அண்மையில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பனை மரம் வெட்ட விதிக்கப்பட்ட தடைக்கு, விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுக்குறித்து மரம் வளர்ப்போர் பாதுக்காப்பு சங்கத்தலைவர் மாசிலாமணி பேசுகையில், ``நம் முன்னோர்கள் பனைமரங்களை ஏரிக்கரை, கண்மாய், குளங்களுக்கு அருகில் நடவு செய்தது வேலியைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல; மழை நீரைச் சேமிப்பதற்கும் தான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருக்கும் டோல் பிளாசாவில் விற்கப்படும் நுங்கு, பனங்கிழங்கு, பதநீரால் மட்டுமே மாதம் பல லட்சம் விற்பனை நடக்கிறது.

இதனால், தினக்கூலி மக்கள் சராசரியாக ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். இச்சூழலில், கிட்டத்தட்ட எழுபது ஆண்டுக்காலமாகச் செங்கல்சூளைக்காக பனைமரங்கள் வெட்டப்பட்டுவருவது வேதனை அளிக்கிறது. தருமபுரி கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மட்டும் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக லட்சக்கணக்கான பனைமரங்கள் தேவையே இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், பனை மரங்களை வெட்டுவதற்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக அரசு எடுத்திருக்கும் முடிவு மிகப் பக்கபலமாகவுள்ளது. தவிர்க்கமுடியாத காரணங்கள் இருந்தால் மட்டும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் பெயரில் மரத்தை வெட்ட ஒப்புதல் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மேலும், பனை மரங்களை காக்க வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக பசுமை விகடன் இதழ் மூலம் வலியுறுத்தி வந்தோம். அதற்கான பலன் இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.