கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில், வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று சந்தைக்கு அதிக அளவிலான, விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர்.
சந்தைக்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலப்பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடு என சுமார், பத்தாயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டிருந்தன.
காலை, 5:00 மணிக்கு துவங்கிய வாரச்சந்தை மதியம் வரையில் பயங்கர ‘பிஸி’யாக விற்பனை நடந்தது. சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் உள்பட, பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

ரூ.8 கோடி வரையில் விற்பனை...
விவசாயிகளிடம் பேசினோம், ‘‘பண்டிகை இல்லாத சாதாரண நாட்களில் வழக்கமாக, 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக, 10,000 – 12,000 வரையிலும், மற்ற ஆடுகள் அதிகபட்சமாக, 5,000 – 7,000 வரையிலும் விற்பனையாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று, அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகின. கிடா ஆடு, 12 – 15 ஆயிரம் வரையிலும், மற்ற ஆடுகள், 7000 முதல் 8000 வரையிலும்; எடைக்கு ஏற்ப கூடுதல் விலைக்கும் விற்பனையாகின்றன. விலை அதிகமாக கிடைத்துள்ளதால், ஆடு வளர்த்துள்ள விவசாயிகளுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதில் , 7,500 ஆடுகளுக்கு மேல் விற்பனையாகி, ரூ. 8 கோடி ரூபாய் வரையில் வர்த்தகம் நடந்துள்ளது’’ என மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.