கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195/- வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

`தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு ரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2020-21 அரவைப் பருவத்துக்கு வழங்கப்பட்ட கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை:
2015-16 முதல் 2019-20 அரவைப் பருவம் வரை கரும்பு விலை உயர்த்தப்படாமல், டன்னுக்கு ரூ.2,750 மட்டுமே வழங்கப்பட்டது. 2020-21 அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2,707.50 ஐ விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.192.50 வழங்கப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2,900 கிடைத்தது.
கரும்பு சாகுபடி அதிகரிப்பு
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளால், 2020-21 அரவைப் பருவத்தில் 95,000 ஹெக்டேராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23 அரவைப் பருவத்தில் 1,40,000 ஹெக்டேராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

மத்தியஅரசு ரூ. 2,755 + மாநில அரசு ரூ.195
மத்திய அரசு 2021-22-ம் அரவைப் பருவத்துக்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ. 2,755-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.2,950
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையால், பொது, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.