தமிழகத்தில் பாசன ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர் செடிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நீர் தடையின்றி பாசனத்துக்குச் செல்லவும், மழை வெள்ளம் போன்ற நாள்களில் நீர் எளிதாக வெளியேறும் வகையிலும் ஆண்டுதோறும் நீர்வளத்துறை சார்பில் பல கோடி செலவில் நீர்நிலைகள் தூர் வாரப்படுகின்றன. இந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் தூர் வார 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முன் தினம் நீர்நிலை தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, பல மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை வரலாற்றில் முதன்முறையாக நீர்நிலை தூர்வாரும் பணிகளைக் கண்காணிப்பதற்காக புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது நீர்வளத்துறை அமைச்சகம்.
தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி மூலம் அனைத்து மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் எந்த அளவு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகள் இருந்த இடத்திலேயே கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த நீர்நிலைகளில் எத்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது என்ற விவரம் இடம் பெற்றிருக்கும்.

தூர்வாருவதற்கு முன்பாக அந்த இடத்தின் புகைப்படம் மற்றும் தூர்வாரிய பிறகு, அந்த இடத்தின் புகைப்படத்தை நாள்தோறும் நீர்வளத்துறை அலுவலர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வர். இதன் மூலம் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். முதற்கட்டமாக இந்த செயலி நீர்வளத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.