2023-24 ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை கடந்த மாதம் 21-ம் தேதி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் குறித்து கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சட்டப்பேரவையில் விவாதம் நடந்து நிறைவேற்றப்பட்டது. அடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வந்தது. இதில் வேளாண் மானியக்கோரிக்கையின் போது 18 புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் வெளியிட்டார்.

அதன் விவரங்களாவன:
1. இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
2. வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறைத் தலைவர்களுக்கு பணி நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும்.

3. நெல் உற்பத்தியை அதிகரிக்க துத்துநாக சத்தைக் கரைத்துக் கொடுக்கும் திரவ உயிர் உரத்தை இரண்டு இலட்சம் ஏக்கருக்கு 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்படும்.
4. கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டி மருந்து ரூ. 45 லட்சம் செலவில் வழங்கப்படும்.
5. கரும்பு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை நேரில் அறிந்து கொள்ளும வகையில் 100 கருப்பு விவசாயிகளை வெளிமாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்வதற்கு 2000 கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கு ரூ.30 லட்சம் செலவிடப்படும்.

6. கள்ளக்குறிச்சி2, பெரம்பலூர், செங்கல்வராயன் சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு புதிய உருளை ரூ. 1 கோடியே 18 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
7. திருப்பத்தூர், சேலம், மதுராந்தகம், எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு காற்றழுத்த இயந்திரமும், கள்ளக்குறிச்சி 2, எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருவழி மையப்படுத்தப்பட்ட உயவு அமைப்பு தலா ரூ.85 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

8. மரவள்ளி மகசூலைப் பெருக்க நடவுக்குச்சிகள், உரம், பயிர்ப் பாதுகாப்பு, நடவுக்குச்சி வெட்டும் கருவிகளுக்கு மானியம் வழங்கி ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
9. தோட்டக்கலைப் பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லியமாக செயல்படுத்துவதற்காக தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர்கள் வேளாண் விற்பனை வேளாண் வணிகத் துறையில் சிறப்பு பணியமர்த்தப்படுவார்கள்.
10. தேசிய மின்னணு வேளாண் சந்தை உத்திகள், பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து வேளாண்மை தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

11. தோட்டக்கலை இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 20 வட்டாரங்களில் தோட்டக்கலைக் கிடங்குகள் 1 கோடி செலவில் கட்டப்படும்.
12. திருச்சியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையத்தினை வலுப்படுத்திட ரூ.3 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

13. வேளாண்மை இயந்திர வாடகைத் திட்டத்தினை வட்டார அளவில் கொண்டு செல்லும் வகையில் 15 வேளாண் இயந்திரக் கூடங்கள் ரூ.2 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
14. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்திட அரசு வணிக வளாகங்களில் சந்தை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.
15. கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயிறு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை ஆகிய ஐந்து வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குயீடு பெறுவதற்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
16.திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.78 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
17. தருமபுரி மாவட்டத்தில் சுனைநீர் வடிப்பகுதி மேம்பாட்டுக்கான திட்டம் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
18. திருச்சியில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி, சென்னையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வாழை, மலர்களுக்கான கண்காட்சி, பண்ருட்டியில் பலா கண்காட்சி நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “எங்கும் பசுமை, எதிலும் வளர்ச்சி - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சாதனைகள் 2022-23” நூலை வெளியிட்டார்.