தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 130 அடிக்கு குறையாமல் இருந்ததால், முதல்போக விவசாயத்திற்கு ஜூன் 1-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்த நிலையில், தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் காலை 10.30 மணியளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஷட்டரை இயக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியசாமி,'' பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் விவசாயத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கர் என 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடிக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் குறுகிய கால பயிர் ரகங்களை சாகுபடி செய்தால் விவசாயத்தில் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். அதேசமயம் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தவும் விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி பிரவின் மகேஷ் டோங்கரே, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜன், தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமிழக விவசாயிகள் ஆகியோர் தமிழகப் பகுதிக்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.