ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

"வேளாண் சட்டங்களுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!"

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகள் போராட்டம்

மோடியை மண்டியிட வைத்த விவசாயிகள் போராட்டம்...

போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020 நவம்பர் 26-ம் தேதி டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் கடந்த நவம்பர் 19-ம் தேதி காலை மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பின்போது ``வேளாண் சட்டங்களின் அவசியத்தை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்டங்களைப் பற்றி விளக்குவதில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இதைப் பற்றி விளக்க முடியாதது எங்களுடைய தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வேளாண் துறையை மேம்படுத்த குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் கிளப்பியது. வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியானதும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்த வேளாண் சட்டங்கள் கடந்து வந்த பாதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். 2020 ஜூன் 3-ம் தேதி கொரோனா ஊரடங்கின்போது வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவதற்கான பணிகளைத் தொடங்கியது மத்திய அரசு. மூன்று வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படுவதற்கு முன்பே, 2020 செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட் டத்தில் இறங்கினர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். என்றாலும் செப்டம்பர் 22-ம் தேதிக்குள் இரு அவைகளிலும் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 27-ம் தேதி குடியரசுத் தலைவர் இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் விவசாயிகள் நவம்பர் 25-ம் தேதி `டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை அறிவித்தனர். அறிவித்ததோடு அனைத்து மாநில விவசாயிகளையும் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2020 நவம்பர் 26-ம் தேதி

‘டெல்லி சலோ’ போராட்டம் நடை பெற்றது. டிராக்டர்களிலும் பேருந்துகளிலும், கார்களிலும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். பஞ்சாபிலிருந்து வந்த விவசாயிகளை ஹரியானா மாநில அரசு தடுத்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசுதல், தண்ணீரைப் பீய்ச்சியடித்தல், தடுப்புகள் வைத்தல் என்று விவசாயிகளுக்குப் பல தடைகளை உருவாக்கியது. ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கிச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் 550 விவசாயச் சங்கங்களிலிருந்து 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

2020, நவம்பர் 27-ம் தேதி

டெல்லிக்குள் நுழைந்து ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி எல்லையில் உள்ள நிரன்கரி மைதானத்தில் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் டெல்லியின் எல்லையை அடைந்தபோது, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுடன் அரசு தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2020, டிசம்பர் 30-ம் தேதி

ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை யில்தான் மின்சாரச் சட்டத் திருத்த மசோதா சட்டமாக்கப்படாது என்றும், பஞ்சாப்பில் வைக்கோல் எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கின்ற சட்டத்தைக் கைவிடுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்தது.

2020, டிசம்பர் 8-ம் தேதி

பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயி களோடு நாடு முழுவதுமுள்ள மற்ற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுத் தனர். இதோடு நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில மாநிலங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த `பாரத் பந்த்’ போராட்டத்துக்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன.

2021, ஜனவரி 13-ம் தேதி

வேளாண் சட்ட நகல்களைத் தீ வைத்து எரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசு தினவிழாவில் டிராக்டர் பேரணி நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2021, ஜனவரி 26-ம் தேதி

விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி நாடே கொந்தளித்தது. விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் டெல்லி செங்கோட்டையில் ஏறி கொடியை ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டன.

2021, பிப்ரவரி 13-ம் தேதி

போராட்டம் குறித்துச் சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா துன்பர்க் ட்வீட் செய்தது பல்வேறு சலசலப்புகளைக் கிளப்பியது.

2021, பிப்ரவரி 15-ம் தேதி

`விவசாயிகளின் போராட்டம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தப்போவதில்லை’ என்று அறிவித்தது மத்திய அரசு. இது ஒன்றே சட்டம் சம்பந்தமாக அரசிடமிருந்து வந்த அறிவிப்பு. ஆனால், இதை விவசாயிகள் ஏற்கவில்லை. சில விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து திரும்பிச் சென்றுவிட்டாலும் பல விவசாயிகள் போராட்டக் களத்தில்தான் நின்றுகொண்டிருந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2021, அக்டோபர் 3-ம் தேதி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் 4 விவசாயிகள், 3 பி.ஜே.பி கட்சியினர், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் விவசாயிகளுக்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை.

2021, நவம்பர் 7-ம் தேதி

சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் பி.ஜே.பி-க்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், அடுத்து வருகிற பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கவும் பிரதமர் மோடி தலைமையில் பி.ஜே.பியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டம்தான் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குவதற்கு வழிகோலியது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இவை மட்டுமல்ல, வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருந்தன...

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தன்னுடைய பத்மஶ்ரீ விருதைத் திருப்பி அளித்தது, காலிஸ்தான் குற்றச்சாட்டுகள், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வேறு நபர்கள் நுழைந்து கலவரம் செய்தது, வெளிநாடு வாழ் மக்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் போராட்டம் நடத்தியது, கனடா நாட்டு பிரதமர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது, விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது என்று பல்வேறு சம்பவங்கள் டெல்லி போராட்டம் தொடர்பாக நடைபெற்றன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி விவாதிப்பது வரை சென்றது. இவையெல்லாமும்கூட மோடியின் வாபஸ் முடிவுக்கு காரணங்களே!

2021, நவம்பர் 19-ம் தேதி

மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இது அறிவிப்போடு நிற்காமல் நாடாளு மன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்துச் செய்யப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர். இன்னும் களத்தில்தான் விவசாயிகள் இருக்கின்றனர்.

அறவழியில் நடைபெற்ற போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஈசன்: “விவசாயத்துக் கான இலவச மின்சாரத்தை நீக்கக்கூடிய மின் திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கணும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கணும். இந்தக் கோரிக்கைகளைச் சட்டபூர்வமா நிறைவேத்துற வரைக்கும் டெல்லி போராட்டம் தொடர்ந்து நடக்கும்.’’

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்: “இந்தப் போராட்டத்துல 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தரணும். அவங்களோட வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கணும்.’’

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன்: “லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் பல மாதங்களாக இந்தப் போராட்டத்தைத் தொடர்றாங்க. இது தேர்தல்ல எதிரொலிக்குமேனு பிரதமர் மோடிக்கு பயம் வந்துருக்கு.’’

ஈசன், சுந்தர விமல்நாதன்,  இளங்கீரன்,  அனந்து, நல்லா கவுண்டர்
ஈசன், சுந்தர விமல்நாதன், இளங்கீரன், அனந்து, நல்லா கவுண்டர்

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘‘போராட்டக் களத்தில் நானும் தங்கியிருந்து போராடியுள்ளேன். இதற்கு முன்பு இப்படி ஓர் போராட்டத்தைப் பார்க்கவில்லை. விவசாயிகளின் ஒற்றுமைக்கு முன்னால் எந்த அரசும் எதிர்த்து நிற்க முடியாது. அறவழியில் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தை உலக நாடுகள் உற்றுக் கவனித்தன.’’

குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்
தமிழக விவசாயிகள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர்,
“மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கும் பிரதமரின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். விவசாயத்தை மேம்படுத்த எந்தச் சட்டங்களும் தேவையில்லை. விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் விளைவிக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும்.”