வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நடப்பாண்டு (2022-2023) வேளாண் நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசின் வேளாண் துறையும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமும் இணைந்து `வேளாண் நிரல் திருவிழா’ (Agri Hackathon) -வினை ஒருங்கிணைக்கும் என அறிவித்தார்.

நீண்ட நாட்களாக விவசாயத் துறையில் சவாலாக விளங்கும் சில தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) வியாழக்கிழமை தமிழ்நாடு அக்ரி ஹேக்கத்தான் 2022 ஐ அறிமுகப்படுத்தியது.
வேளாண் துறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில், அதற்கு தொழில் நுட்ப தீர்வுகளை வழங்கும் புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் விதமாக, வேளாண் நிரல் திருவிழாவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் மானிய திட்டம்
இந்த ஹேக்கத்தான் நிகழ்வில், வணிக ரீதியில் பயனளிக்கும் வகையில் விவசாயப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய `ஸ்டார்ட்அப்'களைத் தேர்ந்தெடுத்து அதற்கு தமிழக அரசுசார்பில் வெகுமதி அளிக்க்கப்படும். மேலும் இந்த ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் நிதியுதவி அளிக்கப்படும்.

இந்த ஹேக்கத்தானில் வெற்றி பெறுபவர்கள் StartupTN, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பிற அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்.
முக்கியமாக எதிர்பார்க்கப்படும் தீர்வுகள்...
ஹேக்கத்தான் மூலம் அடையாளம் காணப்பட்ட, விவசாயத் துறையில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் நான்கு தீர்வுகள்:
● பனை மரம் ஏறுவதற்கு தேவையான இயந்திரக் கருவிகள்
● மரவள்ளி கிழங்கு அறுவடை மற்றும் மண் நீக்கி சுத்தம் செய்வதற்கான கருவிகள் (ஒருங்கமைந்த அல்லது தனித்தனி கருவிகள்)
● வேளாண் பயிர்களை சந்தைபடுத்துவதற்கு முன்பான தர பரிசோதனைக்காக ஒவ்வொரு முறையும் ஆய்வகத்திற்கு செல்லும் நேரத்தினை குறைக்கும் விதமாக விவசாய நிலத்திலோ அல்லது வணிகம் பரிவர்த்தனை நடக்கும் இடத்திலோ பயிர்தர பரிசோதனை செய்வதற்கான புத்தாக்க தீர்வுகள்
● உணவு மற்றும் வேளாண் பயிர்கள் விரைவில் கெட்டுப்போகாத வண்ணம் அதன் ஆயுளை (Shelf life) அதிகரிக்க உதவும் புத்தாக்க தீர்வுகள் இது சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வைத்திருக்கும் புத்தொழில் நிறுவனங்கள், புத்தொழில் ஆர்வலர்கள், மாணாக்கர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம்.

மேலும், இது குறித்தானவிரிவான தகவல்களை அறிந்து கொள்ள www.startuptn.in இணைய தளத்தினை பார்வையிடலாம். ஸ்டார்ட அப் நிறுவனங்கள் தங்களது புத்தாக்க தீர்வுகளை நவம்பர் 25, 2022 மாலை 5.00 மணிக்கு முன்னதாக இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த வல்லுநர் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு முதற்கட்டமாக டிசம்பர் 2022 முதல் வாரத்தில் நடைபெறும் பயிற்சிமுகாமில் பங்கேற்ப்பார்கள்.
அதன் பின்னர் டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்வில் இவர்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தொடர்ந்து தீர்வுகளை வணிக ரீதியில் பயனளிக்கும் வகையில் நடைமுறைபடுத்துவதற்கான முதலீட்டு உதவி, வழிகாட்டுதல் என அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.