
உணவு
நாட்டின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுச் சந்தையில் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காகக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ‘‘எங்களிடம் உலக நாடுகளுக்கே உணவு கொடுக்கிற அளவுக்குத் தானியங்கள் கொட்டிக்கிடக்கிறது. உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அனுமதி கிடைத்த அடுத்த நாள், உலக நாடுகளுக்கு உணவுத் தானியங்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துவிடுவோம்’ இது நமது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி கொடுத்த வாக்குறுதி.
தொடர்ந்து, கோதுமை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழுவையும் அறிவித்தது மத்திய அரசு. அந்தக் குழுவினர், மொராக்கோ, துனிசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், அல்ஜீரியா, லெபனான் மற்றும் துருக்கி நாடுகளுக்குச் சென்று, கோதுமை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைக் கண்டுபிடித்து வரும் என்ற அறிவிப்பும் வெளியானது.

அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாள், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. ஏன் இத்தனை குளறுபடி? ‘முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு’ என எதிர்க்கட்சிகள் அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பது, கோதுமை விஷயத்தில் உறுதியாகியிருக்கிறது.
இந்தத் தடை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் லாபம் தடுக்கப்படுகிறது. இந்தத் தடையால் பலனடையப் போவது வியாபாரிகள்தான்’ எனக் குற்றம்சாட்டுகிறார்கள் கோதுமை விவசாயிகள்.

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, இந்திய கோதுமைக்குச் சர்வதேசச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. என்றைக்கும் இல்லாத திருநாளாக, இத்தனை ஆண்டுகளில் தற்போதுதான், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு 2,015 ரூபாயை விட அதிக விலை கோதுமைக்குக் கிடைக்கிறது. உதாரணமாக, விதர்பாவில் ஒரு குவின்டாலுக்கு 2,500 ரூபாய் கிடைத்திருக்கிறது. ஆனால், தடை காரணமாக இனி, அதிக விலை விவசாயிகளுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.
என்ன சொல்கிறது அரசு?

மத்திய அரசிடம் தற்போது 20 மில்லியன் டன் கோதுமைதான் இருப்பு உள்ளது. அதனைப் பொது விநியோக திட்டத்தில் தொடர்ந்து வழங்க வேண்டியிருக்கிறது. அதோடு, வடமாநிலங்களில் இந்த ஆண்டுக் கோதுமை விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் தான் மத்திய அரசு கோதுமைக்குத் தடை விதித்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.