ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

கத்திரிக்காய் காய்ப்புழு தூது விடு, கவர்ந்து விடு...!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

வழிகாட்டும் வெளிநாட்டு விவசாயம் - 9

த்திரியில் காய்ப் புழுவை ஒழிக்க வேண்டித்தான் மரபணு மாற்றப் பட்ட கத்திரிரகங்கள் சமீப காலங்களில் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தி, கூட்டம் கூட்டமாக ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், வங்கதேசத்தில் பரவலாக அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு தினம்தோறுமோ, ஒருநாள் விட்டு ஒருநாளோ கத்திரியில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய உழவர்கள், அதை மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே என வெகுவாகக் குறைத்தனர். இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமானது?

கத்திரிக்காய். நமது உணவில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு காய். கத்திரிக்காய் எங்கு உருவானது என்பதில் இன்றளவும் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து கிடையாது. ஆரம்பத்தில் கத்திரிக்காய் தெற்காசியாவிலும் கிழக்காசியாவிலும் உருவாகி இருக்கலாம் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆய்வொன்று கத்திரிக்காய் ஆப்பிரிக்காவில் உருவானது என்பதற்குப் பல்வேறு வகையான அறிவியல்பூர்வமான சான்றுகளைக் காட்டியுள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் பல்வேறு வகையான ‘ஆப்ரிக்கக் கத்திரிக்காய்கள்’ பயிரிடப்படுகின்றன. ஆனால், நம்மூரில் விளையும் கத்திரிக்காய்கள் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 46 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. இதில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்திரிக்காய்கள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே விளைகின்றன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா?

வங்கதேசத்தின் ஜெஸ்ஸூர் பகுதியில் இருக்கும் கத்திரி வயல்கள். இனக்கவர்ச்சிப் பொறிகள் இல்லாத வயல்களே இங்கு இருக்காது
வங்கதேசத்தின் ஜெஸ்ஸூர் பகுதியில் இருக்கும் கத்திரி வயல்கள். இனக்கவர்ச்சிப் பொறிகள் இல்லாத வயல்களே இங்கு இருக்காது



கத்திரிக்காயின் வில்லன்

ஆசியக் கண்டத்தில் கத்திரியில் காய்ப்புழு தீராத தலைவலி. சொல்லப்போனால், காய்ப்புழுவின் தாக்கம் இல்லாமல் கத்திரிச் சாகுபடி செய்ய முடியாது என்கிற சூழலே ஒருகட்டத்தில் நிலவியது. இதற்கு ஒரு மிக முக்கியக் காரணம் உள்ளது. தக்காளியின் காய்ப்புழு, வெள்ளை ஈக்கள், அசுவினி, இலைப்பேன் அல்லது செம்பேன் போன்ற பூச்சிகள் எல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட பயறுவகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் எனப் பல்வேறுபட்ட செடிகளைத் தாக்கு கின்றன. ஆனால், கத்திரிக் காய்ப்புழு அப்படி அல்ல. பெரும்பாலான சமயங்களில் அவற்றின் பிரதான உணவு கத்திரிக்காய் மட்டுமே. மிக மிக அரிதாக, அதுவும் கத்திரிக்காய் ரகங்களே கண்ணுக்குத் தென்படாத இடங்களில், வேறு வழியின்றி உருளைக்கிழங்கு, மணத்தக்காளி, சுண்டைக்காய், கண்டங்கத்திரி போன்ற கத்திரிக்காயின் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களைத் தாக்கும். ஆனால், இந்தியத் துணைக்கண்டத்தில் வருடம் முழுவதும், ஏதேனும் ஒரு பகுதியில் கத்திரிக்காய் பயிரிடப்படுவதால், காய்ப்புழுக்கள் மற்ற பயிரினங்களைக் கண்டுகொள்ளாமல், கத்திரிச் செடிகளிலேயே உண்டு திளைத்திருக்கும்.

கத்திரியின் வளர் தண்டுகளிலும், காய்களிலும் சேதம் உண்டாக்கும் காய்ப் புழுக்கள்
கத்திரியின் வளர் தண்டுகளிலும், காய்களிலும் சேதம் உண்டாக்கும் காய்ப் புழுக்கள்
கத்திரியின் வளர் தண்டுகளிலும், காய்களிலும் சேதம் உண்டாக்கும் காய்ப் புழுக்கள்
கத்திரியின் வளர் தண்டுகளிலும், காய்களிலும் சேதம் உண்டாக்கும் காய்ப் புழுக்கள்



தண்டுகளின் நடுப்பக்கமே வீடு

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லி ஆக வேண்டும். நாம் அவற்றை, ‘காய்’ப்புழுக்கள் என்று சொன்னாலும், அவை காய்களை மட்டுமே சேதப் படுத்துவதில்லை. வளரும் செடிகளையும் அவை தாக்கும். நாற்றுகளை நட்ட பிறகு, இரண்டு மூன்று வாரங்களிலேயே இந்தக் காய்ப்புழுக்களின் தாக்குதலை நாம் பார்க்கலாம். இந்தப் புழுக்கள் பெரும்பாலும் குருத்துப் பகுதிகளையே தாக்கும். செடியின் நுனிப்பகுதிகளில் இருக்கும் தண்டுகளில் மிகச்சிறிய துளைகளை உருவாக்கி உள்நுழையும் புழுக்கள், வளரும் தண்டுகளின் நடுப்பக்க மாக உண்ண ஆரம்பித்துவிடும். எனவே, வளரும் நுனிகளுக்குச் செல்லும் நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தடைப்படுகின்றன. அதன் காரணமாக, குருத்துப் பகுதிகள் ஓரிரு நாள்களில் வாட ஆரம்பிக்கும். நாளடைவில், அவை காய்ந்துவிடுவதால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால், காய்ந்த பகுதிகளுக்குக் கீழுள்ள கணுக்கள் மற்றும் கிளைகளில் இருந்து மேலும் மேலும் பக்கவாட்டுக் கிளைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. எனவே, பாதிக்கப்பட்ட செடிகள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருப்பதால், அவற்றில் பூக்கள் உருவாவது காலதாமதம் ஆகின்றது. அது மட்டுமன்றி, புதிதாக உருவாகும் பக்கவாட்டுக் கிளை களையும் காய்ப்புழுக்கள் தாக்க ஆரம்பிப்பதால், செடிகளில் பாதிப்பு மென்மேலும் அதிகரிக்கிறது. ஒரு வழியாகச் செடிகளில் மலர்கள் உருவாகி, பிஞ்சுகள் வளர ஆரம்பிக்கும்போது காய்ப்புழுக்கள் குருத்துகளை விட்டு விட்டு பிஞ்சுகளையும் காய்களையும் பிரதானமாகத் தாக்க ஆரம்பிக்கின்றன.

வளர் தண்டுகளில் தென்படும் ஆரம்பகட்ட சேதம்
வளர் தண்டுகளில் தென்படும் ஆரம்பகட்ட சேதம்
வளர் தண்டுகளில் தென்படும் ஆரம்பகட்ட சேதம்
வளர் தண்டுகளில் தென்படும் ஆரம்பகட்ட சேதம்



ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்

காய்களின் மேற்புறத்தில் சிறிய துளையிட்டு உள்ளே நுழையும் புழுக்கள், உடனடியாக அவை நுழைந்த துவாரத்தைத் தங்களது கழிவுகளைக் கொண்டே அடைத்துவிடுகின்றன. எனவே இந்தப் புழுக்களைத் தாக்கும் இயற்கை எதிரிகள் அவற்றைத் தேடி, உள்ளே நுழைய முடியாமல் போய்விடும். இப்போது காயின் உள்ளிருக்கும் புழுக்கள், வயிறு புடைக்க உண்டு, களித்து (கழித்து) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும். அவை கூட்டுப்புழுப் பருவத்தை எட்டும்போது, காயின் மீது மேலும் ஒரு துளையிட்டு வெளியேறிவிடும். இந்தத் துளைகள் திறந்த வண்ணமே இருக்கும். அதை வைத்து, அந்தக் காயினுள் புழுக்கள் இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். காயினுள் புழுக்கள் விளைவித்த சேதம் ஒருபுறம் என்றால், அவற்றின் கழிவுகளின் மீது வளரும் நுண்ணுயிரிகள் உருவாக்கும் சேதம் மறுபுறம். எனவே சேதமடைந்த காய்கள் கொஞ்சமும் பயனற்று, முழுவதும் வீணாகின்றன. காய்ப்புழுக்களின் சேதத்தினை, ஆரம்பகட்டத்திலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால், கிட்டத்தட்ட முக்கால் பங்கு விளைச்சலை நாம் இழக்க நேரிடும். எனவே, கத்திரி விவசாயிகள், அதிகளவு பூச்சிக்கொல்லிகளின் உதவியினை நாட ஆரம்பித்தனர்.

வளர் தண்டுகளில் தென்படும் இறுதிகட்ட சேதம்
வளர் தண்டுகளில் தென்படும் இறுதிகட்ட சேதம்



7 மாதங்கள்... 140 முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா மட்டுமன்றி வங்கதேசமும் கத்திரி விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு. வங்கதேசத்தில் உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கத்திரிக்காய் ஒன்றேகால் லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. அங்கும் காய்ப்புழுவின் ஆதிக்கம் மிக அதிகம். வங்காளிகளின் உணவில் கத்திரிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. அவர்கள் ஒரு நாளைக்கு, ஒரு வேளையாவது உணவில் கத்திரிக்காய் சேர்த்துக் கொள்வார்கள். எனவே, அங்கு கத்திரிக்காய்க்கு ஆண்டு முழுவதுமே நல்ல விலை கிடைக்கும். ஆக, ஆண்டு முழுவதும் கத்திரி விவசாயம் சிறப்பாக நடைபெறும். ஆனால், இதுவே காய்ப்புழுக்களுக்குக் கொண்டாட்டமான சூழலை உருவாக்கிவிட்டது. ஆம், தங்கு தடையின்றி அவற்றிற்கு உணவு கிடைத்தால் கொண்டாட்டம் இல்லையா? எனவே, காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த வங்கதேசத்து விவசாயிகளும், பூச்சிக்கொல்லிகளை நாட ஆரம்பித்தனர். எந்தளவுக்கு அவர்கள் பூச்சிக்கொல்லிகளைச் சார்ந்திருந்தனர் தெரியுமா? சுமார் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரையிலுமான பருவத்தில், அதிகபட்சமாக 140 முறை பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தனர். அப்படியானால், ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு ஒருமுறை அவர்கள் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி வந்தனர்.

காய்களில் சேதம்
காய்களில் சேதம்
காய்களில் சேதம்
காய்களில் சேதம்



காலையில் சந்தைக்குக் கத்திரிக்காய்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும் வங்கதேச விவசாயிகள், பூச்சிக்கொல்லி களை வாங்கிக் கொண்டுதான் வீடு திரும்புவார்கள். அன்றே அவற்றைத் தெளித்து விடுவார்கள். அதற்கு அடுத்த நாளோ, இல்லை இரண்டு நாள்கள் கழித்தோ மீண்டும் கத்திரிக்காய்களை அறுவடை செய்து, சந்தைக்கு எடுத்துச் செல்லும் கத்திரிக்காய்களில் எவ்வளவு நஞ்சு இருக்கும்; அவை, நுகர்வோரின் உணவில் எந்தளவுக்கு விஷத்தினைக் கலக்கும். எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடியாக ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வேளாண் விஞ்ஞானிகள் இருந்தனர்.

புனல் பொறிகள்
புனல் பொறிகள்
புனல் பொறிகள்
புனல் பொறிகள்



தூதுவேதி குப்பி

பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றுத் தீர்வைத் தேடிக் கொண்டிருந்த விஞ்ஞானிகளின் கண்களில், யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு கண்டுபிடிப்பு தென்பட்டது. ஆம், கத்திரிக் காய்ப்புழுவின் இனப்பெருக்கத் தூதுவேதி (Sex Pheromone) 1987-ம் ஆண்டே சீன விஞ்ஞானிகளாலும், அதற்கு அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாலும் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது. ஆனால், அடுத்த 10 - 12 ஆண்டுகளுக்கு அதை யாருமே பரிசோதனை செய்யவோ, பயன் பாட்டுக்குக் கொண்டு வரவோ முயலவேயில்லை. எனவே, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், சர்வதேச காய்கறி ஆராய்ச்சி மையமும், இங்கிலாந்து விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து ஒரு புதிய ஆய்வுத் திட்டத்தைத் தெற்காசியாவில் முன்னெடுத்தனர். இனப்பெருக்கத் தூதுவேதிகளைக் குப்பிகளில் அடைத்து, அவற்றைப் பொறிகளுக்குள் வைத்து, ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர இயலுமா? என்று ஆய்வு செய்தனர்.

டெல்டா பொறிகள்
டெல்டா பொறிகள்
சிறகு வடிவ பொறிகள்
சிறகு வடிவ பொறிகள்



ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பொறி

பல்வேறு வகையான பொறிகள் சந்தையில் கிடைத்தாலும், எந்த இடத்தில் எந்தப் பொறிகள் அதிக பலனைக் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். உதாரணத்துக்குக் குஜராத்தில் சிறகு வடிவ பொறிகள் (Winged traps) அதிக பூச்சிகளைக் கவர்ந்தன. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் புனல் பொறிகள் (Funnel traps) அதிக பூச்சிகளைக் கவர்ந்தன. தென்னிந்தியாவிலோ நீர்ப் பொறிகள் (Water traps) அதிக பூச்சிகளைக் கவர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் முக்கோண வடிவிலான டெல்டா பொறிகளே (Delta traps) சிறந்து விளங்கின. இந்த இனக்கவர்ச்சிப் பொறிகள் பயிரின் மட்டத்திலோ, பயிரின் உயரத்தை விட அரையடி அதிகமாகவோ வைக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கரில் எத்தனை பொறிகள் வைக்கப்பட வேண்டும் என்பது, குப்பிகளில் உள்ள இனப்பெருக்கத் தூதுவேதிகளின் செறிவைப் பொறுத்தது. இந்த ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு, நான்கு நாடுகளிலும் பல்வேறு கட்ட வயல்வெளி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கத்திரிக்காய்ப்புழுவின் சேதத்தை மிக அதிக மாகக் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

நீர்ப்பொறிகள்
நீர்ப்பொறிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளை நோக்கி ஈர்க்கப்படும் ஆண் அந்துப் பூச்சிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளை நோக்கி ஈர்க்கப்படும் ஆண் அந்துப் பூச்சிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளில் சிக்குண்டு மாண்டு போன ஆண் அந்துப் பூச்சிகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளில் சிக்குண்டு மாண்டு போன ஆண் அந்துப் பூச்சிகள்



இப்போது உங்களுக்கு இன்னொரு சந்தேகம் எழலாம். ‘நாம் பொறிகளில் பிடிக்கும் ஆண் அந்துப் பூச்சிகள் ஏற்கெனவே கலவியில் ஈடுபட்டவையாக இருந்தால், அதனால் நமக்குப் பயன் என்ன?’ மற்ற பூச்சிகளைப்போல அல்லாமல், கத்திரிக்காய் புழுக்களின் ஆண் பூச்சிகள் இயல்பாகவே ஒரே ஒருமுறை மட்டும்தான் கலவியில் ஈடுபடும். அப்படிக் கலவியில் ஈடுபட்டுவிட்டால், அதற்குப் பிறகு, அவை பெண் பூச்சிகள் விடுக்கும் இனப்பெருக்கத் தூதுவேதிகளைக் கண்டுகொள்ளவே செய்யாது.

ஆகவே, நாம் இனக்கவர்ச்சிப் பொறிகளில் பிடிக்கும் அத்தனை ஆண் அந்துப் பூச்சிகளுமே கலவியில் ஈடுபடாதவை என்பது உறுதி. அதன் விளைவாக, பெண் பூச்சிகள் கருவுறாத முட்டைகளையே வைக்கும். ஆக, அடுத்தடுத்த சந்ததிகள் உருவாகாமல் கத்திரிக் காய்ப்புழுக் களின் எண்ணிக்கை படிப்படியாகச் சரிந்து விடும். ஆனால், நான் முன்பு கூறியபடி, ஒரு பகுதியில் கத்திரி பயிரிட்டுள்ள அத்தனை விவசாயிகளும் இந்த இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். இந்தக் காய்ப்புழுக்கள் கத்திரியைத் தவிர வேறு பயிர்களைத் தாக்காது என்பதால், கத்திரி விவசாயிகள் மட்டும், இந்தப் பொறி களைப் பயன்படுத்தினாலே போதுமானது.

கைகொடுக்கும் வேப்பங்கொட்டை கரைசல்

சரி, இந்த இனக்கவர்ச்சிப் பொறிகள் மட்டுமே நமக்கு முழுமையான தீர்வைக் கொடுத்துவிடுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கத்திரியின் குருத்துப் பகுதியிலோ, காய்களிலோ சேதம் கொஞ்சமாகத் தென்பட ஆரம்பிக்கும்போதே, பாதிக்கப்பட்ட குருத்துக்களையும் காய்களையும் சேகரித்து, குழிதோண்டி மண்ணில் புதைத்து விட வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும். மாறாக, வரப்போரங்களில் குவித்து வைத்தால் அவற்றினுள் இருக்கும் புழுக்களும், கூட்டுப் புழுக்களும் வளர்ந்து வெளியில் வந்து புதிய தாக்குதலைத் தொடரவே செய்யும். அத்துடன் ஓரிரண்டு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்தால், பெண் அந்துப் பூச்சிகள் முட்டை வைப்பதையும், இளம்புழுக்கள் குருத்துக்கள் மற்றும் காய்களில் துளையிடுவதை வெகுவாகக் குறைக்க இயலும்.

- வளரும்