மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை! - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை!

வெட்பாலை
பிரீமியம் ஸ்டோரி
News
வெட்பாலை

மருத்துவம் 18 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!

‘பாலை’ என்னும் அடைமொழியுடன் முடியும் தாவரங்களான வெட்பாலை, ஏழிலைப் பாலை, குடசப்பாலை (குளப்பாலை), முக்காம்பாலை...

ஆகியவற்றின் பட்டியல் நீளமானது. மேலே குறிப்பிட்டவை நான்கும் அதிகமான மருத்துவ குணங்களுடைய மரங்கள்.

வெட்பாலை
வெட்பாலை

வெட்பாலை

இது தமிழகமெங்கும் காணப்படும் மரம். இதன் இலையை ஒடித்தால் நிறைய பால் வரும். சிற்றூர்களில் இதை, ‘பாலாட்டாங் கொழை’ என்று சொல்வதுண்டு. மலைக்காடுகள் தொடங்கும் இடங்களில் இவை அதிகமாகக் காணப்படும். மற்ற இடங்களிலும் பரவலாகப் புதர்களாகக் காணப்படும் குறுமரம் இது. அப்படியே வளரவிட்டால் மிக உயரமாக வளரும். என் அனுபவத்தில் 50 அடி உயர மரங்களைக்கூடப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதனுடைய கட்டை மிகவும் வலுவற்றது. கடைசல் பொம்மைகள் செய்யப் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்ப, பல்வலி நீங்கும். ஆனால், இது நிரந்தரத் தீர்வல்ல. இதன் இலைகளைக் கிள்ளினால் வரும் பாலை, ஓரிரு துளிகள் பாலில்விட, பாலிலுள்ள வெண்ணெய் தனியாகப் பிரிந்துவிடும்.

குடசப்பாலை
குடசப்பாலை

இதன் பட்டை பேதியை நிறுத்தும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. 1970-ம் ஆண்டு வரை எழுதப்பட்டுள்ள சித்த மருத்துவ நூல்களில் இந்த மூலிகையைப் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை.

திருச்சி மாவட்டத்தில் வாழும் இருளர் இன மக்களிடமிருந்து ஒரு மருந்துத் தயாரிப்பு முறை பெறப்பட்டு, இன்று சித்த மருத்துவர்களிடையே மிகவும் பயன்பட்டுவருகிறது.

அதுதான், ‘வெட்பாலைத் தைலம்.’ இதன் தயாரிப்பு மிகவும் எளிதானது. அடுப்பின் அருகிலேயே செல்லாமல் ‘சூரியப் புடம்’ என்று சித்த மருத்துவம் கூறும் முறையில் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது. சூரியனின் வெம்மையான வெயிலால் மட்டுமே இந்த மருந்தைத் தயார் செய்ய முடியும். ‘காளாஞ்சகப்படை’ என்று சித்த மருத்துவம் வகைப்படுத்தியிருக்கும் ‘சொரியாசிஸ்’ என்ற மிகவும் மோசமான தோல் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்து.

பலவிதமான ஆங்கில மேற்பூச்சு மருந்துகள் (Oinments) போட்டும் கட்டுப்படாத சொரியாசிஸ் தோல்படைகள், இந்த எளிய தைலத்தில் அற்புதமாகக் குணமடைகிறன்றன.

வெட்பாலைத் தைலம் தயாரிப்பு முறை

ஒரு பெரிய அகலமான சில்வர் தாம்பூலத்தட்டு ஒன்றை எடுத்து, அதில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த எண்ணெயில் மூழ்கும் அளவுக்கு வெட்பாலை இலைகளைப் பரப்ப வேண்டும்.

ஏழிலைப் பாலை
ஏழிலைப் பாலை

பிறகு அதை அப்படியே நல்ல வெயிலில் பங்குனி, சித்திரை (மார்ச், ஏப்ரல், மே) மாதங்களில் வைக்க வேண்டும். மாலையில் அதை அப்படியே எடுத்து அறைக்குள் வைக்க வேண்டும். இரவில் பெய்யும் பனியில் வைத்துவிடக் கூடாது. இவ்வாறாக மூன்று முதல் ஐந்து நாள்கள் வைத்திருக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் கருநீல நிறமும் (வயலெட்), இளஞ்சிவப்பு நிறமும் கலந்த நிறத்தில் மாறிவிடும். இதுதான் வெட்பாலைத் தைலம். பின்னர் இலைகளை அப்படியே அரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். கண்டிப்பாக இலைகளைப் பிழியக் கூடாது. சரியான முறையில் தயாரிக்கப்பட்டால் மூன்று மாதங்கள்வரைகூடக் கெடாமலிருக்கும்.

உலக்கைப்பாலை
உலக்கைப்பாலை

இந்தத் தைலத்தைச் சொரியாசிஸுக்கு மட்டுமல்லாமல் கரப்பான், ஊறல், சிரங்கு முதலான அனைத்து தோல்நோய்களுக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்பூச்சாகப் பூசிவர நல்ல குணம் கிடைக்கும். மிகவும் தீவிரமான நிலைகளில் 2-3 மி.லி அளவு தைலத்தை பால், காபி, தேநீரில் கலந்தும் குடித்துவரலாம். தலையில் சொரியாசிஸ் பாதிப்புகள் இருந்தாலும், தலைப்பூச்சுத் தைலமாக இதைப் பூசிவரலாம்.

நல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை! - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை!

வெட்பாலை மரங்கள் மொத்தமாக வெண்ணிறத்தில் பூத்துக் குலுங்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கொல்லிமலையில் தரை மட்டத்திலிருந்து செம்மேடு வரை மலை முழுவதும் அதிகமான வெட்பாலை மரங்கள் உள்ளன. இவை பூக்கும் காலத்தை ’கொல்லிமலையின் தேன் காலம்’ என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு நிறைய தேன் கிடைக்கும். தேன்கூடு பெட்டி வைத்திருப்பவர்கள் தங்களின் இருப்பிடத்தைச் சுற்றி வெட்பாலை மரங்களை நட்டு வளர்ப்பது மிகவும் பயனுள்ளது. இவை பூத்த பிறகு காய்க்கத் தொடங்கும். இரண்டிரண்டு காய்களாக முதலில் பச்சை நிறத்திலும், முதிர முதிரக் கருமை நிறத்திலும் காணப்படும். காய்களினுள்ளே பஞ்சுடன்கூடிய விதைகள் இருக்கும். நன்கு முதிர்ந்த பிறகு, காய்ந்து, பஞ்சுடன் விதைகள் காற்றில் பரவத் தொடங்கும். இதன் விதைகளை ‘அரிசி’ என்றே மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சித்த மருத்துவத்தில் வெட்பாலை அரிசி, விளாவரிசி, கார்போக அரிசி, ஓமவரிசி, உருளையரிசி, அருணாவரிசியென மொத்தம் ஆறு வகையான அரிசிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் வெட்பாலை அரிசி பேதியை நிறுத்தும் மருந்துகளிலும், வயிற்றுப் பொருமல் தொடர்பான மருந்துகளிலும் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இது வடமொழி மற்றும் மலையாளத்தில் ‘தந்தபாலா’ என்று அழைக்கப்படுகிறது.

குடசப்பாலை

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களில் காணப்படும் குறுமரம் இது. சேர்வராயன் மலைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதனுடைய தாவரவியல் பெயரிலேயே கிராணிக் கழிச்சலைக் குறிக்கும் `டிசன்ட்ரி’ (Dysentry) என்ற வார்த்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. கபிலரின் பாட்டில் குறிப்பிடப்படும் ‘வான்பூகுடசம்’ என்ற சொற்றொடர் குடசப்பாலையைக் குறிப்பது. இதனுடைய பட்டையை மருந்துக்குச் சேர்ப்பதால், இந்தத் தாவரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இதனுடைய பட்டை கிடைப்பதில்லை என்பதால், வெட்பாலைப் பட்டை இதற்கு மாற்றாக இன்று பயன்படுத்தப்படுகிறது. `அமீபிக் சீதபேதியைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு மட்டுமே இருக்கிறது’ என அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை! - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை!

50 கிராம் குடசப்பாலைப் பட்டையைப் பஞ்சுபோல இடித்து, ஒரு மண் பாத்திரத்தில் இட்டு, அதில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதை அடுப்பிலேற்றி 350 மி.லி-யாக வற்றவைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் சூடாக வைத்துக்கொண்டு, 50 மி.லி எடுத்து தினமும் மூன்று வேளை குடித்துவர, நாள்பட்ட சீதபேதி, அதனால் ஏற்பட்ட உடல் சோர்வு முதலியவை நீங்கும். இதே பட்டைச் சூரணம் 1 – 2 கிராம் எடுத்து, சர்க்கரையுடன் சேர்த்து மூன்று வேளை தினந்தோறும் உண்டுவர சீதபேதி, ரத்தபேதி மற்றும் அனைத்துவிதமான குடல் கிருமிகளும் குணமாகும். இந்தப் பக்குவங்களைச் செய்ய இயலாதவர்களுக்கு, ‘குடஜா’ என்ற பெயரில் மாத்திரைகளாகவும், ‘குடஜாரிஷ்டம்’ என்ற பெயரில் மருந்துகளாகவும் கிடைக்கின்றன. குடஜா மாத்திரை என்றால் இரண்டு மாத்திரைகள் வீதம் மூன்று வேளைகளும், குடஜாரிஷ்டம் என்றால் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 30 மி.லி சாப்பிட்டுவர நாள்பட்ட கிராணி (Amoebiasis) குணமாகும்.

ஏழிலைப் பாலை

இது ஏழு ஏழு இலைகளாகக் காணப்படும் காட்டு மரம். தற்போது இந்த மரங்கள் சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மரத்தின் இலையை லேசாகக் கிள்ளினாலும், இதன் பட்டையைத் தட்டினாலும் பால் வரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., இஞ்சிச்சாறு 15 மி.லி கலந்து பிரசவித்த தாய்மார்களுக்குக் கொடுக்க, கர்ப்பப்பை அழுக்குகளை நன்றாக வெளியேற்றும். இதன் பட்டைக்கு, மலேரியாவை குணமாக்கும் கொய்னா மூலிகைக்கு நிகரான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, இதன் பட்டை அனைத்து காய்ச்சல்களையும் குணமாக்கும் சர்வசுரக் குடிநீரில் சேர்க்கப்படுகிறது.

தீம்பாலை /உலக்கைப்பாலை /திருப்பாலை

இதன் பழம் உண்பதற்குச் சுவையாக இருக்கும். உடலுக்கும் வலிமையைத் தரும்.

சப்போட்டாப் பழ மரக்கன்று இதனுடன் சேர்த்து ஒட்டுக் கட்டப்படுகிறது.

இதைக் கொண்டு உலக்கைகள் தயார் செய்யப்பட்டதால் இதற்கு ‘உலக்கைப் பாலை’ என்ற பெயரும் உண்டு.

- பாலைநிலத் தாவரங்கள் அடுத்த இதழிலும் தொடரும்.