"பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி" திட்டமானது 2019 -ம் ஆண்டு பிப்ரவரி முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்தில் 13 -வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இத்தவணைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
வேளாண்மை உழவர் நலத்துறை நடவடிக்கை!
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தனர். இவர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி, வீடுவீடாக சென்று ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்வதன் அவசியம் குறித்து, தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அறிவுறுத்தி வந்தது. இத்திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யுமாறு வலியுறுத்தியது.
இதுவரை, 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார் எண் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்திடும் பணி வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் ஆதார் எண்ணை எவ்வாறு உறுதி செய்யலாம் ?
பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார்எண்ணை (e-KYC) உறுதி செய்யாத பயனாளிகள் இருமுறைகளில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். அருகிலுள்ள e பொது சேவை மையத்திற்குச் சென்று, உங்கள் கைரேகையை பதிவு செய்தோ அல்லது இருப்பிடத்திலிருந்தபடியே, பி.எம்.கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க எண்ணை (OTP) உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று தங்களது வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பி.எம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்று வேளாண்மை-உழவர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு தற்போது பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 8000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் தொடரில், பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 வழங்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.