வேளாண் தொழில்முனைவோராக்குதல் திட்டத்தின்கீழ் வேளாண் பட்டப் படிப்பு பயின்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது,
பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த, தகுதியுடைய பயனாளிகளுக்கு வேளாண் சார்ந்த சுய தொழில் தொடங்குவதற்கு 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மானியம் பெற தேவையான தகுதி
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த நிதியுதவியைப் பெற முடியும்.
வங்கி மூலம் கடன் பெறும் தொழில்முனைவோர் பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுயதொழில்கள் தொடங்க வேண்டும்.
நிலம் மற்றும் தளவாடங்கள் உள்கட்டமைப்புக்கான செலவுகளைத் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.

விண்ணபிக்கத் தேவையான ஆவணங்கள்:
பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 சான்றிதழ்கள்,
பட்டப் படிப்பு சான்றிதழ்,
ஆதார் எண்,
குடும்ப அட்டை,
நாம் தேர்வு செய்துள்ள ``வேளாண் தொழில் சார்ந்த சுயதொழில்” தொடர்பான விரிவான திட்ட அறிக்கை,
வங்கிக் கணக்கு விவரம்
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.