பாலாற்று பரிதாபம்... 'ஆந்திராவில் 17 தடுப்பணைகள்... தமிழகத்தில் இரண்டே இரண்டுதான்!'

நாட்டு நடப்பு
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய நாள்களில் `உழவர் களஞ்சியம் – 2022’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. வி.ஐ.டி பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நபார்டு, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.
கண்காட்சியில் வேளாண் கருவிகள், நீர்பாசன சாதனங்கள், விதைகள், சிறுதானிய உணவு வகைகள், மூங்கில் கைவினைப் பொருள்கள் உள்பட இன்னும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. கருத்தரங்கில் வேளாண் வல்லுநர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், ‘‘நான் ஒரு வக்கீல், பல்கலைக்கழக வேந்தராகவும் இருக்கிறேன். எம்.எல்.ஏ, அமைச்சர் பொறுப்புகளையும் கூட பார்த்தவன். இருந்த போதிலும் அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என்னுடைய தந்தை தேங்காயை விற்று என்னை படிக்க வைத்தார். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வார விடுமுறை உண்டு. ஆனால் விவசாயிகளுக்கு விடுமுறை என்பதே கிடையாது ஓய்வில்லாமல் உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய மரியாதையையும் சமூக அந்தஸ்தையும் வழங்க வேண்டும். விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது ‘‘தமிழகத்தில் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் முறையாக குடிமராமத்து செய்யப்படுவதில்லை. அவற்றை தமிழக அரசு முறையாக பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் வெள்ளநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழக பாலாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரண்டு தடுப்பணைகள் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 17 தடுப்பணைகள் கட்டப்பட்டன’’ என்றார். இவ்விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட இன்னும் பலர் உரையாற்றினார்கள்.