இதைப் பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ள 'கிடாத்தலைமேடு' சேதுராமன் என்பவரை சந்தித்தேன். வயல், வீடு, கொல்லை என்றே வாழ்பவர் அவர். அவரிடம் நேரடி அனுபவம் பெற்றேன். இயற்கை விவசாயம் செய்து லாபம் பெற முடியும் என்பதை வார்த்தைகளால் உலகுக்குச் சொல்வதை விட, வாழ்ந்தே சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து நானே விவசாயத்தில் இறங்கினேன்’’ என்று சொல்லி, தன்னுடைய வயலில் நடக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு முழுவதும் அலைந்து திரிந்து... நிலத்தின் விலை, நீர்வளம், தொழிலாளர் வளம் என எல்லாம் ஒட்டுமொத்தமாக அமையும் இடமாக தேடியிருக்கிறார். மயிலாடுதுறை அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில் நகரிலிருந்து மேற்கே பத்தாவது கிலோ மீட்டரில் உள்ள மேலாநல்லூர் கிராமத்தைத் தேர்வு செய்திருக்கிறார். (நந்தனாரின் சொந்த ஊர் இதுதான் பார்க்க பெட்டிச் செய்தி) இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயத்தை ஆரம்பித்தவர், இப்போது பத்து ஏக்கராக வளர்த்திருக்கிறார். முழுக்க இயற்கை விவசாயம்தான். வயலில் விளையும் பொருட்களைக் கொண்டே 'கம்போஸ்ட்' உரம் தயாரித்து வயலுக்கு போடுகிறார். ஏக்கருக்கு 1,500 கிலோ வரை நெல்லில் மகசூல் செய்கிறாராம். பெரும்பாலும் பாரம்பரிய விதைகளையே தேடிபிடித்து பயிர் செய்கிறார். தானே அரிசியாக அரைத்து விற்பனை செய்கிறார். சென்னையில் இருக்கும் இவரின் நண்பர்கள் வீட்டு உலையில் கொதிப்பது... இவருடைய வயலில் விளைந்த அரிசிதான். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுக்க விவசாயிகளைத் தேடிப்பிடித்து சந்தேகங்களுக்கு தெளிவு பெற்ற பாலாஜியை நோக்கி, இப்போது விவசாயிகள் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள் தங்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ள. ‘‘நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் பாதுகாப்பான உணவைத் தருகிறோம் என்கிறபோது ஏற்படுகிற திருப்தி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது கூட கிடைக்கவில்லை. இப்பவும் நான் விவசாயிகளுக்கு என்ன சொல்கிறேன் என்றால், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அதைவைத்து ஒரு குடும்பம் நிம்மதியாக நன்றாக வாழ முடியும். இயற்கை விவசாய முறையில் செலவில்லாம விவசாயம் செய்யவேண்டும்... அவ்வளவுதான். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி தொழில் நுட்பம் தேவைப்படாது. எல்லா மண்ணிலும் எல்லா பயிரும் பண்ண முடியும். எல்லாவற்றையும் மண்ணே பார்த்துக் கொள்ளும்’’ என்று சொல்லும் பாலாஜி, தன் மனைவி காயத்ரியை நினைத்துதான் நெகிழ்ந்து போகிறார். ''சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் பெரிய நகரத்தில வாழ்ந்தவர். மாதம் மாதம் ஒன்றரை லட்ச ரூபாயை செலவழித்து குடும்பம் நடத்தியவர். இப்போது என்னுடன் இந்தச் சின்ன கிராமத்தில் சின்ன வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவில் குடும்பத்தை நடத்துகிறார். அவங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுக்காமல் போயிருந்தால், ஏதோ ஒரு நாட்டில் எந்திரத்தனமாக வேலை பார்த்துக் கொண்டு, செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன். பொய்யில்லாத ஒரு வாழ்க்கை, கட்டுப்பாடில்லாத ஒரு சுதந்திரம், ஆரோக்யமான உடல்நலம், எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல அடித்தளம் என என்னால் வாழ முடிவதற்கு முக்கிய காரணமே காயத்ரிதான்'' என்று சொன்ன பாலாஜி, |