சு.உ.சவ்பாக்யதா
வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இதையடுத்து, அந்த ஏவுகணை ஜப்பானின் எல்லைக்குள் வரவில்லை என்பதை ஜப்பான் பிரதமர் Fumio Kishida தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஜனவரி மாதத்தில் சுமார் 12,000 ஊழியர்களைப் பணியிலிருந்து கூகுள் நீக்கியதையடுத்து, மேலும் அடுத்தகட்ட பணிநீக்கத்தை கூகுள் விரைவில் அறிவிக்கலாம் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் (The Wall Street Journal) ஒரு நேர்காணலில் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் பிபிசி-யுடனான ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது நிருபர், ட்விட்டரில் அதிகரித்துவரும் வெறுப்புக் கருத்துகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பினார். இது தொடர்பான விவாதத்தின்போது பிபிசி நிருபரை, எலான் மஸ்க் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Qin Gang, உஸ்பெகிஸ்தானில் சீனா பொருளாதாரரீதியாக முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தினார். மேலும், அந்த நாட்டிலிருந்து தரமுள்ள பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்வதாக அவர் கூறினார்.
ஆர்க்டரஸ் என அழைக்கப்படும், XBB.1.16, கொரோனா வேரியன்ட் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் புதிதாகப் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு கண்டறிந்திருக்கிறது. இது குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஜி 7 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக நிதியமைப்பின் பொருளாதாரத்தைப் பராமரிக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
ஆர்-21 எனப்படும் புதிய மலேரியா தடுப்பூசியை கானா (Ghana) நாடு அங்கீகரித்தது. இந்த வகை தடுப்பூசியைப் பரிசோதனை செய்து முடித்து, அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.
பிரேசில் அதிபர் லூலா சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். இது இரண்டு நாடுகளுக்கிடையே உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியின் கலாசார அமைச்சர் ஜென்னாரோ சாங்கியுலியானோ (Gennaro Sangiuliano), அந்த நாட்டிலுள்ள நினைவுச் சின்னங்களையோ, கலாசார தளங்களையோ சேதப்படுத்துவோரிடம் அபராதமாகக் குறைந்தபட்சம் 10,000 யூரோ வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.